Monday 19 August 2013

« பாரிஸ் தமிழ்த் திரைவிழா »


செய்திச் சரம் 14

« பாரிஸ் தமிழ்த் திரைவிழா »
புலம்பெயர் ஈழத் தமிழர்களின் முழுநீளத் திரைப்படங்களின் காட்சி மஞ்சரி

நீட்சியுறும் நான்காவது தசாப்தப் புலம்பெயர் ஈழத்தமிழர் பயணத்தின் வெண்திரைப் பதிவுத் தடமாக பாரீஸில் நிகழ்கிறது "பரிஸ் தமிழத்; திரைவிழா". 2013 ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய நாட்களில் பல்வேறு நாடுகளில் விரவிய புலம்பெயர் ஈழத் தமிழர்களின் திரைத்துறைக் கலைஞர்களின் ஏழு முழுநீளத் திரைப்படங்கள் காட்சியாகின்றன. இந்நிகழ்வு திரைக் கலைஞர்கள், திரை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், திரை இரசிகர்கள் ஒன்றுகூடும் சங்கமம் என்கிறார் இவ்வகையான நிகழ்வுகளை ஊக்குவிக்கும் திரைத்துறை ஈடுபாட்டாளர் பரா அவர்கள்.
எதிர்வரும் 23, 24, 25 ஆகிய நாட்களில் உறவு(கனடா), இனியவளே காத்திருப்பேன்(அவுஸ்திரேலியா), சில்லு(கனடா), இருமுகம்(சுவிஸ்), சகாராப் பூக்கள்(கனடா), என்னுள் என்ன மாற்றமோ(யாழ்ப்பாணம்), STAR 67(கனடா) ஆகிய ஏழு முழு நீளத் திரைப்படங்கள் தொடர்ந்த காட்சிகளாக காண்பிக்கப்படவுள்ளன. நிகழ்வின் நிறைவில் படைப்பாளிகள், பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் கருத்துரை அரங்கும் ஏற்பாடாகியுள்ளது.
பாரீஸின் 'குட்டி யாழ்ப்பாணம்" எனவாகவும், 'குட்டி இந்தியா" எனவாகவும் 'தமிழர்களின் சங்கமிப்பு மையம்" எனவாகவும் ஏனைய பல்லினத்தவர்களால் சுட்டப்படும் 'லாச்சப்பல்" பகுதியில் அமைந்துள்ள 'தங்கவயல்" திரை அரங்கில் இந்நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. தனி இருக்கை: ஐந்து ஈரோக்கள், முழுமையான ஏழு திரைப்படங்களின் தொகுதித் தனி இருக்கை: பதினைந்து ஈரோக்கள் என மகிழ்வுடன் தெரிவிக்கிறார் பரா.

தங்கவயல் திரையரங்கம், 2bis, Passage Ruelle, 75018 Paris
மேலதிக விபரங்களுக்கு:


புலம்பெயர்வு வாழ்வின் அடுத்த தலைமுறையினரால் மேலெடுக்கப்படும் நம்மவர் படைப்புகளையும், படைப்பாளிகளையும் தொடர்ந்தும் ஊக்குவிப்போம்.
நல்லதை மனந்திறந்து பாராட்டுவோம்!
தவறுகளை கரிசனையுடன் வெளிப்படுத்துவோம்!!


நிகழ்வு தொடர்பான எனது பார்வைப் பதிவை வாசிக்க (சொடுக்குக):

« பாரிஸ் ஈழத் தமிழ்த் திரைவிழா 2013»


- சலனம் முகுந்தன்
நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!!

பாரீசு 18.08.2013

No comments:

Post a Comment