Saturday 24 August 2013

புலம்பெயர் தமிழர் திருநாள் 2013 பிரான்சு





 பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் 2013 - வள்ளுவராண்டு 2044                                                                    - வெண்பனி மூடிய தரையில் தமிழர்களாக ஒருங்கிணைந்து நிகத்தப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு - 

இத் தைப்பொங்கல் 7வது ஆண்டு நிகழ்வாக பாரீசின் வடக்கிலமைந்த ஸ்ரான் நகரில் 19.01.2013 அன்று நடைபெற்றது. புலம்பெயர்ந்து வாழத் தலைப்பட்டவர்களாக நான்காவது தசாப்த காலத்தில் பயணிக்கும் முதற் தலைமுறையினருடன், முழுமையான புலம் பெயர்ந்தவர்களாக வாழத் தலைப்பட்டுள்ள மூன்றாம் தலைமுறையினரும்(பேரர்) சங்கமித்ததாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
தமிழர்க்கு ஒருநாள் - தமிழால் அடையாளங் கொள்ளும் தனித்துவநாளாக விளங்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்; நிகழ்வு பிரான்சில் பல்லின மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாகி சிறப்பித்தது.

வெளித்திடல் நிகழ்வாக பொங்கலிடல், கோலமிடல் கட்புலச் சுவையூட்டலாக அமைந்திருக்க உள்ளரங்கில் நிகழ்த்துக் கலை நிகழ்வுகள் மற்றும் தாமாகவே சுவைத்து அனுபவிக்கும் தமிழர் உணவுக் காட்சியும் கொண்டதாக செவிச்சுவையையும் நாச் சுவையூட்டலாகவும் அமைந்திருந்தது. நிகழ்கலை அரங்கினை நிகழ்த்தி வருகை தந்தோரை மகிழ்வித்தனர் சிறுவர்கள். 'கண்டியரசன் பொங்கல்" என்ற சிறு கூத்தரங்கம், மற்றும் பொங்லிடல் அரங்கில் அமைந்த பாரம்பரிய தாள வாத்திய முழக்கத்துடனான பாடலிசை அரங்கம் தமிழர் திருநாளுக்கு பெருமைகூட்டியது.

தமிழர்களின் பாரம்பரிய பாடலிசை முழங்க சிறுவர் முதல் மூத்தோர் வரை சுற்றிச் சூழ நிற்க வெளித்திடலில் பொதுப் பொங்கலிடப்பட்டது. பொங்கலுக்கான அரிசியை பானையிலிட்டு ஆரம்பித்துச் சிறப்பித்தவர் 50 ஆண்டு திருமண வாழ்வை நிறைவுடன் தொடரும் மூதாளர்களான சின்னராசா பாக்கியலட்சுமி தம்பதியினர். தொடர்ச்சியாக உள்ளரங்கில் பொங்கலோடு தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கலந்துகொண்டிருந்தவர்கள் முக மலர்ச்சியுடன் காணப்பட்டதால் அரங்கம் மகிழ்வானதொரு ஒன்றுகூடலாகி அனைவரையும் மகிழ்வூட்டி சூழலில் தகித்துக் கொண்டிருந்த கடுமையான குளிரை மறக்கடிக்கச் செய்திருந்தது.
ஸ்தான் துணை நகரபிதா அசடீன்; சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழர் திருநாள் ஒன்றுகூடல் உணர்வினை வாழ்த்தி அனைவருக்குமான புத்தாண்டு வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வினை பிரபல நடனக் கலைஞர் பிரேம் கோபால் அவர்கள் தனக்கேயுரிய தனித்துவ அழகுடன் பிரஞ்சு தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தொகுத்தளித்தார். தைப்பொங்கல் தொடர்பான பிரஞ்சு உரையை மனமுவர்ந்து வழங்கிய பாண்டிச்சேரி வழி வந்த புலம்பெயர்ந்த தமிழர் தலைமுறையினரான செல்வி ஜெசிமா மொகமட் தனக்கிருக்கும் கோலம் போடும் ஆர்வத்தைச் சொன்னார்.

வெண்பனியால் இறுகிப் போர்த்திய பாரீசின் தரையில் 'பொங்கலோ பொங்கல்.." எனும் கூட்டு குரலொலியுடன் பொங்கியது பொங்கல் பானை - நாம் என்ற பன்முகத் தன்மையுடன் தமிழர்களாக ஒருங்கிணையும் ஓர் உன்னதமான திருநாள் தமிழர் திருநாள் என்பதனை இம்முறையும் இந்நிகழ்வு பிரான்சில் பறைசாற்றியது சிலம்பு அமைப்பினரால் ஒழுங்கமைக்கட்ட புலம்பெயர் தமிழர் திருநாள் 2013 !



புலம் பெயர்வாழ்வில் நான் யார்? - என்ற கேள்வி எம்மால் விட்டுச் செல்லும் புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் பிரதான வினாவாகவிருக்கும். நாம் வாழும் பல் இனக்குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே நடமாடப்போகிறார்கள் எமது சந்ததியினர். இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்பூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாது, சமாந்தரமாக எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்குண்டு. கலை- கலாச்சார நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு இதமாகின்றன. புலம்பெயர்வு வாழ்வில் இந்நோக்கைச் செயற்படுத்தும் முயற்சியில் வெளிப்படதொரு அரங்கநிகழ்வாக இது அமைந்திருந்தது.


- பாரீசு ராம்










No comments:

Post a Comment