Monday 12 January 2015

புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 - பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம் [Fête de la Diaspora Tamoule 2015 France].

செய்திச் சரம் 28


புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 - பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046)  ஒன்பதாவது நிகழ்வரங்கம்

தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் - எனும் விருதுவாக்கியத்துடன் தொடரப்படும் "புலம்பெயர்தமிழர் திருநாள் 2015 - பிரான்சு" ஒன்பதாவது நிகழ்வரங்கம் எதிர்வரும்  24.01.2015 அன்று பிற்பகல் 14.00 மணி முதல் 18.00 மணிவரை  Salle MEC, 1bis Rue Méchin, 93450 L'Île-Saint-Denis எனும் அரங்கில் கருத்துரையரங்கமும், மறுநாள்  25.01.2015 ஞாயிறு காலை 10.30 மணிதொடக்கம் மாலை 18.30 மணி வரையில் Salle Légion d honneur, 6 rue de la Légion d'honneur, 93 200 Saint-Denis எனும் அரங்கில் நிகழ்கலை அரங்கமுமாக இருநாட்கள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. பாரீசின் வடக்கிலமைந்து புறநகரான சென் டெனி நகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

இந்நிகழ்வில் பொங்கலிடல், அகரம் எழுதல், கோலமிடல், தமிழர் உணவுக் கண்காட்சி போன்ற நிகழ்வுகளுடன் இலண்டன் வாழ் ஓவியர் செளந்தர் பங்கேற்கும் ஓவியக் கண்காட்சியும், சிறார்களுக்கான ஓவியப் பயிலரங்கமும், இலண்டன் வாழ் தமிழர் நுண்கலை ஆற்றுகையாளர்களான திரு- திருமதி சாம் பிரதீபன் தம்பதியினர் வழங்கும் சிறப்பு நிகழ்கலைப் பயிலரங்கமும் - விபரண ஆற்றுகையரங்கமும் சிறப்பாக நடைபெறவுள்ளன.  

இதனுடன் சிறப்புக் கலையரங்கமாக  இசைக் கலைஞன் சந்தோஷ் குழுவினரும்,  புகழ்பெற்ற நடனக் கலைஞன் பிறேம் கோபாலுடன் அவதாரம் குழுவும் நிகழத்தவுள்ளன. 

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக முன்னைநாள் யாழ் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களும் அவரது துணைவி இசைப் பேராசிரியை திருமதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

இவர்கள் பங்கேற்கும் கருத்துரையரங்கம் 24.01.2015 அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள்  'தொன்மைத் தமிழர் சமூகத்தில் அறமும் அழகியலும்'  எனும் தலைப்பிலும் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்கள் ‘தமிழரின் இசை மரபு’ எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றவுள்ளனர். இவர்களோடு புலம்பெயர் தமிழர் தொடர்பான தன்னார்வ ஆய்வாளர் திரு சாம் விஜய் அவர்கள் "பிரான்சிய கலனித் நாடுகளில் தமிழர்கள் - 300 ஆண்டுகள்  வரலாறு" எனும் தலைப்பில் விபரண உரை நிகழ்த்தவுள்ளார்.

புலம்பெயர்ந்து நீட்சியுறம் வாழ்வில் தமிழால் ஒருத்துவமாகி சாதி- மதம்- தேசம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து பிரான்சில் நடாத்தப்படும் பண்பாட்டு நிகழ்வரங்கமாக 'தைப்பொங்கல்' புதிய பரிணாமத்தைப் பெற்றிருக்கிறது. இதனை ஒன்பதாவது தடவையாகத் தொடருகிறது பிரான்சு 'சிலம்பு சங்கம்'.

இனிய பொங்கல் - புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து அனைவரும் வருக என அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்!




பிரான்சில் ஒன்பதாவது தடவையாகத் தொடரப்படும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 நிகழ்வரங்கத்தை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கும் குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மகிழ்வுடன் நன்றி தெரிவிக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.



தகவல் - முகிலன்
பாரீசு 2015.01. 12 

பின்னிணைப்பு:
சென்ற ஆண்டு நிகழ்ந்த தமிழர் திருநாள் 2014 நிகழ்வரங்கின் சில காட்சிகள்:








இந்நிகழ்வு தொடர்பான பதிவு காண நுழைக :  

பிரான்சில் எட்டாவது ஆண்டாக தொடரும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் - 2014'