Monday 29 July 2013

'மூன்று பூனைகளும் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும் சீமாட்டி!'

குஞ்சரம் 10

அதோ வாருகிறாவே அவர்தான்
'மூன்று பூனைகளும் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும் சீமாட்டி!'
ஆ!!! '.. ம்.....'வென அனைவரும் அசந்துபோய் பிரமிப்புடன் பார்த்தனர்



'90களின் ஆரம்பத்தில் ஐரோப்பாவுக்கு வந்தடைந்த நான் பிரான்சில் வந்து தங்குவேன் எனவாகக் கனவுகூடக் கண்டிருந்ததில்லை. அதுவும் கலை நகரமாம் பாரீசில் வந்திறங்கி வாழத் தொடங்குவேன் எனவாக என் வாழ்நாளில் கற்பனைகூட செய்திருந்திருக்கவில்லை. ஒரு பிரஞ்சுச் சொல்கூட நான் அறிந்திருக்கவும் இல்லை. ஆனால் எனது மனதைத் தொட்டவாறு வாழும் நணபர்களில் ஒருவனாகிய கபிலன் {தற்போது செர்மனியில் வசிக்கிறார்} சென்னையில் '80களின் நடுவில் அலையன் பிறான்சேயில் பிரஞ்சு மொழி படித்தபோது எனக்கு பிரெஞ்சு பற்றி ஏதேதோவெல்லாம் சொல்லுவான் - பிரஞ்சுச் சினிமாக்கள் பற்றியெல்லாம் சொல்வான். நான் சட்டை செய்ததே இல்லை. பாண்டிச்சேரி நகரம் பிரஞ்சின் பிரதிபலிப்பாக இருப்பதை நண்பன் நேரு மூலம் பலமுறை அறிந்தும் இருந்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் நாட்டில் கிடைக்காத 'சோமபானம்' மலிவாகப் பாண்டிச்சேரியில் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பதுதான் !
பிரான்சின் தலைநகரில் கால் பதித்து நடமாடும் புத்தம் புதியதான சூழல் பல முதன்முதலான சம்பவங்களாக அனுபவித்து ஆழ்மனப் பெட்டகத்தில் பதிவாகிக் கிடக்கின்றன. இப்படியானவற்றில் ஒன்றுதான் நான் பார்த்த முதல் வேலை. ஆழ்ந்துறைந்து கிடக்கும் இவை மேலெழும் குமிழிகளாகி இணைய வானில் சங்கமிக்க முனைகின்றன.....

ந்தடைந்த பாரீசு நகரைச் சுற்றிப் பார்ப்பதிலும் அறிந்து கொள்வதிலும் நாட்டம் கொண்டிருந்த எம்மவருக்கு பணத்தின் அருமையும் அவசியமும் தெளிவாகவே தெரிந்துவிடும். இந்தப் 'பணம்' சும்மா வரவேவராது. இந்த அழுத்தம் எப்பேர்ப்பட்ட வேலையாயினும் செய்தாக வேண்டிய மனப் பக்குவத்தை இலகுவில் ஏற்படுத்திவிடுகிறது. பணம் இல்லாது நட்போடோ உறவுகளோடோ இங்கு வாழவே முடியாது. குடிக்கும் தண்ணீரில் இருந்து கழிக்கும் நீருக்கும் காசால் அறிவிடப்படும் புத்தம் புதியதான சூழல் இது. தற்காலிகமாக ஒருவரது வீட்டில் தங்கியிருந்தால் கூட அவரது மாதச் செலவீன கணக்கறிக்கையில் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகரித்ததாகவே அமைந்துவிடும்.
பாரீசில் வதிவிட உரிமம் கிடைத்தவுடன் எனக்கு கிடைத்த முதல் வேலை சீமாட்டி வீட்டில் பூனைகள் பாராமரித்தல். இது எனது தோழமையுடனான நட்பினால்தான் கிடைத்தது. இங்கு அப்போதிருந்தே அனுசரணை மூலமே வேலை வாய்ப்புகளும் இன்னபிறவுமான தேவைகளையும் இலகுவாகப் பெறமுடிகிறது. இந்த வேலையும் சும்மா கிடைக்கவில்லை. நேர்முகப் பரீட்சை வைக்கப்பட்டே தெரிவாகப்பட்டிருந்தது. இந்த நேர்முகப் பரீட்சை நடந்திருந்திருந்ததைக் கூட நான் அப்போது அறிந்திருக்கவே இல்லை.
ஒருநாள் மாலை நேரம் தேனீர் பருகும் அழைப்புக்காக எனது தோழமை நண்பன் தான் வாழும் வீட்டிற்கு அழைத்திருந்தான். இவன் அந்த வீட்டுச் சீமாட்டியின் தத்துப்பிள்ளை. சந்திப்பு மிகச் சாரணமாக மகிழ்வுடன் நடைபெற்றது. இலங்கையில் இருக்கும் உறவினர் நிலை பிரான்சு பற்றிய புரிதல்கள்... போன்ற சம்பிரதாயமான கருத்துப் பரிமாறலாகத் தொடங்கிய உரையாடலில் பிரஞ்சு மொழி கற்கவேண்டிய எனது அவாவை இயல்பாகவே வெளிப்பட்டது. இவ்வேளையில் அங்கு வந்த பூனை என்னை உரசியவாறு சென்று அம்மணியின் மடியேறிக் கொஞ்சி மேசையில் செல்லமாக ஏறிப்படுத்து முகத்தை அவர் முன் நீட்டியது. அவரும் அதனது தாடையை வருடிக் கொடுக்கவும் அது சுதந்திரமாக மேசையில் நடந்து என்னைப் பார்த்து 'மியாவ்' என்றது. நானும் வாஞ்சையுடன் பார்த்து முறுவலித்தேன். 'நமது நாட்டில் இப்படியாக ஆக்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பூனையை மேசையில் சுதந்திரமாக நடமாட விட்டிருப்போமா?' எனவாக விரியும் நினைவுகளோடு எல்லாமே ஆச்சரியமான காட்சிகளாவே இருந்தன.
‘உங்களுடைய நாட்டில் நாய் பூனையைக் கண்டிருக்கிறீர்களா?' அம்மணி என்னிடம் வினவியதை நண்பன் மொழிபெயர்த்துக் கேட்டார்.
'எனது வீட்டிலேயே இரண்டு நாய்களும் பூனைப் பட்டாளமும் இருந்தன. நான்கூட சிறுவயதிலேயே மூக்கில கறுப்பன் என்ற பூனையைச் செல்லமாக வளர்த்தனான். நான் தூங்கும்போது எனது காலடியில்தான் அது எப்போதுமே தூங்கும்.' என்றேன் மிகுந்த மகிழ்வோடு.
அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என்றே நினைத்தேன்! சந்திப்பு நிறைவு பெற்று விடைபெறும்போது வாசல் வரையில் நண்பன் கூடவே வந்திருந்தான்.
'அப்ப எப்போது வாரீர்?' என்று முகமலர்ச்சியுன் கைகுலுக்கியவாறு நண்பன்.
'எங்கே வாறது?' எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
'இங்குதான்.... பெட்டி படுக்கைகளையும் எடுத்துவாரும்!' என்றான் சிரித்தவாறு
'என்னது இங்கேயா? அதெப்படி?' எனது வாய் இயல்பாகவே பிளந்துவிட்டது.
'அதுதான்... நீர் வேலைக்குத் தெரிவாகி விட்டீர். இனி இங்கு வீட்டு வேலையைப் பார்த்தவாறு மொழி படித்தலைச் செய்யலாம் என்று அம்மா சொல்லி விட்டார்.'
'என்ன வேலை?'
'பூனையைப் பராமரிப்பதுதான்!.... பூனையும் சம்மதித்துவிட்டது!!' என்றான் தொடர்ந்தும் மகிழ்வுடன்.
'பூனை சம்மதித்ததா?.... எப்டித் தெரியும்?' அடுத்தடுத்த ஆச்சரியங்களால் திகைத்தேவிட்டேன்.
'மிருக உயிரி உளவியல் நிறையப் படித்தவர் அம்மா... இங்கு வீட்டிலேயே ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு வந்த பூனை உம்மை உரசியவாறு வந்து மேசையில் ஏறிய பூனை  உம்முன் வந்து 'மியாவ்' என்றதே....  அதுதான் சம்மதம்.'
நான் சிறு வயது முதல் நிறையவே பிராணிகளுடன் வாழ்ந்த விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்தான். ஆனாலும் இவ்வகை வெளிப்பாட்டை முதன் முதலாக இங்குதான் அறிந்தவனானேன். 'நன்றி!' என்று என் நண்பனின் கையை எனது இரு கைகளாலும் பற்றி எனது உணர்வைப் பகிர்ந்தேன். அவன் சாதாரணமாகவே ஏற்றுக் கொண்டு இங்கு வந்து வேலையைத் தொடங்கும்படி பணித்தான்.

'இருந்தாலும்.... உங்களது வீட்டில் நாய் பூனை வளர்த்ததைச் சொல்லாமல் விட்டிருக்கலாம்...!' என்றான் பவ்வியமாக.
'ஏன்?'


'இவர்களுக்கு மிருகங்கள் வளர்ப்பது என்றால் பெரும் பெருமைக்குரியதொன்று. நாம் இங்கு வேலைக்கு வருபவர்கள்... நாங்களும் இதை நம்ம நாட்டில் வளர்த்ததாகச் சொல்லாமா?... இருந்தாலும் பரவாயில்லை! உமது வேலை உறுதியாச்சு... பிரஞ்சுப் படிப்பும் தொடர வழி கண்டாயிற்று!' என்றான் மிகுந்த மலர்ச்சியுடன்.
எனது வாழ்வில் மானிடர்களாக மனதைத் தொட்டுச் சென்ற சிலரில் இவரும் ஒருவர். வலது கை கொடுப்பதை இடது கை அறியாது வழங்கும் கொடையாளி. மிகுந்த காருண்யம் கொண்டவர். எனது நண்பன் சிறந்ததொரு பிரஞ்சு மொழிப் புலமையுடையவர். தற்பெருமை கொள்ளாத அடக்கமானவர். இவரது நல்ல மனத்தால்தான் அந்த சீமாட்டியார் தத்தும் எடுத்திருக்கிறார். நீட்சி பெற்று விரியும் புலம்பெயர் வாழ்வில் இவர் தனது துணைவியன் பிறந்த மண்ணான ஆசிய நாட்டிற்குச் சென்றுவிட்டார். சீமாட்டியார் நிறைவான வாழ்வை தத்தெடுத்த தன் மகனது ஆசியக் குடும்பத்தாருடனும் பேரக் குழந்தைகளுடனும் வாழ்ந்து சென்ற வருடத்தில்தான் இயற்கை எய்தினார். இவரது இறப்புச் செய்தி கேட்டபோது நானும் ஒருகணம் 'அம்மா!' எனவாக மௌனித்து உறைந்துதான் போனேன். பெற்றால்தான் பிள்ளைகளா என்ன?
இந்த வீட்டிலிருந்தவாறு அம்மாவிடம் நான் கற்றதும் பெற்றதும் அறிந்ததும் ஏராளமானவை. 'கொக்கோ கோலா முதலான சுவையூட்டப்பட பானங்கள் அருந்தக் கூடாது. முட்டை வாங்குவதாயின் நடமாடும் கோழிகளின் முட்டைதான் வாங்க வேண்டும். முட்டையை நன்கு அவித்துதான் உண்ண வேண்டும். சுவையூட்டப்படாத பழரசங்கள் அருந்தலாம். பழங்கள் அதிகம் உண்ண வேண்டும். உயர்தரமான பால் வகைதான் வாங்க வேண்டும்' என்று வாஞ்சையோடு ஆலோசனை தருவார். தனது வளர்ப்புப் பிராணிகளுக்கும் அப்படியாகவே உணவும் வழங்குவார். வேலையாள் - முதலாளி என்ற பாகுபாடு இருந்ததே கிடையாது.
'ஒரு வீட்டில் இரு பெண்கள் வாழவே முடியாது' என்பதை மீண்டும் மீண்டும் அறிதியிடுவார். 'உமது துணைவி இங்கு வந்ததும் வேறு வீடு பார்த்துச் சென்றிட வேண்டும்!' என்றும் கூறியிருந்தார்.
நான் வீட்டையும் மூன்று பூனைககளின் பராமரிப்பையும் எடுத்திருந்ததால் இவர்கள் இலகுவாகச் சுற்றுலாக்களைத் தொடர முடிந்தது. ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள் செனகலுக்குச் சென்றுவிடுவார். இதைவிடவாகவும் வேறு நாடுகளுக்கும் சென்று வருவார்கள். ஒரு முறை செனகலில் இருந்து திரும்பும் போது தாயத்து கட்டியிருந்தார். இன்னொரு முறை அளகான கிளிகளுடன் வந்திருந்தார். இந்தக் கிளிகளுடன் பறவைகள் தொடர்பான நூல்களும் வந்திறங்கின. அன்றைக்கு நண்பன் சொன்னதின் ஆழம் தெளிவானது. இவர்கள் ஒருவிடையத்தில் ஆர்வமாகினால் எப்படியாகவெல்லாம் தேடிச் சென்று ஆராய்கிறார்கள். கீழ்த் தளத்தில் பென்னாம்பெரிய கூட்டில் கிளிகள் - முதலாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிவரையில் பூனைகளின் நடமாட்டம். எனக்கு முசுப்பாத்தியாகத்தான் இருந்தது. மனதில் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கும். இக்கேள்விகளை நண்பனிடம் மட்டும்தான் சரளமாக வினவ முடியும். ஒரு நாள் கேட்டேவிட்டேன். 'இவ்வளவு பிராணிகளை வளர்க்கிறீர்களே... ஏன் நாயை வளர்க்கவில்லை?'

'நாயா?... அதை வளர்க்காமல் இருந்திருப்போமா?' என்று நண்பன் சிரித்தான்.

'எப்போது?' நானும் ஆர்வம் ததும்பியவனாக....

'அதெல்லாம் பழைய கதை. நான் வந்த ஆரம்பத்தில் நாயும் இருந்தது...... அதோடு பெரிய தொல்லை...... வீடு திரும்புவதற்கு கொஞ்சம் பிந்தினாலும் போச்சு...... தன் கழிவுகளால் எல்லாவற்றையும் அசிங்கப்படுத்தி.... நாறச் செய்துவிடும்..... பூனைகள் சுத்தமானவை. தொந்தரவு அதிகம் இருக்காது! குறிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தனது கழிவை அகற்றி மூடிவிடும். காலம் செல்லச் செல்ல அம்மா சொல்லிப் போட்டார் இனி நாய் வேண்டாம் என்று!!' பழைய நினைவுகளுடன் கலந்ததாக அவரது வார்த்தைகள் அவரது உடல் மொழி தழுவி விழுந்தன. புரிந்தவனாக.... புன் சிரிப்போடு... பேசாமல் கேட்டுக்கொண்டேன்..
பிரான்சில் தங்கியிருந்தபோது ஒருநாள் தடல்புடலான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வீட்டுக்குத்தான் யாரோ விருந்தினர்கள் வரப் போகிறார்களோவென நான் நினைத்தேன். அப்படியில்லை... இவர்தான் வேறொரு விருந்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார் எனத் தெரிந்தது.
அந்தக் காலத்தில் பிரான்சின் உள்விவகார அமைச்சர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவரும் இவரும் ஒரே ஊர்காரர்கள். பிரான்சின் தென் கடலுக்குள் இருக்கும் தீவவகமான கோர்ஸ்தான் இவர்களது பிறந்த இடம்.
நண்பன் தொலைபேசியில் பேசுவதும் வண்டியை எடுத்துச் செல்வதும் திரும்பவதுமாக இருந்தான். எனக்கு ஏதுமே புரியவில்லை. 'ஏன் இந்தப் பரபரப்பு?' கேட்டே விட்டேன்.
'வங்கி லொக்கரிலிருந்து எடுக்க வேண்டும்!'
நான் நினைத்தேன் பெறுமதிவாய்ந்த வைர நகை ஏதாயினும் இருக்குமென்று. 'அதற்கேன் இவ்வளவு சிரமம்? போகும்போது எடுத்துப் போட்டுப் போவதுதானே!' என்றேன்.
'நீர் என்னதை நினைச்சீர்? அது மதிப்பு மிக்கதொரு ஆடை. அதை எப்படி தெருவிலிருந்து அணிவது? அதனால்தான் கோட்டல் அறையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது !'  அம்மாடியோவ்.... திகைப் பென்றால் அப்படியொரு திகைப்பு.ஆதன் பின்... நான் வாய்யைத் திறக்கவே இல்லை.

'கவனமாக எடுத்து அணிந்து சென்றுவிட்டு மீளவும் திரும்பம்போது வங்கியில் கொண்டு போய் பௌத்திரமாக வைத்துவிட்டுத்தான் வரவேண்டும்! வேறிடங்களுக்கு அதோடு செல்லக் கூடாது! மிகப் பெறுமதி வாய்ந்த உயர்தரமான ஆடை அது.' என்றார்
00000
நான் எனது நினைவு வெளிக்குள் நுழைந்து பயணிக்கலானேன். ஆகா... அழகாக ஒழுங்கமைக்கப்பட்தொரு விசாலான மண்டபம். விருந்து ஏற்பாடு செல்வச் செழிப்புடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. சேவர்கள் - பணியாளர்கள் எல்லோருமே ஒழுங்கான முறைப்படுத்தப்பட்ட உயர்தர ஆடை அணிகலங்களுடன் பவ்வியமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். குறிக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக விதம்விமான உயர்தரமான கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து வாசலை வந்தடைகின்றன. சீமான்களும் சீமாட்டிகளும் கோலாகலமான சிரிப்புடன் வருகைதர தடல்புடலாக வரவேற்பு நிகழ்கிறது.
மண்டபத்தினுள் சோடி சோடியாகவும் தனியர்களாகவும் விருந்தினர் நுழைகிறார்கள். முன்னரே வருகை தந்தவர்கள் தமக்குத் தெரிந்தவர்கள் வரும்போது பரஸ்பரம் முணுமுணுப்பாக பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர்.
'இதோ இவர் மாரடினிக்கில் பெரிய புள்ளி.... தான் போகுமிடமெல்லாம் தனது நாய்க்குட்டியையும் அழைத்தே செல்வார்.'
'இதோ இவர் பெரிய சீமாட்டி.... இரண்டு நாய்கள் ஒரு பூனை வளர்ப்பவர்!!'
'இதோ இவர்களைப் பாருங்கோ... இப்பத்தான் கல்யாணம் முடித்தவர்கள்! அவர் பெரியதொரு ஆடை அலங்கார வித்தகர்.'
'இவர்தான் பிரல்யமான தொலைக் காட்சி தொகுப்பாளர்!!'
'இந்தச் சீமாட்டியைப் பாருங்கோ... இவர் ஐந்து நாய்களை வைச்சிருக்கிறார்...'
'அதோ அங்க பாருங்கோ..... தனியாக ஒரு சீமாட்டி...... வருகிறாவே கம்பீரமாக... அவர் மூன்று பூனையும் இரண்டு சிறிலங்கனும் வைத்திருக்கிறார்!' கூட்டம் அதிர்ந்து பெருமையுடன் அவரை வரவேற்கிறது.
(நன்றி: படங்கள் கேட்டதும் வழங்கும் கூகிள் வழங்கி)

-முகிலன்
பாரீசு 29.07.2013

2 comments:

  1. நல்ல அனுபவம். "சிறிலங்கன்" பொருள் புரியவில்லை?

    ReplyDelete
  2. 'சிறிலங்கன்' எனவாக இங்குள்ள பல்லின மக்களால் சுட்ப்படுபவர்கள் 'இலங்கையர்களாகிய' எங்களைத்தான். இங்கு வீட்டில் வளர்க்கப்படும் விசுவாசமான பிராணிகளாக குறிப்பிட்டிருக்கிறேன்.
    தங்களது வருகைக்கும் பதிவிடலுக்கும் இனிதான நன்றிகள்!

    ReplyDelete