Monday 2 June 2014

பாரீசில் « திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம் » - அறிமுக நிகழ்வு -


பாரீசில் ஈழத்து கலை ஆர்வலரும், இரசிகனும்– கலை, இலக்கிய ஈடுபாட்டாளருமான . யேசுராசா அவர்களது நூல்
« திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம் »
-    அறிமுக நிகழ்வு -
ஈழத்து தனித்துவமான கலை ஆர்வலர் அ. யேசுராசா அவர்களது இரசனைப் பதிவாக வெளிவந்துள்ளது "திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்" நூல். இரசனையாளனாக பயணப்படும் அ யேசுராசா அவர்களது அவதானிப்பில் கவனம் கொள்ளபட்ட பதிவுகளைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. இதனை தமிழியல் மற்றும் காலச்சுவடு இணைந்ததாக வெளியிட்டிருக்கின்றன.
‘அரங்க - திரை இரசனைவியலை’ பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைத்து முறைசார் முறைமையில் கற்பிக்கப்படல் வேண்டுமென்ற கனவையும் அதற்கான முயற்சியையும் தன்வாழ் நாளின் இறுதிவரை மேற்கொண்டிருந்தவாறு விடைபெற்றுவிட்டர் நம் சினிமாவின் ‘ஒளி ஞானி’ பாலுமகேந்திரா. ஆனாலும் முறைசாரா முறைமையில் பொதுப் பார்வையாளரின் இரசனைப் பரிணாமத் தூண்டலாய் பல்வேறு சமூகப் பிரக்ஞையாளர்கள் ஈடுபட்ட வண்ணமே எமது பயணம் தொடர்கிறது. விமர்சன அரங்கங்களிலும் பத்தி எழுத்துகளிலும் ஊடகங்களிலும் இத்தகைய வெளிப்பாடுகள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. பொதுப் பார்வையாளர்களின் இரசனை இன்று பல்வேறுபட்ட மாற்றங்களுக்கு உட்பட்டு மேம்பாடு அடைந்துள்ளதை இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஈழத்து கலை ஆர்வலராக அ. யேசுராசா 1960களின் பிற்பகுதியிலிருந்து இன்று வரையில் இலாடமிடப்படாத தன் பார்வைச் சட்டகத்தினால் தனக்குள் கிளர்ந்த மனவுந்துதலை – ‘இரசனைப் பதிவாக’ அவ்வப்போது பதிவிட்டு வந்திருக்கிறார். இவை தொகுக்கப்பட்டு நூலாகியிருக்கிறது.
இதை ‘மனம் தூண்ட உடல் செய்யுமெனவாக’ வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னலமற்ற ஈழத் தமிழ் பெருந்தகையாளரான பத்மநாப ஐயர் தனது ‘தமிழியல்’ பதிப்பத்தின் மூலம் சென்னை ‘காலச்சுவடு’ பதிப்பகத்துடன் இணைந்து நிறைவேற்றியிருக்கிறார்.
43 கட்டுரைகள் கொண்ட சுமார் 200 பக்கங்களையுடைய குறள் மொழியாடற் கட்டுரைத் தொகுதிக்கு சுமார் 30 பக்க முன்னுரையை எழுதியிருக்கிறார் அமெரிக்க மிசிகன் பல்கலைக் கழகத் துணைப்பேராசிரியர் சொர்ணவேல். இவர் பின்வருமாறு குறிபிடுகிறார் « பொதுவாக அனைத்து அடர்த்தியான சிந்திப்புவெளிகளையும் போல சினிமா மொழியும் இருமை எதிர்வுகளுக்குள் கட்டமைக்கப்பட்டும் அதைத் தகர்த்தெறிந்து பதிய தடங்களில் புரிதலுக்கான வழிகோலுதலுக்கு உட்பட்டும் இருக்கின்றன. மதிப்பிற்குரிய சினிமா வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் அவர்களின் தடம் பூனே திரைப்படப்பள்ளியின் உருவத் திருமேனியான சதீஸ் பகதூரின் வழியைத் தொடர்ந்து செல்கிறது.
சினிமாவைக் கலைப் பொருளாகவும் காட்சியூடகமாகவும் முன்னிறுத்தி அது நாடகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மொழியின் சாத்தியங்களை விரித்தெடுப்பதாகவும் அமையவேண்டும் என்ற கலை சினிமாவின் நோக்கங்களை ஏற்றுக் கொண்டு அத்தடம் தனது அவதானிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கிறது. யேசுராசாவின் தடமும் பகதூர் மற்றும் பாஸ்கரனின் சினிமாத் தத்துவத்தின் நீட்சியே. யேசுராசாவும் ஆபிரஹாமிலிருந்து மகேந்திரனின் சினிமா வரை கூர்ந்து அவதானிக்கிறார்.
மனதை வருடும் விசயம் என்னவென்றால் யேசுராசா கடந்த மூன்று பதின்மவருடங்களின் போருக்கும் அழிவுக்கும் ஊடாகச் சினிமாவையம் நாடகத்தையும் கலையின் ஆக்கச் சக்தியின் வெளிப்பாடாகத் தியானித்து அதன் தூய சாத்தியங்களில் மையல் கொண்டிருக்கிறார். யேசுராசாவின் சினிமா- நாடக்க் கட்டுரைகளின் இத்தொகுப்பு என் போன்ற சினிமா மாணவர்களுக்கு அரிய வரம். »



08.06.2014
பாரீசு - 15 மணி 00
Paroisse St Bernard de Chapelle
5 rue pierre l'ermite, 75018 Paris

குறிப்பு :
0 சொர்ணவேல் ஈஸ்வரன்
உலக சினிமா: தமிழில் நூல் எழுதியுள்ள மிச்சிகன் பல்கலை. பேராசிரியர் சொர்ணவேல்.
By dn, சென்னை
நன்றி : தினமணி First Published : 22 January 2013 06:18 AM IST
·        
அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன்.

புணே திரைப்படக் கல்லூரியில் பயின்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நெல்லையைச் சேர்ந்த பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரனின் உலக சினிமா குறித்த தமிழ் நூல் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வழுதூரைச் சேர்ந்தவர் சொர்ணவேல் ஈஸ்வரன். இவர் புணே திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். தற்போது  மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் காட்சித் தொடர்பியல் துறைத் தலைவராக உள்ள இவர், ஆவணப் படங்கள் தயாரிப்பதில் புகழ் பெற்றவர். இந்த நிலையில் உலக சினிமா குறித்த வரலாறை எழுதும் முயற்சியாக "சினிமா: சட்டகமும் சாளரமும்' என்ற இவரது நூல் புத்தகக் காட்சியில் வெளியாகி உள்ளது. நிழல் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் ஆவணப்படம், வெள்ளித்திரை வரலாற்றில் முக்கிய நூலாக கருதப்படுகிறது.
இந்த நூலில் உலக சினிமா வரலாறுடன் 1940 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் சினிமா, ஸ்டுடியோக்கள் சார்ந்த வரலாறு, தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் சினிமா உள்ளிட்டவற்றை குறித்தும் எழுதியுள்ள சொர்ணவேல் ஈஸ்வரன், தற்போது இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகான அமெரிக்க இஸ்லாமியர்களின் நிலை குறித்த ஆவணப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

0
இ. பத்மநாப ஐயர் (இரத்தின ஐயர் பத்மநாப ஐயர், பி. ஆகஸ்ட் 24, 1941, யாழ்ப்பாணம்,வண்ணார்பண்ணை
ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் இலக்கிய ஆர்வலர். ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்ட ஐயர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற இவர், பன்முகப் பார்வை கொண்ட நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்துசக்தி. வெளியீட்டுத் துறையிலும் ஆக்கங்களைத் தொகுப்பதிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தரமான, நேர்த்தியான பல நூல்களைப் பதிப்பித்தவர். தனது வாழ்வில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியத் துறையிலும் வெளியீட்டுத் துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர். இலக்கியப் பங்களிப்புக்காக இயல் விருது பெற்றவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் இப்பொழுது லண்டனில் வசித்துவருகிறார்.

0
அ. யேசுராசா (1946, டிசம்பர் 30, குருநகர், யாழ்ப்பாணம்)
 ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவர் கலை, இலக்கியம், ஏனைய பொது அறிவுத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர். யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்தவர்.
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவர். காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளர். அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தவர். இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும் இருந்தவர்.
இவர் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரம் வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றவர். அஞ்சல் அதிபர், தந்தியாளர் சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
திரைப்படங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 1979 - 1981 காலப்பகுதியில் யாழ். திரைப்பட வட்டத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். தற்போது யாழ். பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தின் திரைப்படக் காட்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.
1975 இல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 - 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான கவிதை இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல்தெரிதல் என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.
அலை வெளியீடு மூலம் இதுவரை ஒன்பது நூல்களையும் வெளியிட்டுள்ளார்.


பின்னிணைப்பு :
ஈழத்து தனித்துவமான கலை ஆர்வலர் அ. யேசுராசா அவர்களது இரசனைப் பதிவாக வெளிவந்துள்ளது "திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்" நூல். இரசனையாளனாக பயணப்படும் அ யேசுராசா அவர்களது அவதானிப்பில் கவனம் கொள்ளபட்ட  அவரது நூலை வாசித்ததால் கிளறிய சிந்தனை வளையத் தூண்டலால்  சில புகழ்பெற்ற திரைப்படங்களை மீளவும் பார்க்கத் தூண்டப்பட்டேன். 'யான் பெற்ற இன்பம் பெறுக வையகம்!' என இந்த வகையில் நான் பார்த்த சில படங்களை இங்கு பகிர்கிறேன். இன்றைய அறிவியல் இணையவலைத் தொடர்பூடகம் இந்த அரிய வாய்ப்பை எமக்கு வழங்கியிருக்கிறது.

1.   திரைப்படம் : மெற்றலோ (1970) - மோறோ பொலோக்கிநினி - இத்தாலி
பாரீசில் நிகழ்வரங்கம் : "திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்" நூல் அறிமுக அரங்கம்
மோறோ பொலோக்கிநினி (பக்கம் 144 - 148)

2.   மந்தை புகழ்பெற்ற இயக்குநர் இயில்மாஸ் குனே - குர்தீஸ் திரை  (பக்கம் : 157-158) Films by Kurdish directors: Yilmaz Guney
திரைப்படங்கள் தொடர்பான விபரணம்: http://www.youtube.com/watch?v=7ZNn-pQMdDo&hd=1


3.   திரைப்படம் : பிறவி (1988) - Piravi - പിറവി- -  மலையாளம் (இந்தியா)
சாஜி என் கருன் - மலையாளத் திரை  (பக்கம் : 205-206) Films by Shaji N. Karun  director: Shaji N. Karun 
சாஜி என் கருன் - மலையாளத் திரை  (பக்கம் : 205-206) Films by Shaji N. Karun  director: Shaji N. Karun 
"இப்படம் சர்வதேசப் பொதுமை வாய்ந்ததென இதனைப் பார்த்த ஒரு வெளிநாட்டு விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற கிரேக்கத் திரைப்பட இயக்குநரான கோஸ்ரா கவாரிஸ், அலண்டேயின் மறைவின் பின்னரான சிலி நாட்டுச் சூழலில் உருவாகிய மிஸ்ஸிங் என்ற புகழ்பெற்ற திரைப் படமும், இக்கருவினையே கொண்டுள்ளது. நீண்ட காலமாக நெருக்கடிச் சூழலுக்குள் வாழ்ந்துவரும் எமது மக்களுக்கும் இது பொருந்தி வரக்கூடியதே; இதுதான், சிறப்பான கலைகளின் சர்வவியாபகத் தன்மை போலும்!" என்கிறார் ஈழத்து தனித்துவமான கலை ஆர்வலர் அ. யேசுராசா.


பிறவி திரைப்படம் : http://www.youtube.com/watch?v=6sZ-iyQ733A&hd=1
இங்கு ஜேர்மன் மற்றும் பிரஞ்சு அடிக் குறிப்புகளுடன் காணப்படுகிறது.

4.   திரைப்படம் : த கிட் (1921) – சார்லி சப்பிளின்
சார்லி சப்பிளின் (பக்கம் 149 - 152)
« கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை விருப்பமின்றிசூழ்நிலையின் நிர்ப்பந்த்தால்வளர்க்கும் ஒரு ஏழைக்கும் அக்குழந்தைக்கும் இடையில் வளரும் பிணைப்பு மனதைத் தொடுவது. அநாதைகளைப் பேணும் நிறுவனங்களின் யாந்திரீகமானமனித்த் தன்மையற்றநடத்தைகளை அம்பலப்படுத்தும் சக்திமிக்க காட்சிகளும் மனதில் பதிவன

நன்றி : யூரியூப் இணைய வழங்கி & விக்கிபீடியா மற்றும் கூகிள் இணைய வழங்கி
அனைவரும் வருக !!

-     - சலனம் முகுந்தன்
  - நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்! -
-     - பாரீசு 02.06.2014

No comments:

Post a Comment