Thursday 17 September 2009

கதைச் சரம் 14 ஏட்டுக் கல்வியும்... நடைமுறையும்


கதைச் சரம் 14
செவி வழிக் கதை 12
ஏட்டுக் கல்வியும்... நடைமுறையும்

மொஸ்கோ மா நகரத்தில் அமைந்திருக்கும் மருத்துவக் கல்லூரியின் மதிய உணவு இடைவேளையின் போது கிடைக்கும் சிறிது நேரத்தில், நண்பர்களான அந்த மூன்று மருத்துவத்துறை இறுதியாண்டு மாணவர்களும் காலாற நடப்பதையும் பூங்காவுக்குச் சென்று அமர்ந்திருந்து தமது பாடங்களை மீட்பதுமான வழக்கத்தைக் கொண்டிருந்தனர். மருத்துவக் கல்வி முடிவில் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்ற தமக்கிடையிலான அளவளாவல்களையும் இவர்கள் செய்வது வழக்கம்.

கோடை காலத்தை வெயிலில் தரிசிப்பதற்கு ஐரோப்பியர்களுக்கு நிகராக யாருமே இருக்கமாட்டார்கள். உடம்பு முழுவதையும் பொத்தி மூடியவாறு இறுக்கமாக வாழ நிர்ப்பந்திக்கும் குளிர் கால அனுபவம் கோடையின் அருமையை பாரம்பரிய அனுபவக் கொடையாக்கியதில் வியப்பென்ன இருக்கிறது. குதூகலமான நடமாட்டம் இக்காலத்தில் எல்லா பிராயத்தினராலும் இருக்கும். வைத்திய மாணவர்களாகையால் மனிதர்களின் நடையை உற்று நோக்குவதும் அத்தகைய நடையுடைவர்களுக்கு 'மருத்துவம் தொடர்பான என்ன பிரச்சனைகள் இருக்கலாம்?' எனவாக அலசுவதை இவர்கள் சிலவேளைகளில் நடாத்துவதும் உண்டு.

இன்று, மாலை நேர வகுப்பு ஒரு மணித்தியாலம் சென்ற பின்னர்தான் ஆரம்பிக்குமாதலால் கொஞ்சம் தூரம் காலாற நடந்துவந்திருந்தனர். அந்த அகண்ட வீதியின் ஓரமாக அமைந்திருந்த பூங்காவிலிருக்கும் பெரிய மரத்தின் கீழ் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு கதைத்துக் கொண்டிருந்தனர். பிரதான வீதியில் செல்வோரையும் காணக்கூடியதாகவிருக்கும் இந்த இருக்கை அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. பக்கத்திலேயே பேரூந்து தரிப்பிடமும் இருப்பதால் திரும்பும்போது விரைவாகக் கல்லூரிக்குச் சென்றுவிடலாம்.

அப்போது, பேரூந்தில் இருந்து இறங்கிய ஒருவரது நடை இவர்களது கவனத்தைப் பெற்றது.. வயிற்றை உள்ளிழுத்தவாறு மூச்சை நிதானமாக விடமுடியாது பரிதவித்தவாறு மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். அவரது கைகள் அசாதாரணமாக உடம்பின் பல பாகங்களையும் பிடித்தவண்ணம் இருந்தன. வழமையற்றிருந்த அந்த மனிதரின் நடவடிக்கையைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

"நண்பா, இவருக்கு இருதயக் கோளாறு வந்துள்ளது போலிருக்கு... உடனடியாக முதலுதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும்." முதலாவது எண்ணத்தை உதிர்த்தான் ஒருவன்.

"இல்லை... இல்லை இதயக்கோளாறு இருந்தால் அடியெடுத்து நடக்க முடியாது. இவருக்கு காலில்தான் பிரச்சினை இரண்டு முழங்காலிலும் மூட்டுச் சுழற்சி நடைபெறாத வாதப் பிரச்சனையால் அவதியுறுகிறார்." இது இரண்டாவதான மாணவனின் கருத்தானது.

"இல்லையில்லை! நண்பர்களே! அவரது கால் சில சமயத்தில் மெல்ல மேலும் கீழும் தூக்கப்படுகிறது. முகம் கோணிப் போயுள்ளது. தலையையும் தடவுகிறார்.... கைகளால் இறுக்கிப் பிடிக்கிறார். பதட்டமடைந்தவராக இருப்பினும் நிதானமாகத்தான் நடக்கிறார்.... நடக்க முடியாதவாராகவும் திணறுகிறார்.... எனக் கென்னவோ இவருக்குச் சித்த சுவாதீனப் பிரச்சனை(மனக் கோளாறு நோய்) இருப்பதாகத்தான் தெரிகிறது." என்றார் மூன்றாவதான மாணவன்.

இப்படியாக இவர்களது அலசல் நடைபெறம்போது அந்த மனிதர் இவர்களுக்கு அண்மையில் வந்தடைதுவிட்டார். மூவரும் அவருக்கருகில் சென்று, தங்களது கண்டுபிடிப்புகளில் எது சரியென்பதை உறுதிசெய்யலாயினர்.

"ஐயா, நாங்கள் மருத்துவத் துறை இறுதியாண்டு மாணவர்கள். தங்களுக்கான நோயை ஒருவாறு ஊகித்திருக்கிறோம். உங்களது நோயைக் குணப்படுத்த உடனடியாக உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். வாருங்கள் மருத்துவமனைக்கு.." என்றார்கள் கரிசனையுடன்.

வார்த்தைகள் தடுக்கித்தடுக்க "நோயா!.... எனக்கா?.... என்ன சொல்ல வருகிறீர்கள் தம்பீகளே!" மிகுந்த ஆச்சரியத்துடன் அந்த மனிதர்.

நண்பர்கள் ஒருவரை மற்றவர் தடுமாறிப் பார்த்தனர். "உங்களது நடையில்... நடக்க முடியாதவாறான தடுமாற்றமாக இருக்கிறதே...!" முதலாவதவன் கேட்டுவிட்டான்.

"ஓ!! அடபோங்கடா தம்பீகளா... நான் அவசரமாக வெளிக்குப் போகவேண்டிய நிர்ப்பந்த நிலையில் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்... தவிக்கிறேன். அதற்காக இடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...." தனது அவஸ்தையையும் பொருட்படுத்தாது கிளம்பிய மென் முறுவலுடன்.

- முகிலன்
பாரீசு செப்டெம்பர் 2009

இக்கதை மொஸ்கோவில் பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பி என்னுடன் பணியாற்றிய நண்பர் துருவர் சொன்னது.

2 comments:

  1. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

    ReplyDelete