Wednesday 16 September 2009

பகிர்வுச் சரம் - 1 வால்மீகி இராமாயணம்



பகிர்வுச் சரம் - 1
வால்மீகி இராமாயணம் - மறுவாசிப்பு


அன்று காவியங்களாகவும் கூத்து, நாடகங்களாகவும், இப்போது, பிரமாண்டமான சினிமா - தொலைக் காட்சிகளாலும் பரவலான பார்வைத் தளத்தில் காண்பிக்கப்படும் "இராமாயணம்". தற்போது மணிரெத்தினத்தின் தயாரிப்பில் இருக்கும் படமும் 'ராவணன்'தான்.

வட இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி இராவணன்
அழிவைக் குறிப்பதாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. தற்போத இந்திய அடையாளத் திருநாளாக உலக நகரங்களில் 'தீபாவளி' கொண்டாடப்படும் நிகழ்வுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

தீபாவளி வெளி
ப்பாடுகளை தடபுடலாக்கும் இத்தருணத்தில், இதற்கான மறுவாசிப்பைத் தரும் அழ்வாய்வு நோக்கிலான தேடலாக வெளிவந்துள்ள நூலின் அறிமுகத்திற்காக இதனைப் பகிர்கிறேன். நீண்டு பயணிக்கும் மானிட வாழ்வியலில் மனித மனம் சார்ந்த பக்குவப்படல் எவ்வகையான பரிணாமங்களை இதுவரையில் பெற்றுள்ளது? ஒப்பிடவே வேண்டும். இவ்வாறானவை இனி பகிர்வுச் சரமாகப் பதிவுறும்.
நன்றியுடன்
- முகிலன்

0000000000



நூலில் இருந்து......

உத்தர காண்டம்
(ஒட்டக்கூத்தர்)

சாம்பன் - ஆதி தமிழன் கொல்லப்பட்டான்

இப்படியாக ராமன் அயோத்திபுரியை ஆண்டு வந்தான். ஒரு நாள், பார்ப்பனன் ஒருவன், "ராமா! உன் ஆட்சியில் இவ்வாறு பிராமணக் குழந்தை சாகலாமா?" என்று கத்தினான், கதறினான், அழுதான்.

கூடவே நாரதனும் வந்திருந்தான். அவன் "ராமா! உன்னுடைய ஆட்சியில் வருணக் காப்பு தவறி இருக்குமோ?" என்று வினவினான். வினவி விட்டு, அவனே பதிலும் சொன்னான்.

"ராமா! சூத்திரன் என்பவன், பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று சாதியருக்கும் அடிமைபோல் உழைக்க வேண்டியவன். ஆனால் சூத்திரன் அவ்வாறு செய்யாமல், கால்மேல் காலை வைத்தபடி ஒரு மரத்தடியில் தவம் செய்கிறான், கல்வி கற்கிறான். சிறந்த தவத்திற்கு உரிமையில்லாத ஒரு சூத்திரப் பயல் கடுந்தவம் செய்கிறான். பெருமை தரும் உயர் கல்வியைக் கற்கிறான். சூத்திரன் கற்றதினால் தந்தை இருக்க மகன் மரணம் அடைய நேர்ந்தது" எனச் சொன்னான் நாரதன்.

ராமன், உடனே புறப்பட்டான். வடக்கே தேடினான், மேற்கே தேடினான், கிழக்கே தேடினான், சூத்திரனைக் காண முடியவில்லை. தென்திசைப் பக்கம் அப்பெருந்தவத்தானை, சூத்திரனை, தாமரை புத்த தடாகத்தின் அருகிலிருந்த அரச மரத்தடியில், கால்மேலாய்த் தலை கீழாய் நின்று தவம் செய்வோன் தன்னைக் கண்டான்.

கார்மேக வண்ணத்தான், கருணை மிகுந்த ராமன், "நீ மறையவனோ? மன்னவனோ? வணிகனோ? சூத்திரனோ?" என்றான்.

அவன் "தும்பை மலர் மாலை சூடியவனே! நான் சூத்திர யோனியில் வந்தவன், சூத்திர சாதியில் பிறந்தவன், என் பெயர் சாம்பன். அறிவைப் பெருக்க வேண்டி தவம் செய்கிறேன்" என்று 'உண்மை' சொன்னான்.

ராமன் உறை வாளை உருவினான், அந்தச் சாம்பனின் தலையைச் சீவினான்.

சிறந்த கல்வியைக் கற்ற சூத்திரன் கொல்லப்பட்டான். பார்ப்பனன் மகன் உயிர் பெற்றான்.

தேவர் உலகம் மகிழ்வுற்றது.

-முற்றும்-

0000000000000000000000

இந்நூல் முன்னுரையிலிருந்து......

'இராமாயணம்' நாடே அறிந்த கதை. தமிழர்களைப் பொருத்தவரை சங்க காலத்துப் பாடல்களிலேயே, அக்கதையின் வால் தெரிகிறது. இன்றைய தமிழகத்தில் இராவணனைப் போற்றுவாரும் உள்ளனர். ராமனைப் போற்றுவாரும் வாழ்கின்றனர். இராவணனுடைய பெயரைத் தங்களுடைய வாரிசுகளுக்குச் சூட்டி மகிழும் பெற்றோர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என்பதை அனைவரும் அறிவர்.

வால்மீகியால் எழுதப்பட்டதை ஒட்டியோ அல்லது தழுவியோ இராமாயணத்தை எண்பதிற்கு மேற்பட்டோர் எழுதியுள்ளனர். ஒன்றுக்கொன்று வேறுபட்ட வகையில் அமைந்தவை என்பதனை மயிலாப்பூர் 'சமசுக்கிரதக்' கல்லூரி ஆங்கிலத்தில் வெளியிடு்டுள்ளது என்பதை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கதையின் நாயகன் ராமன் பிராமண தர்மத்தையும், அதற்கு ஆணிவேராக உள்ள நால்வருண்ண தர்மத்தைக் (சாதிப்பாகுபாட்டை) காப்பாற்றுவதற்கு என்றே பிறந்தவன்.

"என்னுடைய மனைவியாகிய சீதையை விட்டுவிடு என்றாலும் விட்டுவிடுவேன்! எனது ஆனால் பிராமணர்களைப் பாதுகாப்பதையோ, அவர்களுடைய தருமத்தைக் காப்பதையோ எள்ளால் விட முடியாது!" என்று தசரத ராமனின் வாயாலேயே சொல்ல வைக்கிறார் வால்மீகி.

பிராமண தர்மத்தையும், அவர்கள் ஆடு, பசு போன்றவைகளைக் கொன்று செய்யும் யாகங்களைச் செய்யவிடாது தடுப்பதும், தன் இனத்தை, வேறு ஓர் இனம் கொன்று அழிக்கும் செயலை எதிர்ப்பதுமே தனது ஆட்சியின் வேலை என்று சொல்லக்கூடிய பவுத்த நெறிக் கொள்கையைப் பின்பற்றுகிறனாகவே ராவணன் திகழ்கிறான். இவ்வாறுதான் ராவணனைச் சித்தரிக்கிறார் வால்மீகி முனிவர்.

இராமன், அத்துமீறி மற்றவர்களின் காடுகளையும், நாடுகளையும் ஆக்கிரமித்து தனது காலடியில் விழுந்து கிடக்கின்றவர்களாக வாலியின் தம்பியையும், ராவணனுடைய தம்பி விபீசணனையும் தனது கதையில் சித்தரிக்கிறார்.

இவை போன்று வேறு பலவும் இக்காவியத்தில் உண்டு என்பதை முன்பே அறிந்தவர்கள்தான் தமிழர்கள்.

இருந்தாலும் இதனை அறியாத ஒரு சிலர் படித்து மகிழவும், சிந்திக்கவும், தன்மானம் பெறவும் இச்சிறு நூல் உதவும் என்ற நம்பிக்கையோடுதான் இதனை வெளியிடுகிறோம்.

நான் ஒரு சுயமரியாதைக்காரன். ராமாயணத்தை ஏற்றுக்கொள்ளாதவன். ஆனாலும் மக்கள் எல்லாவிதமான கருத்துகளையும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் இதனை தமிழாக்கம் செய்துள்ளேன். தவறாக மொழிபெயர்த்துள்ள இடத்தை மட்டிலும் திருத்தியுள்ளேன்.

வால்மீகியின் கருத்தை எந்தவொரு இடத்திலும் நான் சிதைக்கவே இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

இந்த ராமாயணத்தின் சமசுக்கிரதத் தொகுப்பு என்னிடத்திலேயே உள்ளது. அய்யப்படுவோர், வேண்டும்போது எனது இல்லம் வந்து ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


- குருவிக்கரம்பை வேலு
00000000000000



வைதீக இலக்கியங்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக அவற்றைப் பயில வேண்டும். மறுவாசிப்புச் செய்ய வேண்டும். 'சீன தேசத்துக்குச் சென்றேனும் அறிவைத் தேடு' என்ற ஓர் இறைதூதர் சொல்லியுள்ளார். சமஸ்கிரதம் தொலைதூர நாட்டு மொழியல்ல. நம் நாட்டிலேயே செயற்கையாகச் 'செய்ய'ப்பட்ட மொழி. இம் மொழியைப் படிப்பதும் இம் மொழியில் புதைக்கப்பட்டுள்ள உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டுவருவதும் அரிய செயலல்ல. தோழர் வேலு 'வால்மீகி இராமாயணம்' மூலம் இதைத் தொடங்கி வைத்துள்ளார். இளந் தலைமுறை இப்பணியை ஏற்று இன்னும் விரிவுபடுத்திச் செல்லவேண்டும்.
- இந்நூ லை வெளியிட்ட சாளரம் வைகறை
000000000000


நூல் : வால்மீகி இராமாயணம்
தமிழில் : குருவிக்கரம்பை வேலு
வெளியீடு : சாளரம், சென்னை

No comments:

Post a Comment