Sunday 6 September 2009

சுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (13)


சுவட்டுச் சரம் -1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (13)

- குணன்


இன்று, உலகின் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழரிடையே மிகுந்த இடைவெளி தோன்றி,மொழி வேற்றுமை காரணமாக,ஊர்,உறவு காரணமாகத்தானும்,குறிப்பாக,இளைய தலைமுறையினரிடையே காத்திரமான எண்ணப் பரிமாற்றங்களை வைத்திருப்பதில்,மொழி வேறாக, இருப்பதால் கடினமாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.உதாரணமாக,பின்லாந்து,டென்மார்க்,சுவிடன், நோர்வே,ஜேர்மனி,ஒல்லாந்து,பிரான்ஸ்,இங்கிலாந்து போன்ற,ஒரே குடுபம்பத்தின் புதிய தலைமுறையினர், தமது பெற்றோரின் மொழியில் கற்றறிவு பெறாது,வெறும் பேச்சு மொழியில் மட்டும்,உரையாடுவதால், உறவை வளர்க்கப் போதும் என்ற ஒரு பொய்மைதான் வளர்ந்துள்ளது.இத்தகைய நிலை,இன, மொழி அடையாளங்களை வெளிப்படுத்தவோ,வளர்க்கவோ,போதுமானதாக இருக்கப் போவதில்லை!


இங்கே அதிதி, அங்கே அகதி, எங்கே தமிழ் மானுடர்?


உறைவிடம் நாடி, ஊரைவிட்டு வந்தவர்கள் என்ற உண்மையை மறந்து, உலா வரும் பொய்யான கோலத்துள், மேலை நாடுகளில் வாழும் நாம் மாறிவிட்டால், வருங்காலம் நிச்சயம் காணமால் போய்விடலாம்! இங்கு வந்தவர்கள், வாழும் நாடுகளில் நிரந்தரவாசிகளாகிவிட்டால், எங்கள் இருப்பு உறுதிப்பட்தாக நினைப்பது தவறாகும் என்பதற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த இஸ்ரேலிய மக்களே சான்றாகும். நாமும், எமது தலைமுறையினரும், தம்மை யாரென்ற தேசிய அடையாளங்களுடன், காத்து வாழத் தலைப்படுவதுதான் உண்மையான கோட்பாடன்றி, வந்த நாடுகளில் நாம் யாரென்ற நிலையைத் துறந்தோ-மறந்தோ இருந்தால், அதுவே யதார்த்தமாகி விடமாட்டாது!
இன்று வாழும் நாட்டில், ஒழுக்கம், பண்பு காத்து வாழக்கூடாது என்பது என் கருத்தல்ல. பதிலுக்கு -முதல் நாம் நல்ல தமிழர்களாக வாழாது, மறைந்து கொண்டு, நல்ல ஆங்கிலேயர்கள், நல்ல பிரஞசுக்காரர்கள், நல்ல ஜேர்மனியர்கள், நல்ல கனேடியர்கள், நல்ல அவுஸ்திரேலியர்கள் மற்றும் வாழும் நாடுகளின் இனத்தவர்களாக -வாழும் நாடுகளில்- வந்த விருந்தினர்- அதிதிகள் என்ற நினைப்பில், காலத்தை தொலைப் பவர்களாக மறந்தும் மாறிவிடக்கூடாது! அவ்வாறு ஒருநிலைமைக்கு ஆளாகாமல், என்றைக்காவது எமது முந்தைய தலைமுறை தலை முறையாக வாழ்ந்த தாய் மண்ணை நாடவேண்டியதென்பது, ஒருநாள் ஏற்படவே செய்யும்! இங்கு நாம் வந்து வாழ்ந்து, வாழ்க்கைப் பாதையில் வெற்றி கண்டு, எதனைச் சாதித்தோம்? என்ற சுயவிமர்சனத்துக்கு எம்மை உட்படுத்தாவிட்டால், நாம் சந்தித்ததெல்லாம் வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை எப்படி எடைபோடமுடியும்? தமிழர்கள், பெரும்பாலும், யாரையும் அண்டி வாழ்வதும், மண்டியிடுவதும் மட்டுமே கைக்கொள்வதால், தமது தனித்துவத்தில் நம்பிக்கை இழந்து, வீரமற்று கோழைகளாகி விடுகிறார்கள் என்று, “தென் இந்தியா பற்றிய தனது கருத்தை, கார்ல் மாக்ஸ்” Fறிப்பிட்டு, சீக்கிய, ராஜ்புத்திரர் போர்க்குணம் படைத்தவர்களல்லர் (தமிழர் உட்பட தென் இந்தியர்கள்!), என்பதற்கு, அண்மையில், ஈழத்தமிழ் அப்பாவிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களில், ஆயிரம், ஆயிரம் என மக்கள் அடைந்த கொடுமைகளை, தென்னிந்தியர்கள்(திராவிடப் பெருங்குடியில் வந்தவர்கள் என பீத்திக்கொண்டிருப்பவர்கள்!) அவலங்களுக்குள்ளானவர்களுக்கு, எப்படிக்குரல் கொடுத்தார்கள் எனபதையும், அதே காலப் பகுதியில், சீக்கிய மத குரு ஒருவர், மற்றொரு சீக்கிய பிரிவினரால் கொலை செய்யப் பட்டதை அறிந்தவுடன், அதனைக் கண்டித்து, பஞ்சாப்பில் ஏற்படுத்திய தாக்கம் முழு இந்தியாவிலும் எதிரொலிக்கச் செய்தது! இதிலிருந்து கார்ல் மார்க்ஸ் கூறியது,நருPபிக்கப்பட்டது! ஆனாலும்,தமிழகத்தில்(தமிங்கழம்!) ஈழத்தமிழர்களுக்கு, "டைகர் பாம்" (பொம் அல்ல!) தடவுவதைப்போல, (ஊழலில் உழுத்துப்போனவர்கள் உட்பட) தெருவோர கூத்துப்போட்டுக் காட்டித் தாமே தமக்கு பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வணங்கி, நாட்டையே நாறடித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மையாகும்! புலம் பெயர் வாழ்விடத்தில், குழந்தை பிறந்தால் பெயரிடல் என்பது தத்தமது அடையாளத் தொடரின் இருப்புக்கான முக்கியத்துவமானது. இதற்கான தார்மீகப் பொறுப்பு பெற்றவர்களுக்கானது என்பதை மறந்தவராகி, வீட்டில் வளரும் சிறு பிராணிகளுக்கு மட்டும் வைக்கும் பெயர் போல, குடியுரிமைக்காக பெயர் வைப்பதென்பது ஏற்கமுடியுமா? தமிழன் தடுமாற நேர்ந்ததால் -தடம் மாறிவிடலாமா? கூடவே கூடாது!

புலப்பெயர்வில் பெற்றுக் கொண்டதா, கற்றுக்கொண்டதா, தொலைக்கப்பட்டதா அதிகம்?


இப்படி ஒரு தலைப்பில், அண்மைக்காலமாக அறிமுகமாகி, மேலை நாடுகளில், வாடிக்கையாளர்களாக புலம்பெயர் குறிப்பாக ஈழத்தமிழர்கள் இல்லங்களில்(இலவசமாக சில வாரங்கள் காண முடிந்த பின்னர்) காட்சி ஒலிபரப்புக்களின் வானொளிக் கதவுகளைச் சாற்றிட முன்னர், வலம்வரும் "ஆடரங்கங்க, தேடலற்ற அரட்டை" போன்ற பல்வேறு பட்ட, மலினங்களைப் போலன்றி, ஒரு கருத்தாழமிக்க நிகழ்ச்சி அல்லது நிகழச்சிகள் எங்காவதாயினும் நடந்தேறியிருந்தால் அதனை அனைவருமே கண்கொண்டும் பார்த்தும், காதுகளால் கேட்டும், நெஞ்சில் நிறுத்தி, நிலைமையை எண்ணிப்பார்த்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அவ்வாறான, சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி பற்றி எங்கும்-எதிலும் தந்திருப்பின், அதனை வரவேற்போம்! ஆயினும், வானளாவிடும், பல்வகை வெகுசன ஊடகங்களாகவும், தனி அல்லது கூட்டு வர்த்தகப் பதாதகையின் கீழ், உருண்டோடிக் கொண்டிருப்பது என்பது, அரைத்த மாவைத் திருப்பித் திருப்பி அரைப்பதைப் போல, இரவும் பகலும் ஒன்றை மட்டும் புகுத்தும், வர்த்தகத் தந்திரோபாய நோக்கம், இலவச கலர்த் தொலைக்காட்சியுடன் இணைப்பு (மின்சார வெட்டு உட்பட) வழங்குவதும், இவற்றுக்கு மேலாக, தமிழ் மக்களை மட்டரகமாக்கி, தமிழ் மொழியை அறவே புரியாத -தமிங்கில திலகங்களை முன்னிலைப் படுத்தி, தினமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்ற, தமிழகத்தின் வழியில்,“ஈயடித்தான் கதை“போல, அனைத்து நிகழ்ச்சிகளும் (மிக மிக குறைந்தளவிலான எண்ணிப்பார்க்க வைக்கும் நல்லவை தவிர) கொஞ்சம் மாற்றப்பட்ட மீள் ஒளிபரப்பு போல பல நிகழ்ச்சிகளாக அமையவேண்டியதன் தேவைதான் என்ன? என்றவாறு கேட்கக்கூட யாருக்கும் இங்கு உரிமை கிடையாதென்பது சோகம்தான்! பணம், வசதி, நேரம் உள்ளவர்கள், தனிமையால் நேரத்தை செலவு செய்யும் வழி அறியாது உள்ளவர்களுக்கு, இதன் பயன்பாடு ஓர் அரிய வரப்பிரசாதம் என்பது உண்மைதான்! இதனைப் பலரும் பாவிப்பதால் (பயனோ- பாதகமோ!), மவுசு இல்லாமல், ஏன் இதனை இத்தனை பெரும் பொருள் முதலீட்டில், இயக்க முன்வரவேண்டும்? இதனை, "வாங்குவோன்-விற்போன்" என்று மட்டுமன்றி, இதன் விளைவுதான், எப்படி உள்ளது? என்ற கேள்வியும்-மதிப்பீடும் ஏற்படுவதும் தவிர்க்கமுடியாத ஒன்று! சில தனிமனித விருப்பு, வெறுப்பு, மாற்றுக்கருத்து, மதிப்பீடு, எனவரும் போது அதன்பின்னணியில், நிச்சயம், ஓர் மூகஅக்கறையன்றி, வர்த்தக அக்கறை இருக்கமாட்டாது! பல்லினமக்கள், புலம் பெயர்ந்து- கலந்து வாழ்கின்ற நாடுகளில், கடந்த கால்நூற்றாண்டு காலத்தை தாண்டிய நிலையிலும், தாம் வாழ்கின்ற நாடுகளின் காலநிலைக்கேற்றவாறு, உணவு, உடை, உடல் நலம், பொழுது போக்கு, மனநலம், உறவு என, கவனத்தில் எடுத்து வாழாது, வாய், கண் விரும்புவதை மட்டும் விரும்பி, உடல், உள்ளம் பாதிப்புக்குள்ளாகி உயிர் வாழ்வையே கேள்விக் குறியாக மாறும் மாற்றிய நிகழ்வுகள் பல படிப்பினைகளாக புலப்பெயர்வில் காட்டவும் காணவும் முடியும்! தமிழர் வரலாற்றில் மட்டுமன்றி,உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற பல்லினத்தவர்களின் வரலாற்றிலுங்கூட புலப்பெயர்வு பற்றிய நீண்ட வரலாறு பற்றிய செய்திகள் தொடர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்! ஆபிரிக்க, தென்-அமெரிக்க, மத்திய கிழக்கு, ஐரோப்பிய, ஆசிய இன மக்கள் போன்றோர் இடம்பெயர்வுக்கு உள்ளாகப்பட்டிருப்பதைக் காணலாம். மானிடவியலாளர்களின் கருத்தில், மனிதர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து இடம் பெயர்கிறார்கள், இதில் ஒடுக்குமுறை, பொருள் தேடல், இடமாற்றம் போன்றவை பிரதான காரணிகளாகும்!


தமிழர் இடப்பெயர்வுக்கான காரணிகளும் அதன் மறுபக்கங்களும்


18ம் நூற்றாண்டில், ஈழத்தமிழர்கள் ஆங்கிலக் கல்வியறிவில், முன்னணி நிலை எய்தியமையால், ஆங்கில எசமானர்களுக்கு நம்பிக்கையுள்ளவர்கள் என்ற அடைமொழிக்குரியவர்களாக மதிக்கப்பட்டதாற் போலும், இந்தியா, மலேசியா, சிங்கை போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேய எசமானர்களால், அழைத்துச் செல்லப்பட்டு உயர்பதவிகளில் வகித்தவராகினர். இரண்டாம் உலகப்போரில், யப்பானிய படைகளின் கீழ் கைப்பற்றப்பட்ட நாடுகளில், ஆங்கிலேயருக்கு துணைபோனவர்கள் பலர் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் வேறுசிலர், நாட்டைவிட்டு, மீண்டும் ஈழத்திற்கு திரும்பியதுமானதாக சென்ற நூற்றாண்டு வரலாறு பதிவானது. இவ்வாறு ஈழம் திரும்பியோர் சிங்கை-மலேயா பென்சன்மார் சங்கம் அமைத்து புதிய புலப்பெயர்வின் பணக்கார வர்க்கமாக தம்மை அடையாளப்படுத்தியது, 1950 முதல் ஒரு வரலாறு தான்!


தமிழர் பற்றிய ஆங்கில அறிஞர் அன்ரனி பெர்க்கிஸின் கருத்து


இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்து, பின்னர், நாவலாசிரியராக மாறிய, ஆங்கில எழுத்தாளர், அன்ரனி பெர்க்கிஸ் என்பவர், தமிழரின் வாழ்வியல் பற்றி, நேரடியாக கவனித்து தெரிந்தறிந்தவற்றின் பின்னணியில் எழுதிய,“கிழக்கில் படுக்கை“ (Bed in the East)நாவலில், தமிழ் கதாநாயக-நாயகிகளை உருவாக்கி (இடைக்கிடையே, தமிழ் வசனங்களையும் புகுத்தி) யதார்த்த குணாதிசயங்களையும் சுட்டி, யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆங்கில அரசின் ஆட்சி, சிறப்பாக நடந்தேற காலனித்துவ ஆட்சி நடைபெற்ற நாடுகளில், விசுவாசத்துடன், கடமை புரிந்துள்ளார்கள். இவர்களில் திருவாளர் சுப்பிரமணியம் (Mr.Maniam) ஒருவர்! என்று குறிப்பிட்டிருந்தார்! (They (the Jaffna tamils ) helped the British Masters to run their government !!) என்றவாறு, அன்றைய தமிழரின் புலப்பெயர்வும், இன்றைய பெயர்வுகளுக்கும் இடையே நிலவுகின்ற கருத்துருவாக்கம் எங்கே நகர்த்தியுள்ளது என்பதை சிறிது பார்ப்போம்!



(நினைவுத் துளிகள் சொட்டும் .....)

2 comments:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  2. பதியப்பட வேண்டிய குறிப்புகள். தொடருங்கள்.

    ReplyDelete