Tuesday 28 April 2009

சரம் - 3 மகா நடிகன்

1. மகா நடிகன்

புகழ்பெற்ற றிப்பப்லிக் சதுக்கத்தில் தொடரும் ஈழத்திற்கான கவனயீர்ப்பு போராட்டத்திற்குச் செல்ல இருந்தவேளை ஐங்கரன் தொலைக்காட்சியில் திடீரென புதிய காட்சி இசையில்லாது போய்க்கொண்டிருந்தது. உலகத்தமிழருக்கு நன்கு தெரிந்திருந்த முகம் காணப்பட்டதாலும், அவரது முதிய வயதின் காரணமாகவும் பலரின் கவனம் இங்கு குவிந்ததில் ஆச்சரியமில்லை.
ஆச்சரியமோ ஆச்சரியம்! தமிழ் நாட்டில் என்னதான் நடக்குதோ? வியப்பு உலகெங்கும் பரவியுள்ளதென்பதே எதார்த்த நிலை.
அம்மா தமிழீழம்தான் தீர்வென்கிறார்.
ஐயாவோ சாகும் வரை உண்ணாநிலை(!) என்கிறார்.
ஓட்டு வேட்கைக்காக என்னவெல்லாமோ நடக்கிறது. அங்கே ஈழத்தில் நாதியிழந்த மக்களாக தமிழர்கள் இரத்த்தில் குளிக்கப்படுகிறார்கள். உறவுகளின் நிலைகண்டு கொதித்துக்கிடக்கிறது உலகத் தமிழினம்.

சதுக்கத்தில் பரவலாக பலராலும் பேசப்பட்டது ஐயாவின் நிகழ்த்துக்கலை பற்றியே இருந்தது. அடடா எப்பேர்ப்பட்ட நடிகனை இதுவரையில் இனம்காணாது விட்டிருந்தோமே!
நம்மைக் கவர்ந்த நடிகர்களெல்லாம் மேடையிலும், திரையிலுமே நடித்திருந்தார்கள். ஆனால் தனது இயல்பான நடிப்பாற்றலால் வாழ்நாள் நடிகனாக அதுவும் பாத்திரத்துடன் இயல்புற ஒன்றியதாக நடித்த மகாநடிகனை இனங்காணாதது குற்ற உணர்ச்சியாகவே துருத்தியது. பாரிசில் பெய்துபொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாது மக்கள் தமது கவனயீர்ப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். தண்ணீரில் இயல்பான தோற்றங்கள் மிளிர்ந்து கொண்டிருந்தன.
எண்ணங்களால் அசைபோட்டுக்கொண்டிருந்த மனதில், வேடமிடாது வேடமிட்ட இந்த மகாநடிகனின் முகப்பூச்சு இப்படியா கரைவது?
எண்பதுகளைத்தாண்டியும் இப்படியாக வேடமிடும் எண்ணம் வருவதாக இருந்தால் இவருக்கு தமிழர்களின் சுயமரியாதை தொடர்பாக எப்படியானதொரு எக்காளமான கருத்துரு இருக்கும்?
எனக்கு பதின்மவயதிருந்தபோது படித்த சென் பற்றீஸ் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட முதலாவது முத்தமிழ்விழா நிகழ்வின் மலரில் இவரைப்ற்றியும இவரது மொழியாடல் பற்றியும் எழுதிய கட்டுரையே ஞாபகத்தில் வந்து அருவெறுக்கத் தொடங்கிவிட்டது.
சாக்கடைக்குள் முழுவதுமாக தவறிவிழுந்ததும் அவசரமா முகத்தைத் துடைப்பதுபோல முகத்தைத் துடைக்கிறேன் அட மழைத் தண்ணீர்தான்!

இலங்கைத் தமிழ் மக்களுக்காக சென்னையில் தமிழ்த் திரையுலகம் நடாத்திய உண்ணா விரத நிகழ்வைப் பார்வையிடாதவர்கள் மிகக் குறைந்தளவில்தான் இருக்கமுடியம். இதில் நடிகனாக பலலரயும் கவர்ந்திருந்த ரஜனிகாந் உணர்ச்சிவசப்பட்டவராக 'இந்த ஈழத்தமிழர்களின் கொடும் கொலை வெறியில் ஈடுபடுவோர் நாசமாகப் போவார்கள்!' எனச் சாபமிட்டிருந்தார். இவரது கூற்று ராசபக்சேயை நோக்கியே இருந்தது் ஆனால் இந்த அழிவில் துணைபோய்க்கொண்டிருப்போருக்கும் இது பலிக்கப்போகிறது போலும்.

என்ன இருந்தாலும் ஐயா மகா நடிகன்தான்!! - ஏன் இன்னமும்உலகத்தமிழ் மகா நடிகன் எனும் புதிய பட்டத்தை வழங்கும் பாராட்டுவிழாவை ஏற்படுத்தாமல் இருக்கிறது தமிழ்நாடு சட்டசபை!

அநாமிகன் - பாரீஸ் 2009-0427

2.
பாரீஸ் தொலைத் தொடர்பை வழங்கும் வியாபார நிலையம்- மாலைவேளை, எத்தனை விதமான மனிதத் தோற்றங்கள், நடையுடை பாவனைகள், எத்தனை வகையான குரல்கள், மொழிகள் ஆகா...... பல்தேசியச் சமூகங்கள் வாழும் பாரீசில் இவர்கள் சங்கமிக்கும் ஒரு மையமாகவும் திகழ்வது இப்படியானதொரு இடங்களில் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மனித மனத்தின் ஆறுதலுக்கான உணர்வுகளை வெளிப்படுத்தும் தொலைபேசி மையங்கள் என்றுமே (கோபம், தாகம், காதல், பிரிவு, இழப்பு, நேரடியாகச் சந்தக்க முடியாத பரிதவிப்பு என) உணர்ச்சி மயமாகவே இருக்கும். இப்போதெல்லாம் தொலைபேசி அட்டைகள் எல்லாப் பெயரிலும் கிடைக்கும். தொலைபேசிவிட்டு வருபவர்கள் காசு கொடுக்க வரும்போது அதன் தொகையைக்கண்டு மனக் கொந்தளிப்படைவது வழக்கமானதொன்று.

இதில் வாடிக்கையாளனிடமிருந்து எப்படியாவது கட்டணத்தொகையை அறவிடவேண்டுமென்ற பணி. 'ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்க வேணும்!' முது மொழி நன்றாகத்தான் இருக்கும். ஆக வாடிக்கையாளனின் முகத்தில் மலர்ச்சியை உண்டு பண்ணவேண்டும். இதிலிருந்து வந்ததுதான் மில்லியன். ஒரு ஈரோவை ஒரு மில்லியன் எனச் சொல்வது. அதாவது 5 ஈரோ 40 காசுகள் கட்டணமாக இருந்தால் அதை 5 மில்லியன் 40 எனச் சொல்வது இதைக் கேட்டதும் முதலில் ஒரு அதிர்வு வரும். பின் சிரிப்பு தானாகவே கிளம்பும்.... கேட்டுக் கொண்டிருப்பவர்களின் கவனங்களும் இங்கே மையமிடும்.

இதனால் புன்முறுவலிடும் முகங்களையும், இந்தக்கடை கொஞ்சம் வித்தியாசமானதொரு நல்ல கடை என்னும் நேசவுணர்வுடனான பார்வைகளும் பதிவாகும். இதனால் இவ்வகையான வார்த்தையாடல்கள் நாளாந்தப் பணிகளாகிவிட்டன. தாங்கள் மில்லியனாகச் செலவழிப்பதை மனதில் நிறுத்திய கற்பனையுணர்வுடன் பதிகல்களும் நாணத்துடன் வரும்.
'மில்லியன் இருந்தால் நானேன் இங்கு பிரான்சில் இருக்கப் போறேன்.' அரபு ஆபிரிக்க வாடிக்கையாளர்களின் அதிர்வான பதில் இதாகவே இருப்பது வழமை. போட்டோக் கொப்பி பிரதியெடுக்க வந்திருந்த யூதர்கள் வழக்கம்போல் தமது மகத்தின் வழியாக எவ்வகையான பிரதிபலிப்புகளையும் காட்டாது தமது கடமையிலேயே கண்ணாகிச் சென்றுவிடுவார்கள். ஆனால் பிரஞ்சு மக்களிடம் விசனம் வெளிப்படவே செய்யும் ஆனாலும் நகைச்சுவையாக எண்ணிச் சிரித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

இன்று இளம் ஆபிரிக்கத் தம்பதி தொலைபேசி அட்டை வாங்க வந்திருந்தது. இவர்கள் கேட்ட அட்டை 'சூறிர் அவ்றிக்கா' (சிரிக்கும் ஆபிரிக்கா)என்னுடன் பணியாற்றும் விற்பனையாளர் கேட்கிறார்
'சிரிக்காது எப்படி சிரிக்கும் ஆபிரிகாவைப் பெறமுடியும்?'
பெண்ணிடமிருந்து சிரிப்பு கிளம்புகிறது. ஆண் காசைக் கொடுக்க அவர்கள் சென்றுவிடுகிறார்கள்.
வழமையான பணிகளுடன் காலம் நகருகிறது்

மாலை ஒன்பது மணி இப்பத்தான் இருள் கவியத் தொடங்குகிறது. சற்று முன் தொபேசி அட்டை வாங்கிய குடும்பத்தின் தலைவன் மீளவும் வந்திருந்தான். அனேகமாக கார்டு வாங்கியவர்கள் திரும்பவும் வந்தால் நாம்தான் பதைபதைப்புக்குள்ளாவது வழமை 'கார்ட்டு வேலை செய்யவில்லையோ?' ஆனால் வந்தவன் சிரிக்கிறான் சிரிக்கிறான்..... சிரித்துக் காண்டிருக்கிறான்.... சும்மா சொல்லக்கூடாது சிரிப்பைப் போல் உடனடியாகத் தொற்றக்கூடியது எதுவென இதுவரையில் எனக்குத் தெரியவில்லை. எங்களையும் அறியாது முகம் மலர
"என்ன?" என்று கேட்கிறோம்.
"நான் இப்ப தனியாளாக வந்திருக்கிறன், அதுதான் மனங்கொள்ளச் சிரிக்கிறேன். போட்டோப் கொப்பி எடுக்கவேண்டும்!" என்றானே பார்க்கலாம்.

எம்மையும் அறியாது ஒருவரையொருவர் பார்க்கிறோம் நமட்டுச்சிரிப்பு வெடியாகிறது. ஆகா உலக மக்களில் மனம்விட்டு சிரிப்பவர்களைப் பட்டியலிட்டால் முதலிடத்தில் வருபவர்கள் ஆபிரிக்கர்களாகத்தான் இருப்பார்கள்.
- சந்திரன் -பாரீஸ் 28.04.2009


3. மே நாள்

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவீர்! அனைத்துச் சுரண்டல்களுமற்ற மனித நேய உலகிற்கான விடியலை நோக்கி அடியெடுப்போம்!!
"அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்!"

வரலாற்றுக் குறிப்பு:
ஜூலை 14 அன்று சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
-முகிலன் 01052009

1 comment:

  1. பல் தேசிய மக்களுடன் வாழும் வாய்ப்புள்ளவர்கள் பதியும் வித்தியாசமான கருத்துச் சரங்களாக தோரணம் பிரகாசிக்கட்டும்
    - அருந்தா

    ReplyDelete