Saturday 29 June 2013

"வந்த குரங்கு வரத்தான் செய்யும்!"

கதைச் சரம் 17   "வந்த குரங்கு வரத்தான் செய்யும்!"
செவிவழிக் கதை-14 :

"வந்த குரங்கு வரத்தான் செய்யும்!"


விவசாயத்தை நம்பியிருக்கும் ஊர் அச்சிறு கிராமம். பகலில் பலரது நடமாட்டமும் கத்தரிவெருளிகளும் இருப்பதால் பறவையினங்களினால் அதிக அழிவு ஏற்படுபதில்லை. இரவுகள் அழிவுகளின்  அலங்கோலங்களாகி அந்த ஊர் விவசாயிகளை பெரும் அவலத்துக்குள்ளாகியனவாகவே கழியும். குரங்குப் பட்டாளம்  நாசம் செய்வதால்  இதனைத் தடுக்க பெருமளவில் இரவுகளில் காவல் இருக்கும் நிலையில் இருந்தார்கள் கிராமவாசிகள். பரண் கட்டியும் ஆங்காங்கே தீப்பந்தம் வைத்தும் சுழற்சி முறையில் கிராமவாசிகளால் காவல் காக்கப்பட்டு வந்தது.

கல்யாண விடயமாக வந்து தங்கியிருந்த அயலூர்க்காரர், இவர்கள் படும் அவலத்தைப் பார்த்து "குரங்குக்காக இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? நம்ம ஊர்ப் பூசாரியை வரவழைத்து உரிய பூசையைச் செய்துவிட்டால் இந்தக் குரங்குக் கூட்டம் இங்கே தலைவைச்சுப் படுக்காது" என்றார். இதனைக் கேட்ட கிராமவாசிகள் தங்களுக்குள் பேசினார்கள்.
'பூசை வைச்சால் குரங்குகள் இவ்விடம் வராதா? இது தேவையில்லாத முயற்சி!!' என சில இளந்தாலிகள் பரிகசித்தார்கள். ஆனாலும் கூடியிருந்த ஊர்ப் பெரிசுகள்  'பூசாரியை வரவழைத்துச் செய்தான் பார்ப்போமே!' என்ற முடிவுக்கே வந்தடைந்தார்கள்.
முறைப்படியாக பூசாரிக்கான அழைப்பு கிராமப் பெரிசுகளால் மேற்கொள்ளப்பட்டது.  பூசாரியும் இவர்களின் நிலையை நன்கு கேட்டறந்தது விட்டு அடுத்த வெள்ளி இரவு பூசை நடாத்த நாள் குறித்தார். இதற்காக 101 வெற்றிலை, 101 பாக்கு, 101 தேங்காய், 101 தேசிக்காய், 101 மாம்பழம், 101 செவ்வரத்தம் இளம்பூ மொட்டு (அதிகாலையில் மலரக்கூடியது), 101 பந்தம், 101 சேவல், 101 முட்டி கள்ளு, 101 ரூபா காசு, தீ மூட்ட அடுப்பு இதற்கானவை எனவாகக் கோரிக்கை இருந்ததால் ஊரே படப்பாகியது. புசை முடிந்ததும் ஊர் மக்கள் அனைவருக்கும் பொது உணவென முடிவாகியிருந்ததால் ஊர் கூடியெடுத்த பெருமெடுப்பிலான பூசையாக மேளதாள ஒலிகளுடன் அந்த வெள்ளி இரவு அமைந்தது.
என்ன ஆச்சரியம்!! காவலில்லாதிருந்த அன்றிரவு ஒரு குரங்குதானும் வரவேயில்லை. இதனால்  பூசையையும், பூசாரியையும் மதிப்பாகச் சிலாகித்தனர் கிராமவாசிகள். 'கிராமத்தின் எல்லைகளில் மூட்டப்பட்ட தீயை அணைக்ககூடாது' எனவாக பூசாரி கட்டளையிட்டிருந்ததால் அவை ஆங்காங்கே புகைந்த வண்ணம் இருந்தன.
சனியன்று இரவும் குரங்கள் வரவில்லை. ஆனால் வழமைபோல் காவலில் இருந்தார்கள். அடுத்த நாள் காவலில் இருப்பதில்லை என முடிவாகி எல்லோரும் படுத்து விட்டார்கள். ஆனாலும் குரங்குகள் ஞாயிறன்றும் வரவில்லை. இரவுகளில், காவல்காக்கும் வேலை இனியில்லையென ஊராருக்குப் பெரும் மகிழ்ச்சி.
அந்தோ பரிதாபம்!!, செவ்வாய் அதிகாலை சோகமென விடிந்தது. பெரிதொரு குரங்குக் கூட்டம் அக்கிராமத் தோட்டத்தினுள் புகுந்து அட்டகாசம் பண்ணிவிட்டிருந்தது.
அழிவின் அலங்கோலங்களைக் கண்ட, ஊராக்களுக்குக் கடுமையான கோவம். அத்தனை கோவத்துக்கும் உரியவராகினார் பூசாரி. ஆங்காங்கே கூடிக் கதைப்பவர்களால் ஊர் அல்லோக கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.
கிராமமே திரண்டெழுந்து நியாயம் கேட்க பூசாரியிடம் செல்வதாக முடிவாயிற்று. அயலூர் என்பதால் அனைவரும் செல்ல முடியாதிருந்தது. இதனால் ஊர்ப் பெரிசுகளும், இளைஞர்களும் செல்வதெனவாக முடிவானது. இளைஞர்கள் பொல்லுத் தடிகளுடன் பூசாரியை இரண்டிலொன்று பார்த்துவிடுவதெனவாகவே இருந்தனர்.

ஊரே திரண்டுவரும் காட்சிக் கண்டு மலைப்புறாமல் அவரது திண்ணையில் அமர்ந்திருந்வாறு பூசாரி சிரித்துக் கொண்டிருந்தார். இவரது இந்த அசாத்திய நிலையால் கூட்டம் கொஞ்சம் நிதானிக்கவே செய்தது.  ஊர்ச்சனங்கள் தங்களுக்கேற்ப்பட்ட அழிவை கலங்கிவாறு கோவத்துடன் விபரித்தார்கள்.
எல்லாவற்றையும் கேட்ட பூசாரி, "அன்று நான் சொன்ன மந்திரங்களை நீங்கள் யாரும் கேட்டிருந்திருதீர்களா? அப்படி நடந்திருந்தால் இந்நிலை வந்திருக்காதே!!" என்றார்  நிதானமாக.
"நீங்கள் யாரும் கேட்கும் நிலையிலா இருந்தீர்கள்! ஆடிப் பாடிக் கும்மாளமிட்டுக் கொண்டுதானே இருந்தீர்கள்!!" எனவாக எல்லோரது முகத்தையும் பார்த்துச் சொன்னார்.
சும்மா சொல்லக் கூடாது கூட்டம் மூச்சுவிடும் சத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும், "சரி பூசாரியாரே! அப்படியென்னதான் சொன்னீர்கள் மந்திரமாக?" எனவாக ஒரு குரல் ஒலிக்கத்தான் செய்தது.
"அப்படிக் கேளுங்கள்!!" எனச் சொன்ன பூசாரி, தனது தொண்டையைக் கனைத்து சரிசெய்துவிட்டுத் தொர்ந்தார்....
"வந்த குரங்கு வரத்தான் செய்யும்!
வராத குரங்கு வராது!!
செத்த குரங்கு சென்மத்திலும் வரவே வராது!!"
கூட்டம் விக்கித்துபோனது.


(நான் வாழ்ந்த கரம்பன் கிராமத்தில் எனது பதின்ம வயது காலத்தில் எனது தந்தையார் மூலம் கேட்கப்பட்ட கதை)
-முகிலன் 
29.06.2013 பாரீசு

(இக்கதை சென்னையில் இருந்து வெளியாகும் 'காக்கைச் சிறகினிலே' யூலை 2014 இலக்கிய இதழில் அச்சு வாகனமேறியிருக்கிறது)

No comments:

Post a Comment