Showing posts with label பந்தல் - 4. Show all posts
Showing posts with label பந்தல் - 4. Show all posts

Wednesday, 2 September 2009

கதைச் சரம் - 13 சோதிடரின் மொழியாடல் திறன்


கதைச் சரம் - 13
செவி வழிக் கதை - 11

சோதிடரின் மொழியாடல் திறன்

முன்னொரு காலத்தில் வாழ்ந்த அந்த இளைய இராசாவுக்கு சோதிடத்தால் ஒரு பிரச்சினை வந்தது. இளம் வயதில் பட்டமேற்றிருந்த இந்த இராசா அதிகமான துடிப்புடன் பணிகளை ஆற்றியதால் மக்களிடததில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தான். மட்டமளிப்பின் போது அரசவை தலைமை சோதிடர் அதிகம் பேசாதவராக இருந்தது அவரின் கீழ் பணியாற்றிய சோதிடக் குழுமத்திற்கும் சங்கடமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் பட்டமளிப்பு நாளுக்கு முன்னர் நிகழ்ந்த உரையாடல்தான் காரணம்.

மக்களிடம் நன்னமதிப்பைப் பெற்றிருந்த வயதான இராசாவின் மறைவினால் தலைமைப்பொறுப்பு இந்த இளவரசனுக்குக் கிட்டியது. அந்த இராசாவுக்கு முதலில் பிறந்த அறுவரும் பெண்கள், இவன்தான் கடைக்குட்டியாக அந்த அரண்மனையில் வந்த ஆண் வாரிசு. சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவனாகி வளர்ந்து வந்த இளவரசருக்கு தந்தையின் திடீர் இழப்பால், ஆட்சி பீடமேறவேண்டி வந்தது. இதற்காக மூத்த மந்திரிகளும், நிர்வாக அதிகாரிகளும் செய்த ஆலோசனையில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றத்தில்தான் பிரச்சனையே தோன்றியிருந்தது.

"இளவரசே! தங்களது சோதிடத்தில் ஒரு கண்டம் இருக்கிறது. நீங்கள் அவசரப்படக்கூடாது!..... இப்போது, நீங்கள் அரசபீடமேறினால், உங்கள் முன்னிலையில் தங்களது குடும்ப அங்கத்தவர்கள் பலியாக நேரிடும்." இதுதான் தலைமை சோதிடர் அக்கறையாகச் சொன்ன கணிப்பு.

இதைக்கேட்டு வெகுண்டெழுந்த இளையவரான இளவரசர் "சோதிடமும் மண்ணாங்கட்டியும்!........ நான் இப்ப பதவியேற்காதுவிட்டால் நாட்டை யார்தான் காப்பது?" என்றவாறு நடக்கவேண்டியவற்றை ஆணையிட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

பதவியை ஏற்றிருந்தபோதிலும் இராசாவுக்கு சோதிடரின் வார்த்தகளிலான சங்கடம் தொடரத்தான் செய்தது. எனவே 'வேறு சோதிடர்களை வரவழைத்து இன்னுமொரு முறை பார்த்தால் என்ன?' எனவாக ஓடிய தன் சிந்தனையை தலைமை மந்திரியிடம் தெரிவிக்க இதற்கான ஏற்பாடுகளை மந்திரிசபை செய்தது.

இதன்படி அயலூரில் பிரபல்யமாக இருந்த இன்னுமொரு சோதிடர் வரவழைக்கப்பட்டு பழைய குறிப்புகளைக் கொடுக்காமல், புதியதாகக் கணித்துப் பலன் சொல்லும்படி கேட்கப்பட்டது. அவரும் மூன்று நாள் அவகாசமெடுத்து தனது கணிப்புகளுடன் வந்தார். அன்று மந்திரி சபை இதற்காக விசேட கூட்டமொன்றை நடாத்தியது.

இதில், "மன்னா! தங்களது சோதிடப்படி ஒரு குறை இருக்கிறது. இதன்படி தங்கள் முன்னிலையில் தங்களது குடும்ப அங்கத்தவர்களது மரணங்கள் நிகழப்போகின்றன!" என அமைதியாகக் கவலையுடன் தெரிவித்தார் அந்தப் புதுச் சோதிடர். அரசவை திகைத்துப் போனது. மன்னன் ஆத்திரத்தால் வெகுண்டெழுந்தான். "யாரங்கே! இந்தச் சோதிடரை அடையுங்கள் சிறையில்..." ஆணை பிறந்தது.

மந்திரிமார் செய்வதறியாது தடுமாறினர். எல்லாவற்றுக்கும் காரணமான அரண்மனைத் தலைமைச் சோதிடரும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் கீழ் வேலை செய்தவர்களையும் சிறையில் அடைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிலர் தலைமறைவாகினர். சிலர் பிடிபட்டனர்.

கொஞ்சக் காலம் செல்ல இராசாவின் அம்மாவாகிய மகாராணியும் நோய்வாய்பட்டவராகி காலமானார். ஆனால் அந்த ஊரில் மக்கள் சோதிடம் பற்றி குசுகுசுப்பதே இலலை. 'ஏன் வீண் வம்பு?' என தத்தமது சோலிகளைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.

இப்படியாகக் கழிந்து கொண்டிருந்த வேளையில், வெளியூரைச் சேர்ந்த ஒருவன் அவ்வூருக்கு வந்திருந்தான். நிமிர்ந்த நடையும், குறுந்தாடியும், தோழில் தொங்கும் பையில் சுவடிகளுமாக இருந்த அவனைப் பார்க்கும் போது நன்றாகக் கல்வியறிவு பெற்ற ஞானியாகத் திகழந்ததால் பலரும் அவனையணுகி குசலம் விசாரித்தனர். ஆனால் அவனோ ஏதுமே பேசாது சிரிதவாறு இருந்ததால் விடையம் அரண்மனைக்குச் சென்றது. தலைமை மந்திரி விசாரித்து வருமாறு தனது செயலாளரை அனுப்பினார்.

"ஐயா! வணக்கம்!! நான் அரண்மனை பதிவாளர். தாங்கள் யார்? இந்த ஊருக்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தங்கப்போகிறீர்கள்? " என்றார் மரியாதையுடன் செயலாளர்.

"நான் ஒரு சோதிடன். உங்கள் இராசாவுக்குச் சோதிடம் கணித்துச் சொல்ல வந்திருக்கிறேன்." என்றார் ஒரு புன்முறுவலோடு. தலைமைப் பதிவாளர் உட்பட அனைவரும் திகைத்துப் போயினர்.
"ஐயா!, நீங்கள் வழிதவறி இந்த நாட்டுக்கு வந்துள்ளீர்களோ தெரியவில்லை. இங்கிருந்தால் சிறைக்குச் செல்ல வேண்டிவரலாம்..." என்றார் தலைமை அதிகாரி அக்கறையுடன்.

"ஞான் அனைத்தும் அறிந்தவன்!" என்றார் சிரித்தவாறு வழிப்போக்கனாக வந்திருந்தவர்.

'அட இப்பேர்ப்பட்ட பைத்தியக்காரனை இப்பத்தான் முதன்முதலாகப் பார்க்கிறன். வலிய வந்து சிறைக்குப் போக இருக்கிறானே!' என ஓடிய சிந்தனையால் தலைமை அதிகாரி தனக்குள் சிரித்துக்கொண்டவராக, "ஐயா, இந்த நாட்டு அரசபையில் சோதிடத்திற்கு இடமில்லை. இருந்தாலும் தங்களது கோரிக்கையை இராசாவின் கவனத்துக்குக் கொண்டுபோய் முடிவுடன் வருகிறேன்" என்று சொல்லி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.

புதிய சோதிடர் நாட்டுக்குள் வந்துள்ள செய்தி காட்டுத் தீயாகப் பரவ மக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடினர். அரண்மனை அமைதியாக இருந்தது. தலைமை மந்திரிக்கும் பிறருக்கும் இத்தகவலை எப்படி இராசாவுக்குச் சொல்வதென்றே தெரியவில்லை. நேரம் திக் திக் எனவாகக் கழிந்துகொண்டிருந்தது. 'சரி, வருவது வரட்டும்!' என்ற முடிவோடு தலைமை மந்திரி இராசாவிடம் சொல்லவதென தன்னைத் தயார் செய்தவாறு எழுந்து சென்றார். மற்றைய அனைவரும் மறைந்திருந்தவாறு நடப்பதை உற்று அவதானித்தனர்.

"இராசாவே! வணக்கம்!! நம்ம நாட்டிற்கு சோதிடம் சொல்வதற்காக ஒரு புதியவர் வந்துள்ளார்!" தலைமை மந்திரி.

இராசாவின் முகத்தில் ஆச்சரிய உணர்வு வந்து மறைந்தது. "புதிய சோதிடனா? நம்ம நாட்டுக்கா?..." இராசாவின் வார்த்தைகளில் வியப்பும் இருந்தது, வந்துள்ள சோதிடனின் தற்துணிச்சல் தொடர்பான ஆர்வமும் இருந்தது. ஒரு கணம் யோசித்தவராக பேசாதிருந்தார்.

இதனை உணர்ந்த மந்திரி "அவரிடம் நம்ம நாட்டு சட்டதிட்டங்களைக் கூறியிருக்கிறேன். நன்றாகப் படித்த மேதையாக அவரது பேச்சு இருக்கிறது...." என்றார்.

நீண்ட காலமாகச் சோதிடம் பார்க்காதிருந்த இடைவெளியும் சோதிடனின் துணிவும் இராவிடம் மனமாற்றத்தைக் கொண்டுவந்தது. "சரி! இவரையும் ஒரு முறை பார்த்துவிடுவோம். நாள் குறித்து அழைத்து வாருங்கள். அவருக்குத் தேவைப்பட்டதைச் செய்யுங்கள். ஆனால் தவறாகச் சொன்னால் கண்டிப்பாகச் சிறைதான் என்பதையும் கூறிவிடுங்கள்" என்றார் இராசா.

இராசா ஏற்றுக்கொண்டதானது அரண்மனையில் நிலவிய இறுக்கத்தைக் குறைத்தது. எல்லாமே வேகமாக நடந்தன. குறிக்கப்பட்ட நாளில் அரண்மனை சோதிடக்கூறலுக்காகக் கூடியது. பெரும்பாலான மக்கள் குழுமியிருந்தனர். 'புதிய சோதிடர் என்னதான் சொல்லப்போகிறார்? என்னதான் நடக்கப்போகுதோ?' என்பதாகவே பெரும்பாலானோரின் கருத்து இருந்தது.

புதிய சோதிடர் கம்பீரமாக எழுந்து நடந்து வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இக்காட்சியால் அனைவரும் மெங்மறந்தவர்களாகி, தத்தமது காதுகளைத் தீட்டியவாறிருந்தனர்.
"மன்னா! நீ மிகப் பெரிய அதிஷ்டக்காரன்! மிக மிக நீண்ட ஆயுள் கொண்ட யோகக்காரன்!! மிக மிக அதிக காலம் அரசபையில் இருந்து உன் நாட்டு மக்களுக்கு நல்லாட்சியையும் உன் குடும்பத்தார் அனைவருக்குமான நல்வாழ்வுக்கும் ஆதாரமாக இருக்கப் போகிறவன். இதனால்தான் உனக்கு இளவயதில் பதவிகிட்டியுள்ளது. நான் இதுவரையில் பார்த்த சாதகக் குறிப்புகளில் மிக மிக அதிகமாக ஆயுள் உள்ள சாதகம் உன்னுடையதுதான்!" என்ற முதற்கருத்தே இராசாவையும், சபையையும் வசீகரித்தது. இதனால் எழுந்த கரவொலி வானைப் பிளந்தது.

இராசா கிறங்கிப்போனவரானார். எழுந்து சென்று சோதிடரின் கையைக் குலுக்கி நன்றி தெரிவித்தார். "சோதிடரே! இப்படியாக எம்மைக் கவர்ந்த தங்களுக்கு ஏதாவது பரிசு தர விருப்பமாக இருக்கிறது. விரும்பியதைக் கேளுங்கள்!!" என்றார்.

"யான் கேட்பதைத் தங்களால் தர முடியுமா?" சோதிடர் இழுத்தார்.
"தயங்காமல் கேளுங்கள்" இராசாவிடம் உறுதி இருந்தது.
"மன்னா! தங்களால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சோதிடர்களை விடுவிக்க முடியுமானால் நான் மிகுந்த நன்றியுடையவானாவேன்." என்றார் பவ்வியமாக சோதிடர்.

ஆச்சரியத்தால் திகைத்தது சபை. சோதிடரின் பெருந்தன்மை இராசாவைக் கவர்ந்தது. தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கழற்றி புதிய சோதிடருக்கு அணிவித்து "தங்களது கோரிக்கையை இப்போதே ஏற்றுக் கொள்கிறேன்!" என்றார் சிரித்தவாறு.

"நன்றி! நன்றி" என்றார் பணிவாக சோதிடர். சபை மீண்டும் கரவொலி எழுப்பி மகிழ்வை ஏற்றுக் கொண்டது.

சிறை மீண்ட சோதிடர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சந்தோசமோ சந்தோசம். இதற்குக் காரணமாகவிருந்த அந்தப் புதிய சோதிடருக்கு பாராட்டு நிகழ்வொன்று செய்வதென தீர்மானமாயிற்று.

சிறப்பு நிகழ்வு மகிழ்வாக நடந்து கொண்டிருந்தது. அனைத்துச் சோதிடர்களும் புதிய சோதிடரின் அறிவாற்றலையும் மனிதாபிமானத்தையும் பாராட்டி 'சோதிடக் கலையின் நிபுணன்' எனவாகப் பட்ம் சூட்டினர். அமைதியாகப் புன்முறுவலுடன் கேட்டவாறிருந்தார் புதியவர். கடைசியாக புதிய சோதிடரின் ஏற்புரைக்கான வேளை வந்தது. குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்குமளவில் சபை அமைதியாக இருந்தது. புதியவர் கம்பீரமாகப் பேசத்தொடங்கினார்.

"மதிப்புக்குரியவர்களே! தங்களது பாராட்டுகளுக்கு நன்றிகள். ஆனால் என்னை கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்து விட்டீர்களென்றே தோன்றுகிறது. நானும் உங்களைப் போன்றவன்தான்! உங்களில் ஒருவன்தான்!!...." என்றவாறு சபையைப் பார்க்கிறார். சபை ஆச்சரியத்தால் மெய்மறந்திருந்தது.

"நான் என்னை மிகப்படுத்த விரும்பவில்லை. நன்றாக யோசித்து அலசிப்பாருங்கள்.... இராசாவின் சாதகம் தொடர்பாக நான் என்னதான் புதிதாகச் சொல்லி விட்டேன்?... நீங்கள் சிந்தித்துச் சொன்னதைத்தான் நானும் சொல்லியுள்ளேன்!!.... உற்று அவதானியுங்கள்... நான் சொன்ன சொல்லாடல்தான் கொஞ்சம் வேறுபட்டுள்ளது புரியும்" சபை ஈடாடிப் போனது. கொஞ்ச நேரம் சலசலப்புக்குள்ளானது சபை.
முன்னைய தலைமைச் சோதிடர் எழுந்துவந்து,
"ஆம்! ஐயா!! தங்களது சொல்லாடலின் மகிமையை இபபோதுதான் நாங்கள் உணர்கிறோம். எங்களது அறிவுக் கண்ணைத்திறந்து விட்டுள்ளீர்கள்!!" எனவாகச் சொல்லி புதிய சோதிடரை ஆரத்தழுவினார்.


-முகிலன்
எனது தந்தையாரிடம் சிறுவயதில் கேட்ட கதை
பாரிஸ் செப்டெம்பர் 2009

Friday, 28 August 2009

கதைச் சரம் -12 அல்லாவுக்குப் பகிடி தெரியல்ல...!


கதைச் சரம் -12
செவி வழிக்கதை -10
அல்லாவுக்குப் பகிடி தெரியல்ல...!

காதர் காக்கா மீன் பிடிக்கச் சென்றால் கூடை நிரம்ப மீன் கொண்டுவருவது வழக்கம். அப்படியிருந்தும் ஒரிரு நாட்கள் மீன் பிடிபடாது போவதும் உண்டு. அல்லா மீது அசையாத பக்தி கொண்டவராகையால் எல்லாவற்றையும் அவன் மீது சொல்லி அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

இவர் தூண்டில் மீன்களை உயிருடன்தான் பிடித்து வருவதுதால் சுற்றுவட்டாரத்தில் நன்கு பிரசித்தமாகியிருந்தார். அவரது வள்ளத்தில் இதற்கென்று பெரிய பிளாஸ்டிக் அண்டா எப்போதும் இருக்கும. நீச்சலடிக்கும் மீன்களையும் , வெளியில் போட்ட மீன்களின் உயிர் மூச்சடங்கும் துள்ளலையும் பார்க்கவென்று சிறுசுகள் முதல் பெரிசுகள் வரையில் கூடிக் கும்மாளமிடுவதைக் கேட்கும்போது காதர் காக்காவிற்குக் கொஞ்சம் பெருமிதம்தான். நிமிர்ந்திருந்தவாறு பேரம் பேசுவார். இதனால் காதர் காக்காவின் வள்ளம் கரையொதுங்கும்போது இதற்கெனக் கூட்டம் காத்திருப்பது வழமையாகி இருந்தது.

அவரது மூத்த மகள் குடும்பமாகிச் சென்றுபின், தன் தாய் வீட்டுக்கு இன்று வருவதாகக் கடிதம் எழுதியிருந்ததால் காதர் குடும்பம் அதிகாலையிலேயே எழுந்து பரபரப்பாக வரவேற்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. காதர் அதிகாலைத் தொழுகையுடனேயே மீன் பிடிக்கப் புறப்படடிருந்தார். தனது வள்ளத்தை தோதான இடத்தில் நிறுத்தி தூண்டிலையும் போட்டாயிற்று. சும்மா சொல்க் கூடாது ஒரே சமயத்தில் நான்கு கு}ண்டில் போடக்கூடிய ஆற்றல் உள்ளவர் காதர் காக்கா. ஆனால் இன்று சூரியன் இரண்டு பனை உயரத்துக்கு எழும்பியும் ஒரு மீன் குஞ்சுதானும் படுவதாக இலலை. காதருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்!! 'அட என்னடா இது இன்றைக்குப் பார்த்து இப்படியாயிருக்கே!" என கொஞ்சம் மனம் சங்கடப்பட ஆரம்பித்தது. தூண்டில்களை இழுத்து இழுத்து தூர வீசிப் பார்த்தார். ஒன்றுமே நடக்கவில்லை.

'மனப்பதட்டத்துடன் வள்ளத்தினுள் இருக்கப்படாது' இது அவரது தாத்தா வழியாகக் கேட்டுப் பழகிய பழக்கம். தூண்டில்களை வள்ளத்துடன் இறுகக் கட்டியுள்ளதை இன்னுமொரு தடவை சரிபார்த்தார். தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றிப் போட்டுவிட்டு கண்களை மூடி மனமுருக அல்லாவை வேண்டினார். 'அல்லாவே! இன்று நான் பிடிக்கும் முதல் மீனை உனக்கே தருகிறேன்!" என்பதாக அவரது உருக்கமான வேண்டுதல் அமைந்தது.

என்னே ஆச்சரியம் வள்ளம் விந்தி விந்தி ஒரு பக்கம் இழுக்கப்பட்டது. 'ஆகா! நல்ல மீன் பிடிபட்டுவிட்டது. அல்லா கைவிடமாட்டார்!" மனம் குளிர கண் திறந்த காதர் காக்கா துண்டை எடுத்து தலையில் கட்டியவாறு அல்லாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார். பெரிய மீனொன்று முறையாக மாட்டியிருந்தது. காலையிலிருந்த களைப்யெல்லாம் போன சுவடே தெரியாமல் போயிற்று. பிறகு மற்றத் தூண்டில்களிலும் சில மின்கள் பிடிபட்டன. ஆனால் எல்லாமே சின்னவை.

மதியமாகிக் கொண்டிருந்தது..... 'இனி தாமதிக்கயேலாது.. திரும்பிட வேண்டியதுதான்' என்ற முடிவுடன் தூண்டில்களை மீளப் பெறத் தொடங்கினார். அப்போது அவரது மனசுக்குள் 'அட! வேண்டுதலுக்குரிய மீனாக ஒரு சின்ன மீனைக் கொடுப்பம். பெரிசு மகளுக்குத்தான்.... நல்ல பொரியலும் குளம்பம் வைக்க அந்தமாதிரி இருக்கும்!" எண்ணம் அருமையாகவே இனித்தது. திடீரெ சலக் சலக் கென்று தண்ணீருக்குள் கல்லு விழும் சத்தம் கேட்டது. வள்ளமும் ஒருக்காக் குலுங்கியது. துணுக்குற்றவாற திரும்பிப் பார்த்த காதர் காக்கா மலைத்துப் போனார். அவரது தூண்டிலில் பிடிபட்ட அந்தக் கொழுத்த மீன் துள்ளலுடன் மீளவும் கடலினுள் பாய்ந்து விடடிருந்தது.

தனது நினைப்பை உணர்ந்த காதர் காக்கா, "ஐய்யை...யே....!! நம்ம அல்லாவுக்கு பகிடியும் தெரியல்லை.... வெற்றியும் தெரியல்லை!" என்றார்.



- முகிலன்
சிறு வயதில் ஊர்ப் பாடசாலையில் கேட்ட கதை இது.
பரிஸ் -ஓகஸ்ட் 2009

Thursday, 27 August 2009

சரம் 18 திரையில் பிரகாசிக்கும் அசகாய சூரர்கள்!



சரம் 18 திரையில் பிரகாசிக்கும் அசகாய சூரர்கள்!

திரை அரங்கில் மக்களுடனான எண்ணக் கருத்துகளுடன் சினிமா பார்த்த காலங்கள் கனவாகிப் போய், வீட்டின் வரவேற்பறையின் சுவரில் அகண்ட திரையில் குடும்பமாகவோ தனியாகவோ நாளாந்தம் பார்க்கும் சாதனமாகிவிட்டது. பிரான்சில் புலம்பெயர்ந்துள்ள நம்மவர் வீடுகளில் அநேகமாக செயற்கைக் கோள் அலைவாங்கிளுடனான இணைப்புகள் இருப்பதைக் காணலாம். அப்படியில்லாத வீடுகளிலும் இணையத்துடனான இணைப்பிலுள்ள ஃபிறி பொக்ஸ் (free box) சாதனத்தினூடாக தமிழ்ப்படங்கள் பார்க்கும் வழக்கத்தையும் காணலாம்.

நண்பரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். சினிமா, குறுந்தொடர் எனவாகப் பார்த்த வண்ணமிருக்கும் இல்லத்தரசிகளுக்கு விருந்தினராக நம்மைப் போன்றவர்கள் வந்தாலே இடைஞ்சலாகத்தான் இருக்கும். தாமாகவே எழுந்து உள்ளே சென்றுவிடுவார்கள். வழமையாக செய்திகள், ஆய்வுகள், அது இதுவென நாம் செய்யும் அலசல்களுக்குள் எந்த விறுவிறுப்பையும் அவர்கள் பெற்றதுமில்லை.

கடந்த சில மாங்களாக அதிகம் பேசாத சந்திப்புகள்தான் நிகழந்த வண்ணமிருப்பதால் இப்போது அவர்கள் எழுந்து செல்வதில்லை. திரையில் வழமையான காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும். நாங்களும் ஏதும் பேசாதவர்களாக அவர்களுடன் சேர்ந்து திரையில் ஓடியாடும் கதாநாயக- நாயகி பாடல்களையோ, உருக்கமான தொடர்களின் நடுவிலான ஏதோ ஒரு காட்சியையோ அல்லது ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் இடையிலான காட்சியையோ பார்த்தும் பார்க்காதவர்களாயிருப்போம்!

நாங்கள் மெதுவாக வந்த விடையம் தொடர்பாக மெதுவாகப் பேசியவண்ணமிருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம். தொலைக் காட்சியில் அடிக்கடி காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன..... இப்போது கதாநாயகன் விறுவிறுப்பான சண்டைக் காட்சி... தூள் பறக்க விளாசிக் கொண்டிருந்தார்.
இல்லதரசி தொலைக் காட்சியின் இணைப்பைத் துண்டித்து முணுமுணுத்தவாறு...... எழுந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அதனால் கொஞ்சம் பதறியவாறு, "நாங்கள் இங்கிருப்பது இடைஞ்சலென்றால்.. நான் சென்று பிறகு வருகிறேனே!... " என்றவாறு எழுகிறேன்.

"நீங்க வேற... அதொன்றுமில்லை... நீங்க இருந்து பேசுங்க!.." என்றார் ஏதோ தவறாக தான் நடந்துவிட்டதாக நான் நினைத்துவிட்டேனோ என்ற பவ்வியத்துடன்.

"அப்ப ஏன்?....." எனது கேள்வியில் உறுதி இருந்திருக்க வேண்டும்.

"அங்க உண்மையான வீரர்களைத் தொலைச்சுப்போட்டுள்ள இவ்வேளையில... இவங்க நோஞ்சாங்களைக் கொண்டு வந்து றீல் விடுறாங்க பார்க்கவே எரிச்சலாகப் பத்திக் கொண்டுவருது!.." என்றார் கோபத்துடன்
அவரது வாயால் இப்படியான வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லையாதலால் ஆச்சரியத்தால் திக்கு முக்காடி..... மௌனித்தேன்.

சிறிது நேரத்தில், றோல்சும் பலகாரமுமான சிற்றுண்டி வந்தது. இது என்னை மேலும் திகைக்க வைத்தது.

"என்னதான் நடக்குது உங்கட வீட்டில... இப்ப நல்லூர்க் கந்தன் திருவிழாக்காலமல்லவா?"
என்கிறேன். (சைவமாக விரதமிருப்பது இவர்களது வழமை)

குசினியிலிருந்தே பதில் வந்தது "மான ரோசமில்லாத கடவுகளுக்கு இப்ப திருவிழா வேண்டிக்கிடக்கோ.... வெட்கம் கெட்டதுகள்தான் இப்ப போவாங்கள்.. கடைப்பிடிப்பாங்கள் தொலைஞ்சு போகட்டுமென்று விட்டிட்டன்."
நான் நண்பனைப் பார்க்கிறேன்... அமைதியாக ஊதிவிட்டவாறு றோல்சைச் சுவைத்துக் கொண்டிருந்தார். ஆம்! றோல்ஸ் சூடாகவே இருந்தது!


-முகிலன்
பாரிசு ஓகஸ்ட் 2009

Sunday, 23 August 2009

சரம் - 17 "கோயிலுக்கு யார் போவார்கள்?"


சரம் - 17 "கோயிலுக்கு யார் போவார்கள்?"

எனது தந்தையார் ஆசிரியப் பணியில் இருந்த போதும், வீட்டில் சோதிடம் கணித்து எழுதுபவராகவும் இருந்ததால் எங்களது வீட்டுக்கு புதியவர்கள் அதுவும் படித்தவர்கள், அதிகாரிகள், வணிகர்கள் எனப் பலர் அடிக்கடி வந்து போவது வழக்கம். அப்போது பதின்ம வயதுப் பிராயத்திலிருந்த எனக்கு இது புரியவதே இல்லை. மாலையில் என்னை விளையாடப் போகவிடாமல் சாதகக் குறிப்புக் கணிப்பதைக் கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துவார். நானும் திமிறிக் கொண்டிருப்பேன். சிலசமயம் அவருடன் இணைந்து வேலையும் செய்வதாகவும் போனதுண்டு.

இப்படியாக ஒருநாள், அப்பாவிடம் எனக்கு எழுந்த கேள்வியை முன்வைத்தேன்.
"அப்பா!, ஏன் ஆக்கள் சோதிடம் கணித்து சாதகம் பார்க்க வருகிறார்கள்?" எனது நீண்ட நாள் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.

அப்பா பதிலுக்கு என்னிடம் வேறு கேள்வியை முன்வைத்தார்...
"வைத்தியரிடம் யார் போவார்கள்?"

"நோயாளிகள்..." இது என்ன கேள்வியென்ற அலட்சியத்துடன்

"காவல் நிலையத்திற்கு யார் போவார்கள்?" அப்பாவும் விடாமல்

"குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவர்கள்" இப்போது அப்பாவை ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.

"அப்புக்காத்திடம் (லோயர்) யார் போவார்கள்?"

"வழக்காடுபவர்கள்..." என்றேன் ஆவலுடன்...

"இப்படியே யோசித்துப்பார்.... சோதிடரிடம் யார் போவார்கள்? என்பது தெரியவரும்" என்றார் புன்முறுவலுடன்

எனது மண்டையில் எதுவும் சரியாகக் கிடைக்வில்லை.... அப்பாவை அண்ணாந்து பார்க்கிறேன். என்னிலையைப் புரிந்தவராகித் தொடர்கிறார்..

"தம்பி! மனித மனங்கள் பற்றி நிறையவே முதலில் அறிய வேண்டும். நிறையவே வாசிக்கவேண்டும். முடிவெடுக்க முடியாது தடுமாறும், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், தோல்விகளால் மனம் நொந்தவர்கள்தான் சாதகம் பார்க்க வருவார்கள்"

எனக்குக் கொஞ்சம் புரிவது மாதிரி இருந்தது. ஆவலுடன் அப்பாவைப் பார்க்கிறேன்.

"சாதகம் என்றால் என்ன தெரியுமா?" வினவினார் அப்பா.

"தெரியாது.... " என்கிறேன்.

"இங்கு பார் தமிழ் ஆழமான மொழி. 'சாதகமாக நடந்து கொள்' என்றால் என்னவென்று புரியுதா?" என்றவாறு என்னைப் பார்க்கிறார்.

"ஓ!! நன்றாகப் புரியுது." எனது முகத்தில் பிரகாசம் இருந்திருக்க வேண்டும்.

"நிலையை உணர்ந்து சாதகமாகச் செயற்படும் உத்தியை வழங்குவதுதான் 'சாதகம் பார்த்தலுக்கான' பணி" என்று சொல்லியவாறு தொடர்கிறார், "தம்பி! சோதிடரிடம் வரும் இந்தத் தன்னம்பிக்கை குறைவானவர்களுக்கு மிகுந்த மனவுறுதி கிடைக்குமாறு அறிவுறுத்தி, எதிர்காலச் செயற்பாடுகளை ஆர்வத்துடன் செய்யத்தூண்டும் கலைதான் சோதிடக் கலை."

அழகாகப் பாடம் கற்ற திருப்பியுடன் எனது கருமங்களில் மூழ்கினேன். கொஞ்சம் காலம் கடந்த பின்னர் எனக்கு அப்பரின் பாணியில் ஒரு கேள்வி எழுந்தது....
"கோயிலுக்கு யார் போவார்கள்?" பதிலை உங்கள் தேடலுக்கு விட்டுவிடுகிறேன்.

- முகிலன்
பாரீஸ் ஓகஸ்ட் 2009

Thursday, 20 August 2009

கதைச் சரம் - 11 மெத்தப் படித்த வாலிபனும் குடியானவனின் பண்ணையும்


கதைச் சரம் - 11
செவி வழிக்கதை - 9

மெத்தப் படித்த வாலிபனும் குடியானவனின் பண்ணையும்

வட இலங்கையில் மன்னார் மாவட்ட மாதோட்டத்தில் அடம்பன் என்ற அழகிய கிராமம். இதன் இயற்கை வாழ்வியல் அழகிற்கு பெரிய நாவற்குளம் எப்போதும் நீர் நிறைந்ததாக வழி சமைத்தது. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாகவிருந்தது. நெற்பயிரிடலுக்குப் பேர்போன கிராமங்களில் இதுவும் அடங்கும். இந்தக் கிராமத்திலிருந்த பெரிய பண்ணை வீட்டின் இளையமகன் அமலன் பல்கலைக் கழகத் புகுமுகத் தேர்வில் வெற்றியடைந்திருந்தான். அப்போது தரப்படுத்தல் அமுலில் இருந்த காலம். அடம்பன் கிராமத்திலிருந்து யாழ் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான முதல் இளைஞனாக இவன் இருந்தான். ஊரே ஒன்றிணைந்து மாதோட்டம் சந்தியில் பஸ்சில் வழியனுப்பியதென்றால் பாருங்கள்! 'சின்ன வயதிலிருந்தே அவன் நல்ல கெட்டிக்காரன்!" என்றார் அந்த ஓர் ஆரம்ப்ப பாடசாலை ஆசிரியர் பெருமையுடன்!

பெரிய பண்ணையில் ரக்டர் ஓட்டும் முதல் மகனுக்கும், குடும்ப்ப பெரியவருக்கும் பெருமையோ பெருமை! தனது குடும்பத்திலிருந்து உயர் கல்வி பெறும் வாய்ப்பை இளையவன் பெற்றிருக்கிறான் என்றால் சும்மாவா? பின்னே! ஊர்ச் சிறுசுகளுக்கு ஒரே வேடிக்கைதான். "பெரிய படிப்பென்றால்; பென்னாம்பெரிய கொப்பியெல்லாம் வைச்சிருப்பாங்களாம்" என்கிறான் ஏதோ இதுபற்றித் தெரிந்ததாகப் பாவனைசெய்யும் குறுப்புக்காரச் சிறுவன் தன் நண்பனிடம்.

இப்படியாகப் பயணித்த நம்ம அமலன் தனது பல்கலைக் கழகக் கல்வியின் முதலாண்டை நிறைவு செய்து விடுமுறைக்கு வீடு திரும்புகிறான். சொல்வா வேண்டும் மாதோட்டச் சந்தியில் பெரிய வரவேற்பு. தனது ரக்டரில் வந்திருந்த பெரிய அண்ணனைக் கண்டதும் அமலனுக்கு சந்தோசத்தால் கண் கலங்கியது. பெரிய அண்ணனென்றால் அவனுக்கு சின்ன வயதிலிருந்து சரியான பயமும் மரியாதையும் இருந்தது. அந்த அண்ணனே தனக்கு மரியாதை வழங்கி வரவேற்கிறார் என்றால் சும்மாவா?

பதினொரு பிள்ளைகள் பெற்ற பெரிய குடும்பம் அது இவன்தான் கடைக்குட்டி. இவனுக்குப் பின் அந்த அம்மா போயே போய்விட்டார். இதனால் அனைவருக்கும் இவன்தான் செல்லப் பிள்ளை. பொதுவான பள்ளிகளுக்கும் இப்பத்தான் விடுமுறை காலமாதலால் அவ்வூர் சிறுவர்களுக்கு பெரிய பண்ணை வீட்டு சிறப்புகளைப் பார்ப்பதே பொழுதுபோக்காகி விட்டிருந்தது. அமலனின் ஒவ்வொரு அசைவும் நோட்டமிப்பட்டு அவ்வப்போது சிறுவர்களால் நடித்தும் காட்டப்படன. அந்தவூர்க் கதாநாயகன் இப்ப அமலன்தான்!

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணக் கிராமங்களில் நாங்கள் வசித்தபோது இலண்டனிலிருந்து இளைஞர்கள் திரும்பியபோது அவர்களது நடை, உடை பாவனைகளால் நாம் கவரப்பட்டதையொட்டியதாக இது இருந்தது. அந்த மார்க
ண் ஸ்பென்சர் உடுப்பும் குறுந்தாடியும் மினுங்கும் பேனாக்களும் தேற்பையும் கறுப்புச் சப்பாத்துமாக அந்த ஆடல் நடையுமாக வந்து நம் கனவுகளைக் ஆக்கிரமித்த நண்பர்களை எப்படி எம்மால் மறக்க முடியும்.

நம்ம கதாநாயகன் அமலனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். ஊரே வந்து குசலம் விசாரித்து நோட்டமிட்டது. "சாப்பாடு எப்படி?" "நல்லா மெலிந்து விட்டாயடா!" "உன்னோடு இருப்பவர்கள் நன்றாகப் பழகுறார்களா?" "யாழ்ப்பாணத்திலே என்னவெல்லாம் பார்த்தாய்?" இப்படியாகப் பல விசாரிப்புகள். இதனால் உற்சாகமான நம்ம ககதாநாயகன் புதிய நடையுடன் வலம்வரலானான். வயசுப் பெண்கள் நேரில் தென்படாவிட்டாலும் தன்னை ஆங்காங்கிருந்து நோட்டமிடுவதை அவனது அறிவுக் கண்(அதுதான் ஞானக்கண்!- அவன்தான் மெத்தப் படிக்கிறவனாயிற்றே) சொல்லிக் கொண்டிருந்ததால் மண்டையில் காதுகளின் பின் புறம் விறுவிறுக்க மேலும் மெடுக்கு அதிகரித்தது.

முதல் நாள் மாலை, வயல் வேலை முடிந்து மேலும் ஆக்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மேச்சலுக்குப் போன கால் நடைகளும் திரும்பின. சூரியனும் மறைந்தும் மறையாத செவ்வான வெளிச்சம் மனதை வருடுவதாக இருந்தது. பண்ணையின் பெரியவர் "தம்பி அமலா! மாடுகளெல்லாம் பட்டிக்கு வந்துவிட்டதா என கணக்குப் பார்க்கிறாயா?" என்கிறார் அன்புடன்.

"ஓம் ஐயா!" என்று துள்ளலுடன் எழுந்தான் நம்ம கதாநாயகன். அவனுக்குப் பின்னால் சின்னஞ் சிறுசுகளின் கூட்டம் தொடர்கிறது. இதனால் புதிய சங்கடம் ஏற்படுகிறது நம்மாளுக்கு.

'அடடா! இந்தச் சிறுசுகளுக்கு முன்னால் எப்படி சாதாரணமாக எண்ணுவது? அப்படி எண்ணினால் எப்படி என்னை மதிப்பார்கள்... பெரிய படிப்பைப் படிச்சாலும் நம்மளப் போலத்தான் கணக்குப் பார்ப்பதாக ஊர் முழுக்கச் சொல்லித்திரிவார்கள்.... என்ன செய்யலாம்!' அவனது எண்ணம் குறுக்குமறுக்காக ஓடியது. தேடல் வீண் போகவில்லை. அவனுக்கு ஒரு புதிய உத்திகிடைத்துவிட்டிருந்தது.

படபடப்படன் ஓடி, மாட்டுப் பட்டிக்குள் நுழைந்தான். சடாரென கீழே படுத்து மாடுகளின் கால்களை எண்ணத் தொடங்கினான். பின் தொடர்ந்த சிறுவர் கூட்டம் வாயைப் பிளந்தவாறு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஆகா! நம்மாளும் ஒருவாறு எண்ணி முடித்தவாறு எழுந்து ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு அக்கம் பக்கம் பெருமிதத்துடன் நோட்டம் விட்டான். எல்லோரது கண்களும் அவனையே மொய்த்த வண்ணமிருந்தன. அதே சமயம் அவன் மனது கணக்கு பார்த்துக்கொண்டிருந்தது .
"எத்:தனை மாடுகள் இருக்கண்ணே?" ஒரு சிறுவன் கேட்டுவிட்டான்.

"மொத்தம் தொண்ணூறெட்டே முக்கால் மாடுகள்" என்றார் நம்மாள் பெருமிதத்தோடு. ('மொத்தம் 395 கால்கள் ஆக 4ஆல் வகுத்தால் தொண்ணூறெட்டே முக்கால் மாடுகள்.
395 / 4 = 98 3/4 )

- முகிலன்
(இக்கதை என்னுடன் பல்கலையில் படித்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த நண்பன் பிகராடோ சொன்னது. இவர் இப்போது எங்கிருக்கிறார் என அறிய முடியவில்லை.)
பாரிஸ் ஓகஸ்ட் 2009

Monday, 17 August 2009

கதைச் சரம் - 10 தாத்தாவின் சாப்பாட்டுச் சிரட்டையும் பேரனும்


கதைச் சரம் - 10
செவிவழிக் கதை - 8
தாத்தாவின் சாப்பாட்டுச் சிரட்டையும் பேரனும்

ஒரு கிராமத்தில் அந்தக் குடும்பம் நல்ல வசதியாக வாழ்ந்து வந்தது. அந்த நாட்களில் வசதியென்றால் மூன்று வேளை நல்ல உண்வு, போதிய ஆடை அணிகலங்கள், விவசாயத்துக்கான நில புலத்துடனான வீடு, கால்நடைகள் போன்றவைதான் பிரதானமாகப் பார்க்கப்படும். இது ஒரு கூட்டுக் குடும்பம்.

இந்த வீட்டில் மிகவும் வயதான தாத்தா ஒருவர் இருந்தார். பல் எல்லாம் விழுந்த இவரால் எழுந்து நடக்க முடியாத முதுமைநிலை. படுக்கையிலேயே கழிவு போகும் இவரது நிலை கண்ட குடும்பத்தின் தலைவனாக இருந்த மூத்த மகன், இவருக்கு வீட்டின் புறத்தே அமைந்த மாட்டுத் தொழுவத்துக்கு அருகாமையில் ஒரு பத்தி இறக்கி அதில் சாய் மனை வசதியுடனான பலகைக் கட்டில் வைத்துப் பராமரித்து வந்தான். நாளாந்தம் கழிவைச் சுத்தப்படுத்துவதற்கு இந்த இடமும் கட்டிலும் நல்ல வசதியாக அமைந்திருந்தது. இவருக்கு கஞ்சி போன்ற திரவ உணவு வகைகளே கொடுப்பதால் இவருக்கென்று தனியான சிரட்டையொன்றை சிறப்பாகச் செய்து அந்த அறைபோன்ற பத்தியின் கிடுகுக் கூரையில் சொருவி வைத்திருந்தனர்.

இந்தக் குடும்பத்தலைவனாகிய வயதானவரின் மூத்த மகனுக்கு ஆறு பிள்ளைகள். இதில் நான்கு வயதான கடைக்குட்ப் பயல் ஒரு சுட்டிப் பையன். இவனுக்கு தாத்தா என்றால் நல்ல விருப்பம். தனக்குப் பல் முளைத்த போதும் தாத்தாவுக்குப் பல் இல்லாதது இவனால் அறிய முடியாத அதிசயம். தனது சின்ன வயதிலிருந்து தாத்தாவிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அந்தப் பொக்கை வாயால் வரும் பதில்கள் புரிந்தனவோ, புரியவில்லையோ தலையாட்டிச் செல்வது வழக்கம். தான் மெல்ல மெல்லத் தவழ்ந்து நடந்து பழகி ஓடத் தொடங்கவும் நடந்து கொண்டிருந்த தாத்தா தடியூன்றி நடந்து பின் நடக்க முடியாதவராகி படுக்கையில் வீழ்ந்ததானது இவனுக்கு சரியான கவலை. தாத்தாவுக்கு என்ன பணிவிடை நடந்தாலும் ஓடி வந்து பார்ப்பதும் தன்னால் முடிந்த ஒத்தாசை செய்வதும் இவனது வழக்கமாகிவிட்டன. அதுவும் சாப்பாடு கொடுக்கும் போது அந்தச் சிரட்டையைத் தன் கையால்தான் தாத்தாவுக்குக் கொடுக்க அடம்பிடிப்பான். இதனால் கொஞ்சம் கஞ்சி சிந்தியதும் உண்டு. பேரனின் ஆசையை அந்தக் குடும்பத்தினர் கண்டு பெருமிதம் கொண்டனர்.

இப்படியான ஒரு நாள் அந்த முதியவர் காலமாகிப் போனார். இறப்பென்றால் என்னவென்று தெரியாத சிறுவன் அனைவருடன் சேர்ந்து தாத்தாவுக்கு நடக்கும் புதிய சடங்குகளை கவலையுடன் உன்னிப்பாக கவனித்தான். எல்லோரும் அழுததால் அவனும் அழுதான். இறப்பு என்றால் இனித் திரும்பி வராத இடத்துக்கு தாத்தா போயிற்றார் என்றே அவனுக்கு விளக்கம் கூறியிருந்தனர்.
"தாத்தாவின் உடம்பு இங்கிருக்கையில் தாத்தாவால் எப்படி, அதுவும் நடக்க முடியாத தாத்தாவால் எப்படி திரும்பி வராத இடத்துக்குப் போக முடிந்தது?" சுட்டிப் பையனின் இந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

மேளமடித்து எல்லாவிதச் சடங்குகளும் முறைப்படி நடந்து வயதானவரின் உடலைத் தீமூட்டித் திருப்பினர் குடும்பத்தினரும் ஊராரும். அடுத்த நாள், வயதானவரின் அந்தக் கட்டிலும் இடமும் சுத்தம் செய்யப்படன. கிழவரின் படுக்கையும் துணுமணிகளும் வெளியில் குவிக்கப்பட்டு தீயிடப்பட்டன. எல்லாவற்றையும் அந்தச் சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். கிழவரின் பத்திக்குள் குடும்பத் தலைவன் வந்து பார்க்கிறான். தனது தந்தையுடன் இந்தச் சிறுவனும் கூட வந்துவிடுகிறான்.

சுற்று முற்றும் சுழண்டு பார்க்கும் தந்தையின் கண்களில் அந்தச் சிரட்டை பட்டுவிடுகிறது. அதை எடுத்தவாறு எரியும் நெருப்பிலிட வெளியில் வருகிறார் குடும்பத் தலைவன்.

"அப்பா...." சிறுவன் கத்திக் கூப்பிட்டதை இதுவரையில் இவர் கேட்டதில்லை. திடுகிட்டவாறு நிற்கிறார். ஓடி வந்த சிறுவன் அவரது கையிலிருந்த சிரட்டையைப் பறிக்க முயலுகிறான்.

"தம்பி! ஏனப்பா பறிக்கிறாய்....? தாத்தா இனி வரமாட்டார்தானே... இனி இது தேவையில்லையல்லவா!!" பொறுமையுடன் விபரிக்க முனைகிறார். வீட்டிலிருந்தவர்களும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"இல்லை. இது எனக்கு வேணும்." சிறுவனின் குரலில் இறுக்கம் இருந்தது. தந்தையாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"ஏன்.....?" என்றார் சலிப்புடன்.

"அப்பா! நீங்களும் கொஞ்சக் காலத்தில் தாத்தா மாதிரி வந்துவிடுவீர்களல்லவா... அப்போது நான்தான் உங்களுக்கு சாப்பாடு தரவேண்டும்.... அதற்கு இந்தச் சிரட்டை வேண்டும் !!"

சிறுவனின் உறுதியான பதில் கண்டு அனைவரும் வாயடைத்துப் போயினர்.



- முகிலன்
பாரீசு ஓகஸ்ட் 2009
(சிறு வயதில் எனது தந்தையிடம் கேட்ட கதை)

Sunday, 16 August 2009

கதைச் சரம் - 9 பெப்சியும் யேசுவும்!


கதைச் சரம் - 9
செவிவழிக் கதை - 7
பெப்சியும் யேசுவும்

அந்தப் பிரெஞ்சுக்காரச் சிறுவன் இந்த விடுமுறைக்கு மிகவும் பழமையான கிராமத்துக்குச் சென்றிருந்தான். இவனுக்கு பெப்சி என்றால் வாயூறும். பெப்சி குடிக்காத மதிய உணவென்பது அவனுக்குக் கிடைத்ததே இல்லை. பெறறோரும் அவனது விருப்புக் கேற்றவாறே நடப்பது வழக்கம்.

ஆனால் விடுமுறைக்கு வந்த கிராமத்தில் பெப்சி கிடைக்கவில்லை. இதைப் பெற்றோர் எடுத்துக்கூறியும் அவனால் நம்பவே முடியவில்லை. கிடைக்காத பெப்சி என்றதும் பெப்சி மீது இன்னும் அதிக நாட்டம் கூடியது. இதனால் அவ்வூரிலுள்ள கடைக்கு இவனே சென்று பெப்சி கேட்டான். கடைக்கார் பெப்சி இங்கு கிடையாது என்று சொல்லிவிட்டார். சிறுவனோ விட்டபாடில்லை, அடுத்த நாளும் கடைக்காரனிடம் போய்க் கேட்டான். அவரும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார். இது இப்பயே வாடிக்கையாகி ஓவ்வொரு நாளும் காலையில் சிறுவன் வருவதும் பெப்சி கேட்பதுமான நிலையைக் கண்டு கடைக்காரன் கோவத்துக்குள்ளானான்.

"தம்பி இனிமேல் நீ இங்கு பெப்சி கேட்டு கடைக்கு வந்தாயானால் நடப்பதே வேறு!" என்று கடுமையாகச் சொல்லிவிடுகிறான்.

பெப்சி மேல் தீராத தாகமுடைய சிறுவன் கடைக்காரனின் எச்சரிக்கையை சட்டைசெய்யவில்லை. அடுத்த நாளும் செல்கிறான். கடைக்காரன் இந்த முறை ஏதுமே பேசவில்லை. சிறுவனைப் பிடித்து சிலுவையில் கட்டிவிடுகிறான். இதைச் சற்றும் எதிபாராத சிறுவன் என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் பார்க்கிறான். காலை நேரமாகையால் சன நடமாட்டம் இல்லாது வீதி வெறிச்சோடியிருந்தது. தெருவின் அடுத்த பக்கத்தில் சிலுவையில் யேசு அறையப்பட்ட பெரிய சின்னம் அந்தச் சந்தியிலிருந்ததை அவனால் இப்போதுதான் உணர்வுபூர்வமாகப் பார்க்க முடிந்தது. அதில் இலயித்துப் போனவனாகி,

"யேசுவே! ஐயகோ!! நீருமா பெப்சிக்காக சிலுவையில் ஏற்றப்பட்டீர்!!" அவன் வாய்விட்டே கேட்டுவிட்டான்.


- முகிலன்
பாரீசு ஓகஸ்ட் 2009
(கோடை விடுமுறைப் பிரயாணத்தின்போது பல்வேறு பகிடிக் கதைகளை பரஸ்பரம் சொல்லிச் செல்கையில், வாகனத்தின் பின் இருக்கையிலிருந்த பிரான்சில் பிறந்து வளரும் 12 வயது எனது இளையமகன் சொன்ன கதை இது)

Saturday, 15 August 2009

சரம் - 16 பெண்ணியம் - தொலைக்காட்சித்தொடர் - இளையோர்


சரம் - 16
பெண்ணியம் - தொலைக்காட்சித்தொடர் - இளையோர்

இது ஒன்றும் கட்டுரைத் தலைப்பல்ல. வெயில் கொழுத்தும் கோடை என்றால் உடனே இங்கு இருக்கும் நம்மவர்கள் போடும் திட்டம் 'கிறில் பாட்டி' (grill party) உணவை திறந்தவெளியில் தீ மூட்டிச் சுட்டு பகிர்நது சாப்பிடுவதும் கலந்து பேசுவதும் நல்ல விருப்பமான குடும்பப் பொழுதுபோக்கு ஆகும். குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்தமானதாக இது அமைவதால் இந்தக் கோடைவிடு முறையில் செர்மனிச் சிற்றூரான சுண்டனுக்கருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நான்கு குடும்பங்கள் ஒன்றிணைந்தது.

பிள்ளைகள் பந்து விளையாடிச் சாப்பிட்டனர். பெண்கள் ஆண்களென பெரியவர்கள் இதற்கான அடுப்பில் கரியிட்டு தீ மூட்டி உணவைப் பதமாகத் தயாரித்து திறந்த வெளியில் உண்டபடி கலந்துரையாடினர்.

மலைக் கிராமத்தில் ஒரு சிறிய அருவி இவ்விடத்தில் வளைந்து செல்லும் 'சல சல' ஓசையும் பார்க்குமிடமெல்லாம் பசுமையான மரங்களுமாக மனதைக் கவரும் அருமையான இடம். பக்கத்தில் குடிமனைகளே கிடையாது. ஆனால் இவ்விடத்தில் ஓய்வெடுப்பதற்காக மகிழ் ஊர்தியில் செர்மானியர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர்.

பேச்சு பல்வேறு விடையங்கள் பற்றியும் இருந்தது. இதில் சிகாமணி அண்ணர் நகைச் சுவையாக தன் இளமைக்கால ஊர்க் கதைகளை நினைவுகூர்ந்தார். அவருடன் அவரது நண்பர் இளவயது ஊர்த்தோழன் றாபீக் குடும்பமும் கலந்துகொண்டதானது பழைய முல்லை வாலிபர் சங்கக் கதைகளை நினைவூட்டியிருந்தது. சும்மா சொல்லக் கூடாது வர்ணனையின் போதே இந்த நினைவுகளால் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார்.

இப்படியாக கழிந்த மாலையில், இறைச்சிகளை பதமாக சுட்டுக் கொண்டிருந்த பெண்கள் தங்களுக்குள் பகிடிவிட்டுதாலோ என்னவோ விழுந்துவிழுந்து சிரித்தனர். இதனால் அப்பக்கம் திரும்பிய என்னைப் பார்த்து சிகாமணி அண்ணர்,
"நான் மேடைகளில் பேசும் போது என் பிள்ளைகள் வினவிய கேள்விகளுக்கான விபரங்களைத்தான் பேசுவது வழக்கம். இதுதான் பொதுமக்களுக்குப் பிடித்ததாக தேவையானதாக அப்பிளாஸைத் தரும்" என்றார்.

"ஆ!! அப்படியா?" எனது வாய் பெரிதாகவே பிளந்திருக்க வேண்டும்.

"இதுலே... நிறையவே விசயங்களிருக்கு. பிள்ளைகளின் தொடர்பாடலும் சிந்தனைகளும்தானே நாளைய நடைமுறையாகப் போகுது."

விடயம் யதார்த்தமானதாக இருந்ததால், ஆவலுடன் அவரது முகத்தைப் பார்த்தேன்.

"அன்றொரு நாள் எனது மகன் என்னைக் கேட்டான ஒரு கேள்வி அப்படியே அசந்து போய்விட்டேன்." என்றார் முகத்தை ஆச்சரிய பாவத்தில் வைத்தவாறு. சிற்நத மேடைப் பேச்சாளருக்கேயுரிய இலாவகம் அப்படியே அனைவரையும் கவர்ந்தது.

"அப்படி என்ன கேட்டான்?" ஆர்வம் என்னைக் குடைந்தது, எல்லோரையும்தான்!

ஒரு கணம் தன்னை ஆசுவாசப்படுத்தி தனது மகன் போலவே நடித்துக்காட்டுகிறார். "... 'அப்பா, பெண்ணியம் பெண்ணடிமைத்தனம் என்று ஏது ஏதோ சொல்கிறீர்களே.... எனக்கென்றால் அப்படித் தெரியவில்லை! இந்த ரீவித் தொடர்களில வாற பெண்களைப் பார்த்தபிறகு, எனக்கு பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்ககூடாது என்றுதான் படுபிறது' என்றானே பாருங்கள்..... நான் என்னத்தைச் சொல்ல....." என்றார் பெருமூச்சுடன்.

இதைக் கேட்ட நானும் கூட இருந்தவர்களும் வாயடைத்துப்போனோம். இதன்பின் பெரிதாக வேறு உரையாடலில் செல்ல மனம் ஏனோ விடவில்லை.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் விரைவிக்கிடந்தாலும் வீட்டு வரவேற்பறைகளில் சென்னையிலிருந்து பிரவாகமெடுக்கும் தமிழ்த் தொலைக் காட்சிகள் கொப்பளிக்கும் தொடர்கள் தொடர்பாக நம் பெண்கள் தமக்குதாமே சுருக்குத் தடம் போடுவதாகத்தான் தெரிகிறது.



- முகிலன்
பாரீசு, ஓகஸ்ட் 2009

Wednesday, 12 August 2009

கதைச் சரம் - 8 புகையிலை விற்ற கதிர்காமக் கந்தன்!



கதைச் சரம் - 8
புகையிலை விற்ற கதிர்காமக் கந்தன்!


கதைச்சரம் - 8
செவிவழிக் கதை - 6

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புகையிலை தென்னிலங்கைக்கு பெருமளவில் ஏற்றுமதியாகும் பெரும் பணப்பயிர். இந்த வகையிலான பல கடைகளை தென்னிலங்கையின் பல சிங்கள நகரங்களில் நிறுவி வியாபாரத்தில் கோலோச்சியவர்கள் குறிப்பிடத்தகுந்த நம் தமிழ் வியாபாரிகள். இதில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரமும் அடங்கும். இதிலும் குறிப்பிடப்பட வேண்டியது யாழ் தீவகற்பத்தில் அமைந்ததொரு தீவைச் சேர்ந்த வியாபாரக் குழுமமொன்றே இந்தக் கொள்முதல் விநியோக நிர்வாகத்தில் கோலோச்சியது. புகையிலையும், சுருட்டும் குறிப்பாக கோடா சுருட்டும் தென்னிலங்கையில் நன்றாகவே விலை போயின. இதற்கான ஆளுமையும், வியாபாரத் துணிச்சலும் இந்த ஊரார்வசம் கைவந்த கலையாகியிருந்தது. இதனால் இந்த ஊரின் வியாபார அடைமொழியாக புகையிலையும் அமைந்திருந்தது.

யாழ்ப்பாணக் கிராமங்களில் கொக்குவில் மற்றும் கோண்டாவில் யாழ்ப் பெருநகர அண்டிய நல்ல விவசாயக் கிராமங்கள். இதில் புகையிலையைப் பணப் பயிராகச் செய்துவரும் கந்தசாமி என்ற விவசாயி வாழ்ந்து வந்தார். இவரின் அனுபவ முதிர்ச்சியால் புகையிலை, சின்ன வெங்காயம், மிளகாய் போன்ற பணப் பயிர்களும் கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பூசணி போன்ற உள்ளூர்ச் சந்ததைக்கான பயிர்களும் செழிப்பாக வளர்வது அக்கம் பக்கமெல்லாம் பிரசித்தமானது. உரவகை ஏதையும் சேர்க்க மாட்டார். எல்லாமே இயற்கை ஊக்குவிப்பான சாணம், குழைகள் கொண்டு மண்ணைப் பதப்படுத்தி தகுந்த முறையில் பயிரிடுவார். பக்கத்துத் தோட்டக்காரர்களுக்கான பயிர் ஆலோசனைகளையும் விருப்புடன் வழங்கி செய்தும் காட்டுவார். இதனால் இவரை எல்லோரும் 'கந்தசாமி அண்ணை' என்று அன்பாக அழைத்தனர்.

விவசாயிகள் வியாபாரிகளாக இல்லாத காலம் அது. இன்னும் சொல்லப் போனால் ஊர் தாண்டி வேறு ஊர் பார்க்காத கிராமவாசிகளைக் கொண்டதான காலம் அது. யாழ் நகரத்தையே பார்த்திராத கிராமவாசிகள் கொண்டதான யாழ் குடாவாசிகளில் வெளியூரில் வியாபாரம் செய்து அதுவும் தென்னிலங்கையில் சிங்களக் கிராமங்களில் வியாபாரம் செய்பவர்களைக் கண்டால் எப்படி இருக்கும்? இந்தப் பிரமாதமான அறிமுகம் கந்தசாமி அண்ணைக்கு வீடு தேடி வந்தது. புண்ணிய மூர்த்தி என்ற பெருவியாபாரி கந்தசாமி அண்ணையின் புகழறிந்து வீடு தேடிவந்திருந்தார். புகையிலைக்கு நல்ல விலையும் பேசப்பட்டு 'முன்பணமும்' கொடுக்கப்பட்டதில் கந்தசாமி அண்ணைக்கு நல்ல திருப்தி. முழுமையான கொள்வனவு முடிந்ததும் ரொக்கப் பணத்தையும் கொடுத்து மேலதிகமாக 'அண்ணே! உங்களது புகையிலையின் தரம் மிகவும் நன்றாகவுள்ளதால் ஆயிரம் ரூபா மேலதிகமாகத் தருகிறேன்' என்றார் மூர்த்தி முதலாளி. அந்க்காலத்தில் இது பெரிய தொகை. மூர்த்தி முதலாளியின் பேச்சிலும் சிரிப்பிலும் நடையுடை பாவனையிலும் ஒருவித கவர்ச்சி மிளிரும். இடைக்கிடை சிங்களத்திலும் பேசுவார். சிங்களம் விளங்காத கிராமவாசிகள் அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தனர். இப்படியாக இந்த வியாபார உறவு மூன்று வருடங்களாகித் தொடரந்து அண்டை அயல் விவசாயிகளின் கொள்வனவையும் மூர்த்தி முதலாளிக்குப் பெற்றுக் கொடுத்தது. மூர்த்தி முதலாளியின் நடையுடை பாவனையால் 'மூர்த்தி மாத்தையா' என அழைக்கப் பெற்றார். எல்லா விவசாயிகளுக்கும் கந்தசாமி அண்ணைதான் துணை அதாவது பொறுப்பானார். இப்படியாக மலர்ந்த கந்தசாமி - மூர்த்தி மாத்தையா நட்பு கொடுக்கல் வாங்கலுக்கான கடன் கையாளலாகவும் விரிவடைந்தது.

கடந்த ஏழு மாதங்களாக மூர்த்தி மாத்தையா இந்தப்பக்கம் வராதலால் மூர்த்தி கிராமத்தில் ஒருவித சஞ்சலம் எழுந்தது. முதலாளியால் தனக்கு வரவேண்டிய கடன் பாக்கியும், புதியதான வியாபார அணுகுமுறையும் கந்தாமி அண்ணையின் நிம்மதியைப் பாதித்து சுமையாகியது. அக்கம் பக்கத்தவர்களது நிலையும் இதுதான். எல்லோரும் அதிகாலையிலேயே கந்தசாமி அண்ணையின் வீட்டு வாசலில் குழுமும் வழக்கமும் வந்தாயிற்று.

கந்தசாமி அண்ணைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "அண்ணே! நீங்க மூர்த்தி முதலாளியின் கடைக்குப் போய் விசாரித்தால் என்ன?" என்றார் பக்கத்தூர் விவசாயி ஒருவர். கந்தசாமி அண்ணை அந்தக்குரல் தந்தவரை திடுமென திரும்பிப்பார்த்தார். முகத்தில் இலேசான மலர்வு தென்படத் தொடங்கியது. இது எல்லோருக்கும் சரியாகவே தெரிந்தது.

கொழும்புக்கே பயணமாகாத கந்தசாமி அண்ணை மாத்தறைக்குப் பயணமாத் தயாரானர். மூர்த்தி மாத்தையாவின் வியாபார முகவரிகளை இலகுவில் பெறமுடியவில்லை. அப்பாவிக் கந்தசாமி அண்ணைக்கு இதிலெல்லாம் நாட்டமிருந்திருக்கவில்லை. எல்லாமே உடன் பணமாகவே செய்திருந்த மாத்தையாவும் கடன் வியாபாரம் செய்திருக்கவில்லை. கந்தசாமியின் துணைவிதான் அந்தக் கலண்டரைக் கொண்டுவந்து காட்டி முகவரியைப் பார்க்கச் செய்தது ஆச்சரியத்தைத் தந்தது. ஒவ்வொரு வருடமும் தனது வியாபாரக் கலண்டரை அவரிடம் மாத்தையா கொடுப்பதின் முக்கியத்துவம் இப்பத்தான் கந்தசாமி அண்ணைக்குப் புரிந்தது. அதில் ஐந்து முகவரிகள் இருந்தன. அவை கொழும்புவில் ஒன்று, மாத்தறையில் ஒன்று, காலியில் ஒன்று, இரத்தினபுரியில் ஒன்று, பதுளையில் ஒன்றெனவாக இருந்தன. அனைத்தையும் குறித்துக் கொண்டார். தான் திரும்ப எவ்வளவு காலமெடுக்கும் என்பதை குத்துமதிப்பாகக் கணக்கெடுத்து அவ்வேளையில் தோட்டத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை விலாவாரியாக விபரித்தைக்கேட்ட மூத்த மகன் சலிப்பின் எல்லையைக் கடந்தவனாகியிருந்தான். ஆனால் எதையுமே பேசாதிருந்தான். கந்தசாமி அண்ணையின் பயணம் நன்றாக அமைவதற்காக சிறப்பு வழிபாடு செய்த துணைவியார் வீபூதியையும் பூசி மிகுதியையும் கட்டி இடுப்பு மடியில் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டார்.

கந்தசாமி அண்ணையின் முதல் கொழும்புப் பிரயாணம் அதிகாலையில் யாழ்தேவியில் தொடங்கியது. பேச்சுத் துணையாக கொழும்பில் வேலைபார்க்கும் அவரது அக்கா மகன் கிடைத்தது வசதியாகவும் கொழும்பில் தங்கி மூர்த்தி மாத்தையாவின் கடையைக் கண்டுபிடிக்கவும் வசதியாகிப்போனது. கொழும்பைப் பார்த்து அசந்து போய்விட்டிருந்தார் கந்தசாமி அண்ணை. 'கண்ணைக் கட்டி காட்டில் விட்டது' மாதிரி இருந்தது அவருக்கு முதலில். அவர் போன வேளையில் மூர்த்தி மாத்தையா கடையில் இல்லை. அவர் எப்ப வருவார் என்ற விபரமும் கடைச் சிப்பந்திகளுக்குத் தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகள் கடைக்கு வருவதான பயணம் கொழும்பை கந்தசாமி அண்ணைக்கு ஓரளவு பழக்கப்படுத்திவிட்டது. கிணற்றடியில் அனாயாசமாகக் குளித்த அண்ணைக்கு குளோரின் மணத்துடனான குளாய்க் குளியல் கடைசி மட்டும் பிடிக்கவேயில்லை. சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டு புதிய பழக்கங்களும் நட்புகளும் கிடைத்துவிட்டிருந்தன. இப்ப இவரால் தனியாக தான் இருக்கும் இடத்திலிருந்து முதலாளியின் கடைக்கு வந்து போகத் தெரிந்தது மட்டுமன்றி, கொழும்புக் கோட்டையின் சுற்றுப் புறங்களும் கோல்பேசும் ஐந்து லாம்புச் சந்தியும் பரீட்சியமாகி விட்டன. கடைச் சிப்பந்திகளும் பழகிப் போயினர். இதனால் முதலாளி மாத்தறையில் இருப்பதான தகவல் கிடைத்தும் விட்டது. பிறகென்ன கந்தசாமி அண்ணையின் மாத்தறைப் பயணம் அடுத்த நாள் தொடங்கியது.

இப்ப கொஞ்சம் பிரயாணத்துக்கான சிங்களமும் கற்றுக் கொண்டுவிட்டார். அப்போதெல்லாம் ஆட்டோ கிடையாது பஸ் மட்டும்தான். மாத்தறையின் பிரதான வீதியில் கடை இருந்ததால் சிரமமில்லாது கண்டு பிடித்துவிட்டார். கடை ஓகோவென நடந்து கொண்டிருந்தது. சிப்பந்திகளுக்கு இவர் யாரெனத் தெரியாத போதும் மாத்தையாவுக்கு வேண்டியவர் என்ற படியால் நன்றாகக் கவனித்தனர். சோடாவும் கொடுத்தனர். ஆனால் மாத்தையாவைப் பற்றி ஏதுமே அறியமுடியவில்லை. நொந்து போன கந்தசாமி அண்ணை மீண்டும் கொழும்பு திரும்பும் முடிவெடுத்தார். சிப்பந்திகளின் ஒருவன் பஸ் கண்டக்டெருடரன் பேசி முன்சீற்றில் இடம் பிடித்துக் கொடுத்திருந்தான்.

ஐயோ பாவம்! கொழும்பு திரும்பிய அண்ணைக்கு பரிதாப அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று மூர்த்தி மாத்தையா கொழும்புக் கடைக்கு வந்து சென்றிருந்த தகவலால் ஆடிப்போனார். முதலாளியின் பயணங்கள் பற்றி யாருமே விசாரிக்க முடியாதாதலால் எவருக்கும் எங்கு போயிருப்பாரென்றே தெரியவில்லை. அனேகமாக இரத்தினபுரி போயிருப்பார் என ஊகம் செய்தனர்.

சோர்ந்து போயிருந்த கந்தசாமி அண்ணைக்கு வந்தது ஒருவெறி. மறுநாள் அதிகாலையில் கிளம்பினார் இரத்தினபுரிக்கு. ஒருவாறு விசாரித்து கடைக்குப் போய்விட்டார். இரண்டடுக்குக் கடை. மேல் மாடியில் சிப்பந்திகள் தங்குமிடமாக இருந்தது. வயதான ஒருவர்தான் கடையை நடாத்திவந்தார். அண்ணையின் முகத்தைப் பார்த்த அவர் மேலே அழைத்துச் சென்று முதலில் சாப்பிட வைத்தார். பின் விபரம் கேட்டார். இதிலிருந்து முதலாளியின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரன் இராசையாதான் இவரென்பது தெரிந்தது. 15 வருடமாக இக்கடையை நடாத்தி வருவதும் அந்தத் தெருவில் அனைவரது நட்பைப் பெற்றவராகவும் இருந்தார் இராசையா முதலாளி. கோடாச் சுருட்டு நன்றாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. கடை பலசரக்கு(மளிகை)க் கடையாகவும் இருந்தது.

விபரம் அறிந்த இராசையா முதலாளி "அண்ணே! கவலைப் படாதேயுங்கோ! மூர்த்தி மாத்தையா(தம்பி என்றாலும் இப்படித்தான் அழைப்பது வழக்கம்) பதுளைக் கடைக்கு இந்த வெள்ளி அல்லது சனிக்கு வந்தேயாக வேண்டும். அந்தக் கடையின் கணக்கு வளக்குப் பிரச்சனை முடிக்க இந்த வாரம்தான் கடைசி... அந்தக் கதிர்காமக் கந்தனை நினைத்துக் கொண்டு அங்க போங்கோ உங்களுக்கு எல்லாமும் கைகூடும்" என்றார் நம்பிக்கையுடன்.

கதிர்காமக் கந்தன் என்று சொன்னதும் அண்ணைக்கு பக்தியால் நா தடுமாறியது. நம்பிக்கை துளிர்விட்டது. 'சரி வந்ததுதான் வந்தம் கதிகாமத்தானையும் தரிசித்துவிடுவம்' என மனம் உறுதியானது. இராரசயா முதலாளியின் பக்குவமான கவனிப்பால் நெகிழ்ந்து போனார் கந்தசாமி அண்ணை. இங்கு குளியல் அதிகாலையில் வளைந்து நெளிந்து செல்லும் ஆற்றில் கிடைத்தது 'சொர்க்கமாக' இருந்தது அண்ணைக்கு. நாட்கள் போனதே தெரியவில்லை. வியாழன் மாலையில் பதுளை நோக்கிய பிரயாணத்திற்கு தன் சிப்பந்தியொருவரையும் துணையாக அனுப்பினார் இராசையா முதலாளி. அச்சிப்பந்தி கண்டி மட்டும் துணைக்கு வந்து அண்ணையை பதுளைக்கு வேறொரு பஸ்ஸில் ஏற்றிவிட்டு தனது கண்டி வீட்டுக்குச் செல்ல விடைபெற்றுவிட்டார்.

மலைப்பாதைகளில் பஸ் உந்தியவாறு வளைந்து செல்வதும் பச்சைப்பசேலென இயற்கை கொழிப்பதும் அழகான தேயிலை இரப்பர் தோடங்களுடனான மலைகளையும் கண்டு கிறங்கிப்போனவரானார் அண்ணை. பதுளையும் வந்தாச்சு கடையையும் கண்டு பிடிச்சாச்சு. ஆனால் மாத்தையாவைத்தான் இன்னும் காணமுடியவில்லை. ஆனால் இம்முறை நல்ல நம்பிக்கையுடன் இருந்தார் கந்தசாமி அண்ணை. எப்ப மாத்தையா வருவாரென்ற தகவல் யாருக்கும் தெரியாத நிலையிலும் கந்தசாமி அண்ணைக்கு நம்பிக்கை தந்தது அந்த கதிர்காமக் கந்தன்தான்!

தான் நாளைக்கு இவ்விடம் வருவதாக கடைச் சிப்பந்திகளுக்குச் சொல்லிவிட்டு, 'சரி ஒருக்கா கதிர்காமத்தானைத் தரிசித்துவருவமென'க் கிளம்பினார்.

அப்பாடா! அண்ணைக்கு புல்லரித்தது. கதிர்காம மண்ணில் கால்பட்டதை அவரால் நம்பவே முடியவில்லை. 'அடடா! மனுசியை அழைத்து வராமல் போனேனே!' என மனம் ஒரு கணம் குத்திக் காட்டிற்று. 'யாழ்ப்பாணத்திலே நம்மாக்கள் ஏன்தான் முடங்கிக் கிடக்கிறாங்களோ?' என மனம் தன்பாட்டில் கேள்வியையும் எழுப்பியது. 'சரி எனக்குப் பாக்கியம் கிடைச்சிருக்கு! எல்லோருக்குமாக கந்தனை வேண்டுவம்!!' என்ற முடிவோடு நடக்கத் தொடங்கினார். முதலி மாணிக்கை கங்கையில் நீராடல் பின் தரிசனம்... ஒரு திட்டம் வரையப்படுகிறது. 'கதிர்காமத்தான் இனி எல்லாத்தையும் பார்த்துருவான்!' நம்பிக்கை மெருகூட்ட நடையில் தெம்புதொனித்தது.

மாணிக்க கங்கையின் கரையோரமாக வேட்டி நசனலையும் சால்வையையும் பையையும் வைத்துவிட்டு பக்தியுடன் ஆற்றில் இறங்கி நீராடியதை இவரால் என்றுமே மறக்க முடியாது. குளிர் தண்ணீர் பட்ட உடம்பும் பக்தியால் நன்றாகச் சூடேறியிருந்தது. துள்ளிய வாறு கரைக்கு வந்த அண்ணைக்கு அதிர்ச்சி! 'எங்கே எனது வேட்டி நெசனல் சால்வை?' பக்கத்தில் ஆள் அரவமே இல்லை. யாரும் தூக்கியிருக்கவும் வாய்ப்பிலலை, முதற் தடவையாக அண்ணைக்கு நெஞ்சடைத்தது. தூரத்தில் வந்தவரிடம் விசாரித்ததில் "இங்கு குரங்குத் தொல்லை அதிகம் கவனமாக இருக்க வேண்டும்" என்ற அனுபவப் பாடம் பதிலாகக் கிடைத்தது.
"ஐயனே! கதிர்காமக் கந்தா! இதென்ன சோதனையடா?" வாய்விட்டே கதறினார் கந்தசாமி அண்ணை. அப்படியே மெல்ல நடைபோட்டவராக கோயில் முகப்பிற்கு வந்த அண்ணைக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்!! தனது கோலத்துடனேயே கந்தன் சிரித்தவாறு அளித்த காட்சியைக் கண்டு உருகிப்போனார்.
"ஐயகோ! கந்தா! கதிர்காமத்தானே!! நீயுமா மாத்தையாவுக்குப் புகையிலை விற்றிருக்கியாய்?" என்று கதறிய கந்தசாமி அண்ணையின் கதறல் கேட்டு சந்நிதியில் இருந்த அனைத்துப் பக்தர்களும் பதைபதைத்துப் போனவர்களாகி அண்ணையைச் சுற்றிக் குழுமத் தொடங்கினர்.


- முகிலன்
பாரிசு - ஓகஸ்ட் 2009
(சிறுவயதில் எனது கிராமத்தில் கேட்ட கதை. இதில் ஒரு ஊரின் பெயர் வருவது வழக்கம். அந்த ஊருக்கு அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காகத் தவிர்ததுள்ளேன்.)

*பிற்குறிப்பு:
இதை அடியொற்றிய வேறொரு கதையின் பதிவு (பிரான்சில் பிறந்து வளரும் எனது இரண்டாவது மகன் சொன்ன கதை) அடுத்த முறை இடம்பெறும்.

Wednesday, 5 August 2009

சரம் - 15 யாதும் ஊரே!




சரம் - 15

யாதும் ஊரே!






நீண்ட பகலைக் கொண்ட கோடை விடுமுறையை வெளியில் இரசிப்பதில் ஐரோப்பியர் ஈடிணையற்றவர். புகலிடத்தரிப்பின் நீட்சி இன்று நம்மவர்களுக்கும் விடுமுறையை வெளியில் இரசிப்பதில் 'ஊரோடு ஒத்துப் போவதாகி' மகிழ்வானதாகிவிட்டது. ஐரோப்பாவை இரசிக்கவேண்டுமாயின் வாகனத்தில் சுற்றிவரவேண்டும். இங்குள்ள கிராமங்களூடாகப் பயணிக்க வேண்டும் என்பது எமது குடும்பத்தின் ஏகோபித்த விருப்பம். இங்குள்ள நகரங்களும் கிராமங்களும் இணைக்கப்பட்டள்ள திட்டமிட்ட சாலைக் கட்டுமானத்தின் பிரமாண்டமான செயலாக்கம் மனிதனின் சாதனைதான். இங்கெல்லாம் தூரத்தின் அளவீடாக மகிழூர்தியின் பயண நேரமாகவே இருக்கும் அறிவிப்பைப் பரவலாகவே காணலாம்.

பாரீசு போன்ற பெருநகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கெல்லாம் இன்னுமொரு நகரத்தைப் பார்க்கும் ஆர்வம் பொதுவாக வருவதில்லை. பரபரப்பில்லாத, வாகன இரைச்சல் குறைந்த, மக்கட்தொகை குறைவான, தமக்கான தொன்ம பண்பாட்டு அடையாளங்களைக் காவும் வித்தியாசமான சூழலாக அமையும் கிராமப்புறப் பயணங்களில் அதீத விருப்பத்தைத் தருகிறது.


எனது நண்பன் கபிலன் செர்மனி மேற்கே 'நீர் கொட்டும் மண்ணின்' (Sauerland) கிராமமான எஸ்லோகே(Eslohe) கிராமத்தில் குடியேறியதால் இது எம் குடும்பத்திற்கும் கைகூடியது. நாடோடிகள் சினிமாவில் 'நண்பனின் நண்பன் நண்பனே' ஆகிய மாதிரி நண்பனின் பிள்ளைகளுக்கும் எனது பிள்ளைகளுக்குமான நட்பு மலர்ந்துவிட்டிருந்தது. இது வருடந்தோறும் கோடைவிடுமுறையைக் கழிக்கும் குடும்ப விருப்புத் தெரிவாகிப்போய் இம் முறை ஆறாவது தடவையாக இங்கு வந்துள்ளோம். இது சுற்றுவட்டார மலைக் கிராமங்களையும் 
பழக்கப்படுத்திவிட்டது.

நள்ளிரவில் தன்னந்தனியாக ஐரோப்பிய சிறு மலைகளின் வளைவுப் பாதையில் ஊசியிலை மரங்களால் சூழப்பட்ட சிறுநகரில் எனது மகிழூர்தி ஊரும்போதினிலே பெற்ற புளங்காகித உணர்வை வார்த்தையால் வடிவமைக்க முடியவில்லை. திரும்பும் இடமெல்லாம் பசுமை. ஆகா, பச்சை நிறத்தில்தான் எத்தனை வகைகள்! மின்னொளி இல்லாத மலைக் காட்டக்குள் மகிழூர்தியின் வெண்ணொளியில் கண்கள் குவிந்திருக்க 'எங்கோ பிறந்தோம், எங்கெங்கோ அலைந்தோம்!! அடேய் முகிலா! ஐரோப்பிய மலைக்கிராமத்தில்... தன்னந்தந்தனியான மகிழூர்தியில் பயணிக்கும்போது 'இது கனவா இல்லை நிசமா?' என மனம் கிளர்ச்சி கொள்ளவே செய்யும் பயணங்கள்..

மலைப்பாதை 'ப' வழைவுத் திருப்பங்கள் தாண்டிச் செல்கையில் ஆங்காங்கே வீதிக் காவல் தெய்வங்களாக சிறு கோவில்கள்(kapelle) இருப்பதையும், சில இடங்களில் இச்சிறு கோயில்களில் மெழுகுதிரி எரிவதையும், சில கோயில்கள் சிறு கம்பிக் கேற்றுகளால் மூடப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. பெரும்பான்மையான கிராமவாசிகள் கத்தோலிக்கராயிருந்தனர். கிராமங்களில் தேவாலயக் 
கோபுரங்கள் சிலுவைக் குறியுடன் நிமிர்ந்து நிற்கும், இதில் தவறாது மணிக்கூடும் இடம்பெற்றிருக்கும். செர்மனிக் கிராமங்கள் தோறும் ஏதாயினும் குறைந்தது ஒரு தொழிற்சாலையாவது இருப்பதைக் கண்டு பிரமித்தவர்களில் நானும் ஒருவன். இதனால்தான் வேலைவாய்ப்பைக் கருதி நம்மவர்களாலும் இவ்விடங்களில் குடியேற முடிந்தது. 'ஆலை இல்லா ஊருக்கு அழகு பாழ், கோயில் இல்லா ஊரில் குடியிருப்பு பாழ்!' எனவாக அமைந்த கிராமத்தவர்களின் பிரதான தொழில் மாடு, ஆடு, விவசாயப் பண்ணைகள்தான். குதிரைகளையும் பரவலாகக் காணலாம். ஆண்டுக்கொரு தடவை நடக்கும் இரு நாள் சந்தை, சுற்றுவட்டாரத்தை இணைக்கும் கோலாகாலத் திருவிழாவாக பக்கத்துக் கிராமமான றைஸ்ரே (Reiste) இல் 700 வருடப் பாரம்பரியத் தொடராக நடைபெறுகிறது (Der Reister Markt ist als Bartholomäusmarkt bereits seit dem Mittelalter belegt. Reiste besaß zu dieser Zeit ein Kirchspielgericht, welches urkundlich für den 23. August 1347 überliefert ist und 1445 durch Dietrich II, Erzbischof von Köln bestätigt wird). இது அக்டோபர் கடைசிக்கு முதல் வார இறுதியில் நடைபெறும். முதல் நாள் வளர்ப்புப் பிராணிகளின்(பறவைகள், மிருகங்கள்) கண்காட்சியும், சிறந்த மிருக வளர்ப்பாளர் தெரிவுமாகத் தொடங்கும் நிகழ்வில் புதிய வகை இராட்சச விவசாய இயந்திரங்களும்(Traktor) இடம் பெற்றிருக்கும். பழவகைகள், உடுபிடவைகள், தோற்பொருட்கள், விதம் விதமான உணவகங்கள், வீட்டு பாவனைப் பொருட்களென பல்வேறு கடைகளால் கூட்டம் அலை மோதும். இங்கு வந்த உடுபிடவைச் சந்தை பெரும்பாலும் இந்திய - பாகிஸ்தானியர்களால்தான் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டினார் நண்பர். இராட்டினம் சுற்றல், மோட்டார் ஓட்டலென பல்வேறு களியாட்டங்களுடன் இடம் பெறும் தொடர் நிகழ்வுகளால் ஊரே விழாக் கோலமிட்டிருக்கும். வாண வேடிக்கையுடன் நிகழ்வுகள் முடிவுறும். நம்மூர் கோவில் திருவிழாக்களை ஞாகமூட்டும் இந்நிகழ்வு ஊர்த் திருவிழாவாக இடம் பெறுகிறது.

ஐரோப்பாவில் குடியேறினாலும் விருந்தோம்பலைத் தொடரும் பண்பாட்டில் செர்மனித் தமிழர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். எனக்கு முன்பின் அறிமுகமல்லாத பல தமிழர்கள் நேசமுடன் கைகுலுக்கி தமது வீடுகளுக்கு அழைத்து விருந்தோம்பி மகிழ்ந்து எமக்கும் மானுட இரசிப்பைத் தந்தார்கள். செர்மனியில் தமிழர்கள் பரவலாகி, பல்வேறு கிராமங்களில் வாழ்வதானது வித்தியாசமான அனுபவங்களைப் பெறவும் நேசமுடனான சந்திப்புகளைச் செய்வும் தூண்டுகிறதெனலாம். இவ்வகையில் அறிமுகமாகி நண்பரானவர் சுகந்தன். இவரது குடும்பம் ஐரோப்பிய வாழ்வில் கலந்தது. இவரது துணைவியார் செர்மானியர். இவர்களுக்கு மூன்று பையன்கள். இச்சிறு கிராமத்தில் வீடொன்றை வாங்கி சுமார் 6 வருடங்களில் தனது கடும் உழைப்பின் கைவண்ணத்தால் மிளிரச் செய்தார். இது அண்டை அயலாரின் அன்பான கவனயீர்ப்பைப் பெற வழிவகை செய்தது. இந்த வீடு புனரமைப்பு நடவடிக்கை இவருக்கு அயல் வீட்டு முதியவருடன் நெருங்கிய நட்பைப் பெற்றுத் தந்தது. இவருக்கும் தனது நிலவறையைத் திருத்துவதற்கு அவரது ஆலோசனைகள் பல தடவை தேவைப்பட்டிருந்தன. இந்த நட்புறவால் பல்வேறு வரலாற்று அனுபவங்களை பகிர்ந்திருந்தார் அந்த முதியவர். அந்த இனிய மாலைச் சந்திப்பில் இதனை மனந்திறந்து சொன்னார் சுகந்தன்.
- அந்தக் காலத்தில் நிலவறையில்தான் பனிக்காலத்திற்கான எல்லாவற்றையும் வைத்திருப்பார்கள். நிலவறை இதற்காக பல அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இவ்வறைகளில் கரி - விறகுவைக்குமிடம், ஆடு - கோழி - பன்றி பாதுகாக்குமிடம், இறைச்சி அடிக்குமிடம், மரக்கறி வைக்குமிடம், உடுபிடவைக்கான இடம் என்பவை அடங்கும். 
- குளியல் தொட்டியில் நீர் நிரப்பப்பட்டதும் முதலில் குடும்பத் தலைவர் குளிப்பார், பின் பிள்ளைகள் குளித்தபின் கடைசியாகத்தான் குடும்பப் பெண் குளிப்பது வழக்கம். இதே வகையில்தான் சாப்பாடும் அமையும். சில வேளைகளில் பெண்கள் சாப்பிட பாண் மட்டுமே மிஞ்சுவதுமுண்டு.
 
- வாரத்தில் வெள்ளிக் கிழமையில்தான் மீன் சாப்பாடு இருக்கும். இறைச்சி அடிக்கப்படும் போதுதான் இறைச்சிச் சாப்பாடு இந்நாளில் சுற்றத்தாருக்கும் கொடுத்து உண்ணப்படும். அடிக்கப்பட்ட விலங்கின் எல்லா உறுப்புகளும் தகுந்த முறையில் உணவாக்கப்படும், எலும்பைத் தவிர எந்தக் கழிவும் வீசப்படாது.
 
- அரிசி வகைகள் பற்றி அப்போதெல்லாம் பெரிதாகத் தெரியாது. எல்லாமே உருளைக்கிழங்கும், மாவினாலான ரொட்டியுமான உணவுதான். சீன உணவுவகைகளின் அறிமுகத்தாலேயே அரிசி அறிமுகமாகியது.

இன்று சாலைகளில் சர் சர் என வழுக்கிச் செல்லும் வாகனங்களின் மிதப்பிலும், கட்டிடங்களின் மிளிர்விலும் நாம் காணும் இவ்வூர்களெல்லாம் மானுடர்களின் தடம் பதியப்பட்ட ஊர்கள்தான்.
'யாதும் ஊரே!'


நேரில் அறியப்பட்ட பதிவு
- முகிலன் (தகவல்: சுகந்தன்)
செர்மனி 05.08.2009