Friday, 7 January 2011

புலம்பெயர் தமிழர் திருநாள் 2011


செய்திச் சரம் 8

எதிர்வரும் 15.01.2011 அன்று தமிழர் திருநாள் நிகழ்வு புலம் பெயர் வாழ்வின் நீட்சியில், புதிய பரிமாணத்துடன் "கூட்டுபப் பொங்கலிடும் நிகழ்வாக" பாரீஸ் புறநகரில் நடாத்தப்படவுள்ளது.
'தைப்பொங்கல்- தமிழர்க்கு ஒருநாள்- தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள்!' எனும் விருதுவாக்கியத்துடன் ஒருத்துவமாக தமிழார்வலர்களால் நிகழ்த்தப்படுகிறது.
ஊடகங்கள் என்ற வகையில் தமிழுடனான பயத்தைத் தொடரும் தங்களைப் போன்ற தமிழார்வலர்களின் ஒத்தாசைகளால் இந்நிகழ்வின் முக்கியத்துவம் பல்பரிமாண மிளிர்வுடன் உலகெங்கும் நிகழ பெரும் ஊக்குவிப்பை வழங்குவீர்களென நம்புகிறோம்.
இந்நிகழ்வில்
1. நாட்டுப்புறவியலில் பாண்டித்துவம் பெற்ற டாக்டர் கேஏ குணசேகரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்கிறார். இவருடன் கிழக்குப் பல்கலைக் கழக கலைத்துறை முன்னாள் பீடாதிபதி இன்னிய அணியை உருவாக்கிய பாலசுகுமார் அவர்களும் அதிதியாகப் பங்கேற்கிறார்.
2. புலம் பெயர் நாடுகளில் வாழத் தலைப்பட்டுள்ள எம் சந்ததியினரில் தமக்கென்ற தனியனான தன்னாற்றலை வெளிப்படுத்தும் அடுத்த தலைமுறையினரான மூவர் இந்நிகழ்வில் கண்காட்சியை வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.
அ) தமிழின் தொன்ம இருப்பின் ஆவணக் கண்காட்சி - திரு அன்ரன் (ஜேர்மனி)
ஆ) பறவை வளர்ப்பில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவரின் காட்சியில் - மயில், கிளி, பல்வகைப் புறாக்கள் - திரு சுதா (பிரான்சு)
இ) மட்பாண்டச் செய்முறை விளக்கமளிக்கிறார் - செல்வி ஜில்பேட்ரின் (பிரான்சு)

வெளி அரங்க நிகழ்வாக இவை ஒருபுறமிருக்க மேடை நிகழ்வாக நம்மவர் தொன்ம அரங்க மீட்சியும் நீட்சியுமான நிகழ்வுகள் நடை பெற ஏற்பாடாகியுள்ளன
அனைவரையும் இன்முகத்துடன் அழைக்கிறோம்.

Wednesday, 27 January 2010

கதைச் சரம் 16 அங்கொடைக்குப் போன சனாதிபதி!


கதைச் சரம் 16
செவிவழிக் கதை-13

அங்கொடைக்குப் போன சனாதிபதி


தடல்புடலாக இலங்கையின் எந்தப் பாகத்திற்கும் திடீர் திடீரெனப் பயணித்து இந்த சனாதிபதி புகழ் பெற்றிருந்தார். இவரது இந்தப் பயணங்களால் அல்லோககல்லோப்பட்டது இவருடன் பணியாற்றிய அதிகார வர்க்கம்தான். இவரது அறிவிப்பு வந்ததுமே எதையும் செய்யக்கூடியவர்களைக் கொண்டதாக இக்குளாம் அமைக்கப்பட்டிருந்தது. 

இம்முறை சனாதிபதியிடம் இருந்து வந்த பயண அறிவிப்பால் இந்தக் குளாம் அரண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போயிற்று. அது வேறொன்றும் இல்லை. கொழுப்புக்குப் பக்கத்திலிருந்த 'அங்கொடை' ஆக இது இருந்ததுதான்! அங்கொடை இலங்கை முழுக்கப் பிரபல்யமாகியது அங்குள்ள வைத்தியசாலையால்தான். சென்னையில் 'கீழ்ப்பாக்கம்' மாதிரி என்றாலும் அதைவிட முக்கியமானதாக அதீத உச்சக்கட்ட மனவிகாரர்களுக்கு மருத்துவம் பார்க்கும் இடம் இது.
 

வடக்கின் மூலைமுடுக்கு வரை பயண ஒழுங்கைச் சிரமம் இல்லாது சீராகச் செய்த அதிகார வர்க்கம் இந்த முறை ஆடித்தான் போனது. இருப்பினும் ஒருவாறு சமாளித்து நிறைவேற்றிவிட்டது.

அன்றைய நாள் என்றுமில்லாத மிளிர்வுடன் அங்கொடை வைத்தியசாலையில் விடிந்தது. பணியாற்றிய அனைவருக்கும் போனசுடன் சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டன. நோயாளிகளுக்கும் சிறப்பு விருந்து கொடுக்கப்பட்டது. இந்த வளாகமே வழமையை மீறியதாக கலகலப்பாக இருந்தது.
 தனக்கான பெருமிதமுடைய உடுப்புடன் கம்பீரமாக வந்த சனாதிபதிக்கு மிகப் பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது. சனாதிபதியும் மிகவும் சுறுசுறப்பாக பார்வையிட்டார். எல்லோரும் கைகூப்பியும், காலடியில் விழுந்தும் வணக்கம் செலுத்தினர்.

ஆங்காங்கே குறைகளையும் கேட்டறிந்தார்(!) குறைகள் இருந்தால்தானே சொல்வதற்கு!! கடைசியில் தண்ணீர் தொட்டியின் பழைமையும் நீர் சீராக வராததுமே பிரச்சனை எனப் பதிவானபோது நம்ம சனாதிபதியின் முகம் கோபக் கனலாகி அதிகாரியை எரித்த காட்சியைப் பார்த்த முப்பது வருட அனுபவமுள்ள மருத்துவத் தாதி நெகிழ்ந்து போனார். பின்னர் தன் ஊரில் இதைச் சொல்லிச் சொல்லி இந்த சனாதிபதியின் கருணை பற்றி வியாபித்த கதையை வேறாகத்தான் பதிவிட வேண்டும்.
 

இவ்வளவு சிறப்பாக இந்நாள் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சனாதிபதி முகத்தில் ஒரு கவலை இருப்பதை கூடி இருந்த மூத்த அதிகாரி கண்டு பதறித்தான் போனார்.
 
"ஐயா, ஏதாவது சரியில்லை?"
 என்று சனாதிபதியின் காதுக்குள் பவ்வியமாக முணுமுணுத்துக் கேட்டுவிட்டார். 

"என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர? அங்கே பாரும்..... அந்த மரத்தடியில் இருப்பவன் நான் வந்தது தொடக்கம் அங்கேதான் இருக்கிறான். நான் வந்துள்ளதையும் சட்டை செய்யாமல் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறான். அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?"
 

இதன்பின்தான் அந்த அதிகாரிக்கு அந்த அவனின் இருப்பு தெரிந்தது. 'மனுசன் எல்லாவற்றையும் என்னமாதிரிக் கவனிக்கிறார்! கழுகுக்கண்தான்' என மனதுக்குள் நினைத்தவாறு,
 
"ஐயா, நான் போய் அவனைக் கூட்டிவாறன்."

"இல்லை, இல்லையில்லை..... அவனை நான்தான் கவனிக்க வேண்டும்!" என்றார் அதிகார முனைப்புடன். 

"சரி ஐயா!...."
 அதிகாரி தலை குனிந்தவாறு விலகுகிறார். 

எழுந்தார் சனாதிபதி, தன்னோடு யாரும் வரக்கூடாது எனப் பார்வையாலேயே பணித்துவிட்டு மரத்தடி நோக்கி நடக்கத் தொடங்கினார்.

25 மீற்றர் தொலைவில் வட்டமாக அவரது குளாம் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம் சனாதிபதி கிட்டே வந்தும்கூட மரத்தடிக்காரன் அசையவேயில்லை.
 

சனாதிபதி செருமிப்பார்த்தார் .......ம்கூம்..... எந்தச் சலனத்தையும் காணமுடியவில்லை.
 'சனாதிபதியைக் கண்டாலே காலைத் தொட்டுக் கும்பிடும் மக்கள் கூட்டத்தில் இப்படியும் ஒருவனா?' தொலைவிலிருந்த அதிகாரிக்குக் கோவமேறிக்கொண்டிருந்தது. 

சனாதிபதி இன்னும் அவனுக்கு அருகாமையில் வந்து தோளில் தொட்டு
 "தம்பி......." என அன்பொழுக அழைக்கிறார். 

அவனது தலை திரும்பி சனாதிபதியை ஒரு முறை மேலும் கீழும் பார்த்துவிட்டு மீண்டும் வழமைக்குத் திரும்பிவிடுகிறது.
 இச்செய்கை சனாதிபதியை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துவிட்டது. 

"தம்பி, நான்.... இந்த நாட்டு சனாதிபதி வந்திருக்கிறேன்.... என்னைப்பார்! உனக்கு என்ன தேவை சொல்லு தம்பி....."
 என நெகிழ்ந்த குரலில் 

இம்முறை சடாரென திரும்பிய அவன், சனாதிபதியின் முகம் பார்த்து,
"ஐயா.... இங்கு வந்தீட்டிங்களல்ல.... கொஞ்சம் பொறுமையாக இருங்க.... எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும். இங்கு வந்த புதிசில உங்களை மாதிரித்தான் நானும் கதைச்சுக் கொண்டிருந்தனான். கவலைப் படாதேயுங்கோ....." என்றவாறு பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினான்.
0000 0000

பிற்குறிப்பு :

அங்கொடை :– இலங்கையிலுள்ள மிப்பெரிய மனநிலைப் பிறழ்வு வைத்தியசாலை – (சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைக் குறிப்பிடுவது போல்)

-முகிலன்
பாரீசு 27 ஜனவரி 2010
(- 1977 காலத்தில் நான் கேட்ட கதை)


Saturday, 23 January 2010

சரம் 21 பன்னாடைகள்

சரம் - 21
பன்னாடைகள்

பாரீசில் வியாபார நிறுவனமொன்றில் பணியாற்றும் வார நாளொன்றின் மாலை நேரம், இம்முறை ஏற்பட்ட குளிராலும், பரவலாக சர்வதேச மக்களால் முகம்கொள்ளப்படும் நுகர்வுக் கலாச்சார முடக்கத்தாலும் மந்தமாகக் கழிகிறது.

என்னுடன் பணியாற்றுபவர் முப்பதைத் தொடும் துடிதுடிப்பான இளம் குடும்பத்தவர். பிரான்சுக்கு தன் பன்னிரெண்டாவது வயதில் வந்தவர். வேலைப்பழு தெரியால் இருப்பதற்காக அவ்வப்போது பல்வேறு விடையங்களை கதைத்துக்கொண்டே பணியாற்றுவதென்பது எங்களுக்குக் கைவந்திருந்தது.

தமிழில் உரையாடுவதற்கான சந்தர்ப்பமும், அடுத்த தலைமுறையினரின் சிந்தனைகள் தொடர்பாக எனக்கிருக்கும் ஆவலும் இத்தகைய கதையாடல்களில் அதிக நாட்டம் கொள்ள வைத்தன.


எமது கடைக்கு இவரது சித்தப்பா மகன் பிரபு அடிக்கடி வருவது வழக்கம். இந்த பதிம வயதினனை எனக்கு நன்றாகவே பிடிக்கும். இவன் பிரான்சு வந்து சுமார் நான்கு ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனாலும் கணினி பற்றிய தொழில்நுட்பத்தை விரல் நுனியில் பெற்றுவிட்டிருக்கிறான். போடோ சொப் இவனுக்கு கைவந்த கலை. இங்கு வந்தபின்தான் கணினியைப்பற்றி அறிந்திருந்தும், கணினியை பிரித்து மேய்ந்து மீளப்பொருத்தும் ஆற்றல் இயல்பாகவே வந்திருக்கிறது. இவரது குடும்பத்தில் இவனொருவன்தான் பிள்ளை. ஆதலால் பெரியப்பா குடும்பச் சகோதரங்களுடன் அடிக்கடி சந்திக்கும் ஆவல் இயல்பாகவே இவனுக்கிருந்தது.

வழக்கத்தில் உற்சாகமாகக் காணப்படும் பிரபு இன்று ஏதோ யோசித்தவாறு நின்று கொண்டிருந்தது எனக்கே ஒருமாதிரியாக இருந்தது. இவர்களை அவ்வப்போது நோட்டமிட்டவாறு வாடிக்கையாளர் தேவைகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.


"என்னடா! யோசிக்கிறாய்? ஏதாவது வேண்டுமா?......" பொறுக்க முடியாதவனாகி வார்த்தைகள் அண்ணனின் வாயிலிருந்து விழுகின்றன.


என்னை ஒருமுறை பார்த்துவிட்டு பிரபு பேசாமலேயே இருக்கிறான்.

இதைக் கவனித்த அண்ணன், "பரவாயில்லை, பிரபு எதெண்டாலும் சொல்லு!...."
"இல்லை...! அண்ணா!! நாங்களும் பெரியாக்களாக வந்ததும் சண்டைபோட்டு கதைக்காமல் இருப்பமா?"

துறுக்கென்றிருந்தது எனக்கு. முகத்தை மறுபக்கம் திருப்பியவாறு வேறொரு வேலையில் ஈடுபட முனைகிறேன்.


"ஏனடா இப்படியெல்லாம் யோசிக்கிறாய்? நாங்கள் ஒருபோதும் அப்படியெல்லாம் இருக்கவே மாட்டம்!" தமையன் ஆறுதல்படுத்தியவாறு எழும்புகிறார்.

தமையனின் கண்கள் என் பிரடியை நோக்குவது பிரடிக்கே தெரிகிறது.


ஊர்விட்டு, தேசம் மாறி, கண்டம் விட்ட தொலைவில் சிதறிக்கிடக்கும் மூத்த தலைமுறையினராகிய நாம் ஆறுதலாகச் சந்திக்கும் உறவுகளும் நட்புகளும் தொடர்பான நிகழ்வுகள் எம் முகம் பார்த்து வளரும் தலைமுறையினரின் வெண் மனத்திரையில் அழுக்குகளைப் பீச்சிவிடத் தவறுவதேயில்லை.


குறிப்பு:

பன்னாடை - கள்ளு வடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பனை அல்லது தென்னையில் எடுக்கப்படும் இயற்கை வடி. நல்லதை விட்டுவிட்டு அழுக்குகளைச் சுமப்பது இதன் சிறப்பு.

- முகிலன்
பாரீசு (20.01.2010)

Thursday, 21 January 2010

செய்திச் சரம் 9 பாரீசில் நோர்வே வாழ் புலம்பெயர் தமிழர்களின் திரைப் படைப்பாக வெளிவந்த 'மீண்டும்' திரையிடப்படுகிறது


செய்திச் சரம் 9
பாரீசில்
நோர்வே வாழ் புலம்பெயர் தமிழர்களின் திரைப் படைப்பாக வெளிவந்த 'மீண்டும்' திரையிடப்படுகிறது

பிரான்சில் எதிர் வரும் 31.01.2010 ஞாயிறு மாலை 18.00 மணிக் காட்சியாக ஓபவில்லியே நாற்சந்தித் திரையரங்கில் திரைக்கு வருகிறது நோர்வே என்.ரீ.பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மீண்டும்' திரைப்படம்.

நோர்வே வாழ் புலம் பெயர் மக்களின் கதையாடலுடன் வெளிவந்துள்ள 'மீண்டும்' திரைப்படம் பரவலான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது எனவும் உலகெங்குமுள்ள தமிழர்கள் இவ்வாறான படைப்புகளைப் பார்த்து விமர்சனங்களை முன்வைத்து நம் இளம் படைப்பாளிகளுக்கு உந்துதல் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார் நம் மத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தின் தமிழ் திரையுலக வளர்ச்சியில் அயராது ஈடுபட்டுவரும் மூத்த கலைஞன் ரகுநாதன் அவர்கள்.

இவ்வகை முயற்சிகள் தேசம் கடந்த பார்வையாளர்களிடம் செல்ல வேண்டுமென்பதற்காக தனது 75வது அகவைக் காலத்தில், சிறு பையனின் வேகத்துடன் களப்பணியாற்றிவரும் திரு ரகுநாதன் அவர்களைக் காணுற்றபோது நாம் கலைக்காக நிறையவே செய்தாக வேண்டுமென்ற உந்துதல் கிடைத்தது. இவரது முயற்சியாலேயே பாரீசில் இப்படம் திரைக்கு வந்துள்ளது.

பொங்கல் திரைப்படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' பற்றியும் உலகத் திரைப்படங்களில் 'அவதார்' பற்றியும் கதையாடல் நடைபெற்றுவரும் யதார்த்த நிலையில் நம் இளைஞர்களின் திரை முயற்சி பற்றியும் அறியவேண்டியது அவசியமானதுதானே என்றார் என்னுடைய நண்பர்.

திரைப்படம் தொடர்பாக மேலும் அறிவதற்கு: என்.ரீ.பிக்சர்ஸ் http://www.ntpicture.com/

தகவல்: முகிலன்
பாரீசு 20.01.2010

பிற்புறிப்பு:
ஈழத் தமிழ்த் திரைப்பட படைப்பாளர்களும் தமது படைப்புகளை வெளிக்கொணர முயற்சிப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. அந்த வரிசையில் நோர்வே நாட்டில் பல குறும்படங்களைத் தயாரித்து வழங்கிய N.T.PICTURE இன் ”தொப்புள்க்கொடி” யைத் தொடர்ந்து இரண்டாவது முழுநீளத்திரைப்படம் ”மீண்டும்”
இந்தியாவில் திரையுலகம் நிறுவனமாக்கப்பட்ட நிலையில் இங்கு சிலர் கூடி ஒரு முழுநீளபபடம் எடுப்பது என்ற முயற்சியும் அதில் வெற்றி பெறுவதென்பதும் இலகுவல்ல. அந்த வகையில் N.T.PICTURE இனரையும் அதில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களையும் வாழ்த்துவதோடு நில்லாமல் பாராட்டியும் ஆகவேண்டும். படம் முடிந்து வெளியே பேசப்பட்ட விடயங்களில் ”மீண்டும்” திரைப்படம் பலர் மனதைக் கவர்ந்ததாகவே சொல்ல வேண்டும். இரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிவைக்கக் கற்றுக்கொண்ட திரைப்படக்கலைஞர்கள் மேலும் இனி ஆக்கபூர்வமான படைப்புகளை வழங்குவர் என்றே நம்பத்தோன்றுகிறது. N.T.PICTURE இன் முந்தய முழுநீளத் திரைப்படத்துடன் (தொப்புள்க் கொடி) ஒப்பிடும் போது ”மீண்டும்” திரைவிருந்தில் இயக்குனர் படப்பிடிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர்களின் சிறப்பான வளர்ச்சி தெரிகிறது.
விமர்சனம்: கவிதா

பாரீசில், கலையரசு சொர்ணலிஙகம் -நூல் அறிமுகமும், கலையரசு விருது 2009 வழங்கலும்


செய்திச் சரம் - 8
பாரீசில் ஈழவர் திரைக்கலை மன்றம் நடாத்தும்
'ஈழத்தில் நாடகமும் நானும்' நூல் அறிமுகமும் -
சிறந்த கலைஞருக்கான 'கலையரசு விருது2009 வழங்கலும்!

எதிர்வரும் 30.01.2010 சனி பிற்பகல் 6 மணி 30 இற்கு பாரீசு 18 இல் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைக்கழக (பாரீசுக் கிளை) மண்டபத்தில் ஈழவர் திரைக் கலை மன்றத்தினரால் கலையரசு சொர்ணலிங்கம் நினைவாக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.

இம்முறை பாரீசில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 'ஈழத்தில் நாடகமும் நானும்' நூல் அறிமுக அரங்கமும், ஈழத்துச் சிறந்த கலைப்படைப்பாளிகளைத் தெரிவு செய்து கெளரவிக்கும் கலையரசு விருதாகிய 'கலாவினோதன் 2009' வழங்கல் அரங்கமும் நடைபெறவுள்ளது.

2006 முதல் இதுவரையில், இலண்டனிலும் கொழும்பிலும் நிகழ்ந்த இந்நிகழ்வு இம்முறை பாரீசில் நடாத்தப்படுகிறதெனவும் இதனைத் தொடர்ந்து 'கலாவினோதன் 2010' விருது நிகழ்வு கனடாவிலும் அவுர்திரேலியாவிலும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டார் ஈழவர் திரைக்கலை மன்றத் தலைவர் பாரீஸ்டர் யோசெப் அவர்கள்.

பாரீசு நிகழ்வில் இம் முறை 'கலாவினோதன் 2009' கெளரவிப்பைப் பெறுகிறார் நீண்ட காலமாக கலைப்படைப்பாற்றலை வெளிப்படுத்திவரும் பல்துறைக் கலைஞன் திரு பரா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார் அமைப்பாளர்களில் ஒருவரும் நம் மூத்த கலைஞனுமாகிய ஏ. ரகுநாதன் அவர்கள் அனைவரையம் அன்புடன் அழைப்பதாகவும் குறிப்பிட்டார்.

காலம் : 30.01.2010 சனி மாலை 18 மணி 30 நிமிடம்
இடம் : 70 Rue Phillippe de Gerard, 75018 Paris

தகவல் : முகிலன்

பிரான்சு 20. 01. 2010

Thursday, 14 January 2010

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

பகிர்வுச் சரம் 1
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தைப் பொங்கல் நாள்
தமிழருக்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்.

புலம் பெயர்ந்தும் தமிழுடன் பிணைந்து நீளும் எமது வாழ்வு 'காலம் அரித்திடாது மூலம் காத்திடும்' அரும்பணியுடன் தொடருட்டும்!

-தோரணம்
முகிலன்
பாரீசு
14.01.2010

Friday, 11 December 2009

சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு


சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18)
சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத் துளிகள் (18)
-குணன்
(அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில் எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது.)

புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு ?

இன்றைய புலம்பெயர் வாழ்வில்,அதிகமாக பேசப்பட்டும் கருத்துக்கள் தெரிவித்தும், ஊடகங்களிலும், மேடைகளிலும், விவாதிக்கப்பட்டும் விளக்கம் பெற முடியாது எல்லோரையுமே தடுமாற வைக்கும் தலைப்பாக, தமிழர் பண்பாடு என்ற 'கருத்துரு' தோற்றம் பெற்றுள்ளதோவென எண்ணவேண்டியுள்ளது.

இதற்கு காரணங்கள் ஏதும் உண்டா? அல்லது, பண்பாடு பற்றிய தவறான கருத்தாக்கம் தோற்றம் பெற்று விட்டதா? என ஆழமாக வரலாற்றுப் பின்னணியில் ஆராய வேண்டுமா? என கேள்விகள் எழுந்துள்ளனவா? அல்லது எழுப்பவேண்டுமா? என்பதை ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பு மானிடவியலாளர்களுடைய பிரதான பணி எனக் காணப் படவேண்டும்.

மானிடவரலாற்றில், உலகின் பல பாகங்களிலும் வரலாறு காணதா காலந்தொட்டடே நீண்ட மனித நாகரிகம்-பண்பாடு, என்ற பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதும், மனித இடப்பெயர்வுகளினால், ஆதிக்க மேலாண்மை, மத,மாற்றம், மொழி மேலாதிக்கம், தொழில், கலை என, புதிய அறிமுகங்கள் எனப் பேணவேண்டிய காரணிகள் பண்பாட்டு, நாகரிக மாற்றங்களுக்கு உதவுகின்றன!


நாகரிகம்-பண்பாடு என்றால் என்ன?

மனித நாகரிகம், மருதம் சார்ந்த, ஆற்றங்கரைகளின் நிலப்பரப்பில் நிலைபெறத்தொடங்கியதும், பண்படுத்தப்பட்ட நிலங்களில், பயிர்ச்செய்கை இடம்பெற்றது. அதனையடுத்தே நிலையான குடியிருப்புச் சூழல், சுற்றாடல் போன்றவை உருப்பெற்றதும், குடும்பங்கள், உறவுகள், குடியமைப்பு, நண்பர், அயலவர், மேலோர், கீழோர், முதலையுடையோர், பணியாளர்கள், ஆள், பொருள் ஆதிக்கம் படைத்தவர்கள், எனப் பல்வேறு கட்டமைப்புக்கள் கொண்ட குடிகள் வாழும் நகரங்கள் தோன்றியன. ஏனையோருக்கு உணவு தரும் உழவுத் தொழில் முக்கியம் பெற்றிருந்ததும், வேளாண்மை கொண்டவர்கள், பதினெட்டுத் தொழில்களில் பிரதானமாகவும் விளங்கியது. இதன் காரணம் போலும் மனித வாழ்க்கையில், உணவுத் தொழில் முக்கியம் என்று கருதினார் போலும்! இவ்வாறான, குடிவாழ்க்கை, என்பதே,“பட்டின வாழ்க்கை“,(இலத்தீனில்- civitas-city or city state)என்ற கருத்தில், ”நாகரிகம் வாய்ந்த”(civilized life), என்ற கருத்தியல் தோன்றியதென்பர். இந்த நாகரிகம் வாய்ந்த குடியினரே(citizen) ஆட்சிப் பொறுப்புடையவர்களாகி தலைவர்களாக, பின்னர் முடிசூடிய மன்னர்களாக,(சர்வாதிகாரிகளாக மாறி) அதிகாரம் செலுத்திய வரலாறுகள் அறியமுடிகிறது! நகரங்களிலிருந்து தொடங்கிய மக்கள் குடிமுறை வழியாக, நாகரிக வாழ்க்கை, இயற்கையாக அமைந்த துறைமுகங்கள் அருகாமையில், வளர்ச்சி பெற்ற பெரிய பட்டினங்களை உருவாக்கியதென்பதற்கு, பண்டைய நாள் முதலாக, இன்றுவரை உலகநாடுகள் எங்கணுமே காணலாம்!

பண்டமாற்று, குடியேற்றம், வாணிபம், கப்பல் போக்குவரத்து என இதில் பல அடக்கம்! இன்றும், புலப் பெயர்வுக்கு முக்கியமான வழியாக, துறைமுகங்கள் -கப்பல் பிரயாணம் அமைந்திருக்கின்றது. இலங்கைத் தீவுக்குள் அகதியாக, எழு நூறு தோழர்களுடன் வட நாட்டிலிருந்து விஜயன், வந்திறங்கிய தம்பபண்ணை, ஓர் இயற்கைத துறை முகம் என்பதும், இங்கிருந்து வெளி நாடுகளுக்குச் செல்கின்ற நாவாய்கள், தோணிகள், கப்பல்களை ஆரியசக்கரவர்த்தி நிறுத்தி வைத்திருந்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதே போன்று, மாந்தை(மன்னார்), பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் என துறை முகங்களைச் சார்ந்த, தமிழர் தாயகம், பலநூற்றாண்டு கால நாகரிக வாழ்க்கைக்கு அடிகோலி இருந்தது!

பட்டினங்களில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடைய வரவால் கிடைக்கப்பெற்ற அனுபவங்களால் பட்டினவாசிகள் நாகரிகமடைந்தவர்கள் எனவும், கிராமத்தவர்கள், இவ்வாறான புதிய அனுபவங்களைப் பெறமுடியாதவர்களாக தனிமைப்பட்டிருந்த கிராமவாசிகள் ”பட்டிக்காட்டு”மக்கள் எனவும் குறிக்கப்பட்டதும் கவனிப்புக்குரியது!

பண்பாடு என்றால் என்ன?

பண்பாடு என்றால் எதனைக் குறிக்கிறது? தமிழர் பண்பாடு என்றால் யாது? என்று, கேட்கப்படுவதும், அதற்கு நீட்டி முழக்கிப் பதில் அளிப்பதும், எங்குமே காணப்படுகின்ற வழக்கம். அந்த விளக்கம் முழுமை என்று கருதலாமா? வெளிப்படையாகவே இது இயலாது என்பதை யாராலும் உணரமுடியும்.

தோற்றப்புல வெளிப்பாடாக அமையும் வேட்டி, மேற்சட்டை, சால்வை(தலைப்பாகை நீங்கலாக!) ஆண்களும், சேலை, சட்டை அணிவது(பழைய, புதிய) முறைகள் பெண்களும், கடைப்பிடிப்பதை தமிழர் உடைப் பண்பாடு என்பதும், குங்கும் பெண்களுக்கும், சந்தணம் ஆண்களுக்கும் (பொது வைபவங்களில் அனைவருமே அணிவதுண்டு), தமிழர் பண்பாட்டு அடையாளம் என்பர்! இது ஒரு சமயத்தவரின் குறியீடு என்று கூறி, மறுப்பவரும், தவிர்த்துக் கொள்வாரும் உண்டு!

பெண்கள் பருவம் எய்தி நடாத்தப்படுகின்ற சடங்கு, ஒருவர் மறைந்த பின்னர், குழந்தை பிறந்தால், பின்னர் காலத்துக்கு காலம் நடாத்தப் படுகின்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் என நடந்தேறிய எண்ணற்ற செயற்பாடுகள் அனைத்தையும் பண்பாடு என்று கூறுவாரும் உண்டு.

இது பற்றி, பேரா.தேவநேயப்பாவணர் குறிப்பதைப்போல, ”நாகரிகம் என்பது அழகுறத் திருந்திய வாழ்க்கை வழக்கம்", இதில் அந்தந்தக் காலக்கட்டத்தில் அறியப்பட்ட பொருள்களையும் தமக்கே பயன்படுத்தல்(அழகுபடுத்தல் அல்லது மெருகூட்டல்) வழக்கம், பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் (வாழ்வு நெறி), அது சீரான வாழ்வுத் தேவையை முதன்மைப்படுத்தியதாக எல்லாப் பொருட்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தும் ஒழுங்காற்று முறைமை” என எண்ண முடிகிறது! ஒருவரின், அல்லது ஓர் குறிப்பிட்ட தொகுதி(இன, சமய, குழு)சார் மக்களிடத்தில், காணப்படுகின்ற பழக்க, வழக்கங்கள் வேறு சில மக்கள் கூட்டத்தினருக்கு, ஏற்கமுடியாத, அருவருப்புத்தருகின்ற (மேற்கு நாடுகளில், பொது இடங்களில் கைகளால் உணiவு உண்பது வெறுக்கப்படுவது, அல்லது விரும்பத்தகாததைப்போல), அக, புற பண்பாட்டு வெளிப்பாடுகள் பார்க்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் காணலாம்! ஆயினும், ஒருவரின், மாறுபட்ட பழக்கங்கள் என்பது, தனித்துவம் கொண்ட, அதேநேரத்தில், பலரால் பேணப்படும் பொழுது, அதனைப் பண்பாடாகப் பார்க்கவும், மதிக்கப்படவும் வேண்டும்!

புலப்பெயர்வில், பொது - குடும்ப விழாக்களில் இடம்பெறுகின்ற தோற்றப்பாடுகள், பற்றிய வினாக்களை, பிற மத, இன, மக்கள் கிளப்பும் போது, சரியான விடை தரவேண்டியவர்கள், பலவாறு, விளக்கம் தருவதைக் காணலாம்! பெண்கள், திலகம் இடுவது பற்றி பலரும் வினா எழுப்புவதைக் காண முடிகிறது! இதை, அழகுச் சின்னம், சமயச் சின்னம், அறிவுச்சின்னம் (மூன்றாவது கண்!) என விளக்கங்கள் தரப்படுகின்றன! இவ்வாறான, ஒரு கூட்டுப் பழக்கம், ஓர் தொகுதி மக்களால், தொடர் நிகழ்வாக காரணம் புரியா நிலையிலும் பின்பற்றப்படுகின்ற "பண்பாட்டுக் குறியீடாக" கொள்ளப்படுவதான (Sign is something which stands to somebody for something insome respect or capacity) உட்கருத்தை தாங்கியதென்பர் குறியீட்டியலாளர்(Semiologist). இவ்வியல் நிபுணராக,பிரஞ்சு நாட்டின் மிசேல் புக்கோ (Michel Foucault) மதிக்கப்படுபவராவார்.

ஒருவரிடம், எமது அன்பு, இரக்கம், நன்றி போன்ற அக பண்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக, மலர்கொத்தை (குறியீடாக) வழங்குவதைக் கூறலாம். இதே போல, அமைதிச் சின்னமாக, புறாவைக் குறியீடாக்குவதையம் குறிப்பிடலாம்.”குறி” என்பது,”உணர்த்து” என்ற பொருளில் வாழ்வின் ஒவ்வொரு செயலும், ஒன்றை உணர்த்தி நிற்கின்ற தென்பதால், ஒரு தனிமனித நடத்தை, அவன் சார்ந்த, இன, மதப் பிரிவையும் பிரதிபலிக்கின்றதென்பது உணரப் படவேண்டியதாகும்! புறத்தோற்றங்களுக்கான மதிப்பீடுகளின் முக்கியத்துவம், பெறுமானங்களைவிட, அகவுணர்வுகளைப் புலப்புடுத்தி நிற்கும்.

மானிடநேய விழுமியங்களின் அடிநாதமாகிய அன்பு, இரக்கம், கொடை ஆகிய பண்புகளையே சிறப்புடையனவாக அறிவுடையர் கருதுவர். பட்டினியால் வாடும் ஒருவருக்கு தான் உண்பதை பங்கிட்டு உண்ணும் பண்பு வாயினால், வெறும் வார்த்தைகளைவிட பயனுடையதாகும்!இதனை, தமிழ் ஞானி திருவள்ளுவர், மிக நுட்பமாக,
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "
- திருக்குறள் (322),
கூறியவாறு,கோடி நீதி, தத்துவ வாசகங்களை விட, ஒரு சிறிய செயலாக்க வடிவம், நிகழ்த்தல், பெரியதும், தலையாயதுமாகும்! ஒரு போதனையைவிட, ஒருவரின் பட்டறிவு மேலானது!

இரண்டாம் உலக போர் இறுதிக்காலநாட்கள், அறுபது ஆண்டுகள், கழிந்த பின்னரும், அன்று, ஒன்பது வயதுச் சிறுவனாக நானும், பிள்ளைப் பருவத்தினராகிய எனது இரு சகோதரர்களும் உணவுப் பஞ்சத்தினால்,அ வதிக்குள்ளாகிய வறிய குடும்பங்களில் ஒன்றாக இருந்து பட்ட பசியின் கொடுமையை இன்றும், முழமையாக என்னால் உணரமுடிகிறது. எங்கள் பசியைத் தீர்த்தவரையும், இன்றும் நெஞ்சில் நினைக்க மறந்திடவில்லை! அவ்வாறே, புகலிட வாழ்வில், உள்ள பல்லினத்தவர்களை, தமது நாடுகளில் அனுமதித்து, தம்மைப்போல வசதிகள் வழங்கி, வாழ வைத்த மக்களுக்கும், அவர் தம் அரசுகளுக்கும் நன்றியுணர்வுடையவர்களாக –பண்புடையவர்களாக வாழவேண்டுமல்லவா?
(பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.Ägyptischer Maler um 1400 v. Chr. 001.jpg)




அறிவியலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் -எடுத்துச்செல்லுங்கள்!

கால் நூற்றாண்டுக்கு முன்பு, 1985ல், பேர்லின் நகரில், வாழும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில், உரையாற்றிய (20.10.1985), அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி அவர்கள், ”ஐரொப்பிய நாடுகளில், வாழும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக பெரும்பான்மைத் தமிழ் இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்” என்ற தலைப்பில் வழங்கிய கருத்துரையில், "ஐரோப்பிய நாடுகளில், சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்து உறவை, ஊரை, நட்பை, பிறந்த மண்ணைப் பிரிந்து வாழ்வதென்பது, மிகப் பெரிய துயரம் மட்டுமன்றி பேரிழப்புமாகும். இதனை இளைஞர்கள் பிற்காலத்தில் தான் நன்கு புரிந்து கொள்ளவும், வருத்தப்படவும் முடியும்!" ஏதோ ஒரு விபத்தைப்போலவே இன்றைய புலப்பெயர்வு உங்களை இங்கு தள்ளிவிட்டிருக்கிறது! இதில் பெருமையோ, மகிழ்ச்சியோ ஏற்பட முடியாது -கூடாது! இது ஒரு வேதனை தரும் நிகழ்வாகவே நீங்கள் கருதி, அந்த வேதனை வாழ்க்கையை ஒரு சாதனை வாழ்வாக ஒவ்வொரும் மாற்ற சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்! இதனை, எனது பணிவான வேண்டுகோளாக உங்கள் முன் கூற விரும்புகிறேன்!” என்று குறிப்பிட்டு, இங்குள்ள கண்மூடித்தனமாகக் கெளவிக் கொள்ளப்படும் ஆடம்பரங்கள் காலப்போக்கில் அர்த்தமற்றதாகிப்போய் எமது பண்புகளுக்கும் ஒழுக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். நிதானமாக சொந்தப் புத்தியில் அறிவைத் தேடி வாழப் பழகியவராக முடிந்தவரை, ஐரோப்பாவின் அறிவியல்களை பெற்றுகொள்ளுமளவுக்கு தேடிக் கற்றுக்கொள்ளுங்கள்!"

"தமிழர் வாழ்வுக்கும், ஒழுக்கத்திற்கும் ஊறு விளைக்கும், கீழ்த்தர நடவடிக்கைகளில் பலர் தம்மை ஈடுபடுத்துவதைக் காண வருத்தம் அடைகிறேன். இவ்வாறன செயல்களில் தம்மை ஈடுபடுத்துவோர், தமக்கும் தான் சார்ந்த மக்களுக்கும் தீங்கு செய்பவர்களாவர்!இவ்வகையினர், தம்மை அழிப்பதுடன், தமது கிடைத்தற்கரிய மனித வாழ்வையே முழுமையாக இழந்துவிட நேரிடுகிறது. எனவே, ஒரு நாள், நீங்கள் அனைவருமே, உங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வாழவேண்டியபோது, உங்களுடன், இங்கு கற்றுக் கொண்ட அறிவியலை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், இன்றேல், நீங்கள் கண்டு, கேட்டு, கற்றுக்கொண்டவற்றை, முடிந்தவற்றை நூலாக, பதிவுகளாக, கலை வடிவங்களாக ஆவணமாக்குங்கள். பெற்றிருக்கும் இத்தகைய புதியதான அனுபவங்களை உண்மைப் பதிவுகளாக்க முனையுங்கள்!” என்று குறிப்பிட்டு, மேலும் தொடர்கையில், ”உங்கள் உடன் பிறப்புக்கள், தமிழகத்தில் அகதிகளாக முகாம்களில், மிகவும் துயர் பட்டுக்கொண்டிருக்கையில், இங்கெல்லாம், அர்த்தமற்ற விதத்தில், நீங்கள் நடப்பதை எப்படி (சினிமாக்காரர்களுக்கு மேடையில், தங்க மோதிரங்கள், சங்கிலிகள், விருந்து என…….!) ஏற்பார்கள்! தமிழர் சமுதாய வாழ்வியலில்,என்றுமே சாதி இருந்ததில்லை என்பதை தமிழ் இலக்கியங்கள்(சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்)".

"சாதி என்ற அநீதி மதத்தினூடாக இடைச்செருகலாக புகுத்தப்பட்டு, இதனை இன்றும் கடைப்பிடிப்பது அறிவீனமல்லவா? தமிழரின் அறிவுக் களஞ்சியமாகிய திருக்குறளை, அன்றைய மதந்சார்ந்திருந்து கோலோச்சிய மூவேந்தர்கள் எனப்படுவோரும் வளர்த்திட உதவவில்லை! வேதங்கள், புராணங்கள் கட்டிக்காக்கப்படவேண்டி தமிழர் கிராமங்களைத் தானம் செய்தார்கள்! இவ்வாறு தமிழர் வாழ்வை சிறுமைப்படுத்தவே உதவியதால், தமிழ், தமிழர் தாழ்வடைந்தனர்!"

"இங்கு எல்லா வசதி வளங்கள் கிடைப்பதாக உங்கள் வாழ்வை மறந்து, வருங்கால நிலை மறந்து வாழாதீர்கள்! அடிமைத்தனம், எந்த உருவத்தில் வசதிகளைத் தந்தாலும், அது அடிமை வாழ்வே என்பதை மறந்து விடாதீர்கள்! நாம் இங்கு உபதேசிகளாக வரவில்லை உங்களைக் காணவும், உங்களிடம் கேட்டறியவும், ஐரோப்பா வாழ் தமிழரைக் காணவுமே ஆவலாக வந்திருந்தோம். இங்கு எமது ஐரோப்பிய பயணத்தில் பேர்லின் வாழ் உங்களைக் கண்டு, உரையாட வசதி செய்த பேர்லின் நலன் புரிக்கழக நிர்வாகத்தினருக்கும் நன்றியறிதல் உடையோம்!உங்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் எமது நன்றிகள் உரித்தாகுக! வணக்கம்!!” இவ்வாறு, ந.சஞ்சீவி அவர்களின் உரை, காலந்தாண்டியும் நிலைக்கும் கருத்துக்களாக இன்று நான் நினைவில் மீட்டுப்பார்க்கிறேன்.


எண்ண சில எண்ணங்கள்

இன்று, வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில், ஒரு வீதத்தினர் கூட, தமது தாய் நாட்டில் சென்று வாழ -வாழும் திடம் கொண்டிருப்பார்களா? என எதிர்பார்க்கக் கூட முடியாது! அவ்வாறாயின், அவர்கள், தமக்கு வாய்த்த புகலிட உரிமைகளை தூக்கி எறிந்து விட்டு தாம் பிறந்த மண்ணில், தம் பெற்றோர், உறவினர், ஊரவர் என பலரும் வாழ்ந்த மண்ணில் செல்ல யாரும் (எந்த தலை முறையினரும்) முன்வரப் போவதில்லை என்பதும், அங்கு தமக்கு, எந்தவித உறவோ,அறிமுகமோ இல்லை என்றும் முதிர்ந்த உறவுமுறையினரும் மறைந்து விட்டார்கள் என்று கூறும் பலரை எங்குமே அறிந்து கொண்டிருக்கிறோம்! அவ்வாறு தமது கருத்தை வெளிப்படுத்துபவர்களின், அடுத்த தலைமுறையிரும், தொடர்ந்து வருபவர்களும், எதிர்காலத்தில் தமது பெற்றோர்கள், பாட்டன் பாட்டி பிறந்து வாழ்ந்து மறைந்த மண்ணை எட்டிக்கூட பார்க்கும் நிலை வரமாட்டாது -வரும் வாய்ப்பு ஏற்படும் சூழுல் உருவாக இடம் எழாது என்பது இன்றே உருவாகியுள்ளது!

மேலும், இங்கு புதிய தலைமுறையினராகிய இளைய தலைமுறை, தங்கள் பெற்றோரின், உறவுகளோடு, முழமையாகத் தொடர்பை வைத்துக்கொள்ளவும் -வளர்க்கவும், வாழ்க்கைப் பந்தம் ஏற்படுத்தவும் முடியாத ஓர் அவல நிலை உருவாகிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கு, இரண்டு முக்கிய காரணிகளைக் கூறலாம். ஒன்று தாய்மொழிச் சிக்கல், மற்றையது வளர்ந்த பண்பாட்டுச் சிக்கல் என்பதை விபரிக்க வேண்டியதில்லை. பிற இனத்தவர்களின், புதிய தலைமுறையினரை விட, தமிழர்களின், உறவுப் பாலம் மிக பலவீனமுற்றிருப்பது வெள்ளிடமலை. இனி வருங்காலத்தில் இது மாற்றத்துக்குள்ளாகாது போயின், புலமபெயர் தமிழினம் கூறுபட்ட -வேறுபட்ட குழுவாகவே மாற்றம் பெறலாம்!

இவற்றைக் கடந்து, இணைந்த இனமாக காப்பாற்ற அல்லது நிலைத்து, நீடித்து, பண்பாடு, தாய்மொழி, உறவு வளர, புலம்பெயர் புதிய தலைமுறைத் தமிழர்கள், தமது பெற்றோர்களின் தாய் மொழியாகிய தமிழ் மொழியை, மற்றெல்லாவற்றைக் காட்டிலும், உறவுப் பாலமாக கைக்கொள்தல் அவசரமும் -அவசியமுமாகும்.
***********************

பிற்குறிப்பு 1.:

பண்பாடு
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து)

பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.

பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு,
இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.

பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்
படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

(இன்று கம்போடியாவின் பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில்)
பிற்குறிப்பு 2.:
'பண்பாட்டு அசைவுகள் ' நூலிலிருந்து உணவும் நம்பிக்கையும் - தொ. பரமசிவன் (திண்ணை)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=203082810&format=html
"தமிழருகென்று தனிப்பண்பாடு இருக்கின்றதா?" - மு. பொ நேர்காணல் (ஆறாம்திணை) http://www.aaraamthinai.com/guest/ponnambalam.asp


தொடர்பான பதிவுகள்

சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (17) இழந்ததும் பெற்றதும்......

Tuesday, 8 December 2009

செய்திச் சரம் - 7 நோர்வே ஒஸ்லோ நகரில் “ஈழத்தில் நாடகமும் நானும்" நூல் அறிமுக நிகழ்வு

செய்திச் சரம் 7
“ஈழத்தில் நாடகமும் நானும்" நூல் அறிமுக நிகழ்வு
ஈழத்தமிழர் பரவிவாழும் உலக நகரங்களில் ஒன்றான ஒஸ்லோவில் 13.12.2009 ஞாயிறன்று நடைபெறவுள்ளது
TAMIL DRAMA IN CEYLON AND MY PART IN IT
By Kalai Arasu K.CHORNALINGAM




"ஈழத்தில் நாடகமும் நானும்” கலையரசு க. சொர்ணலிங்கம் அவர்களாள் எழுதப்பட்டு 1968 ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலை ”ஈழவர் திரைக்கலை மன்றம்” மறுபதிப்பு செய்து 13.12.2009 ஞாயிற்றுக்கிழமை Veitvet skole மண்டபத்தில் (Veitvetveien 17, 0596 Oslo) 17.30 மணிமுதல் 18.30 மணிவரை நோர்வே தமிழ் பிச்சர்(nt picture), சலங்கை நர்த்தனாலய ஆதரவுடன் இந்நூலை வெளியிடவுள்ளது.


பிரதம விருந்தினராக இந்நூலின் மறுபதிப்பில் முக்கிய பங்காற்றிய 'ஈழவர் திரைக்கலை மன்றம்' இன் தலைவரான பரீஸ்ரர் எஸ். ஜே. ஜோசெப் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். நம்மவர் கலையில் ஆர்வமுடையவர்களை அன்புடன் அழைக்கின்றனர் அழைப்பாளர்கள்.


இந்நிகழ்வு உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களிலும் நடக்கவுள்ளதென்பது முன்னரே அறியப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.


மேலதிக விபரங்கள்:
www.ntpicture.com/index.php?option=com_content&task=view&id=231

தகவல்: மூத்த நடிகரும் இந்நூலாக்க மறுபதிப்பாக்கத்தில் முன்னின்றவருமான திரு ஏ. ரகுநாதன் அவர்கள்.