Friday, 20 June 2014

தோடுடைய செவியர்

குஞ்சரம் 22

தோடுடைய செவியர் (யன் - யாள் அல்லாது பொதுப்பால்)

அண்மையில் அமெரிக்க நாடுகளில் குடியேறி வாழத்தலைப்பட்ட உறவினர்கள் எங்களது இல்லத்தில் வந்திருந்து சென்றார்கள். இதன் பின்னரான குடும்ப  உரையாடல் ஒன்று என்னை அதிகம் ஈர்த்ததாக அமைந்திருந்தது.
"தோடு அது இதுவென்றும்.... தலை முடியை தாறுமாறாக வெட்டிக் கொண்டு மையடித்துக் கொண்டும் என்னுடைய பிள்ளைகள் இருக்கவே கூடாது! தொலைச்சுப் போடுவன்!!..." வீட்டு அம்மணியின் குரலில் அதிகாரம் அதிக காரமாகவே அன்றிருந்தது.
இப்படியான தொனியில்  பந்தாகப் பறக்கும் வார்த்தைகள் எனக்கானதாக இருப்பதே வழக்கம். ஆகையால் எனது செவி கூர்மையாகியது. நானும் அவதானமாகினேன்.
"ஏன்..... அம்மா இப்படிக்  கத்துறீங்கக..... இப்ப என்ன  நடந்து போச்சு...."  பெரியவன் ஆச்சரியத்தோடு!
"நான் எல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறன்... சரியோ..." தாயாரின் சூடு சொற்களில் தகித்தன.
"என்ன அம்மா..... இப்ப என்ன நடந்து போச்சுது.... நாம நல்லாத்தானே இருக்கிறோம்!" குரலில் இறைஞ்சலிருந்தது.
"நீயும் உன்னுடைய நட்புகளும்.... நான் இப்ப உன்னுடைய முகநூலில் சில படங்களைப் பார்த்தனான். தலை மயிரை கன்னா பின்னாவென்று வெட்டுவது..... காதில தோடு போட்டுக் கொண்டு திரிவது இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது!" கண்டிப்பு உச்சத்தானியிலிருந்தது.
"அவங்கள் போடுவதற்கு நான் என்ன செய்ய?..... சும்மா என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..."
"யார் அவங்கள்?... இப்படியான தமிழாக்களோடு சேரவேண்டாமென்றுதானே சொன்னனான்.."
"புட்போல் விளையாட வந்தவங்கள்.... அதுக்கென்ன இப்ப...."
"அதுதான்.... எப்படி நீங்கள் விளையாடுற கிறவுண்டுக்குகெல்லாம் அவங்கள் வந்தவங்கள்?"
"நான்தான் கூப்பிட்டனான்...... அவங்க நல்லா விளையாடுவாங்களம்மா... அதுக்கென்ன இப்ப! அப்பாவிடம் கேளுங்கோ..."
"அந்தாளை ஏன் கூப்பிட வேண்டும்? 50 வயதிலும் வெட்கமில்லாமல் குடும்பி வைத்துக் கொண்டு திரிஞ்ச ஆள்தானே.... இதனால்தானே எனக்கு பயமாக்கிடக்குது!!"
திடுக்கிட்டுப் போனவனானேன்.
"அதுவொன்றுமில்லை கனடாவில இருந்து வந்த அம்மாவுடைய சொந்தக்காரப் பொடியனும் அவர்களுடன் வந்திருந்த பொடியனும்... காதில தோடு போட்டிருந்தவங்கள் தானே.... அதனாலே அம்மாவுக்கு பயம் வந்திட்டுது...!" என தாயாரைக் கட்டிப்பிடித்வாறு கூறினான் எங்களது இளசு. தனது அறைக்குள் பல்கலைப் புகுமுக வகுப்புத் தேர்வுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த எங்களது இளைய மகன் 'இந்த உரையாடல் வெளியில்' நுழைந்தது ஆச்சரியமாக இருந்தது.
தயார் ஆடித்தான் போய் விட்டிருந்தார். என்னையும் அறியாது புன்முறுவல் வெளிப்படுகிறது.
"எனக்கென்று என்ன இருக்கு.... எல்லாற்றையும் இழந்து போட்டேன்...." தாயார் அழாக்குறையாக ஆனால் இப்பொது குரலில் நெகிழ்வு இருந்தது.
"என்னமா... இழந்து போட்டீங்கள்.... நாங்கள் இரண்டு நல்ல பிள்ளைகள் இருக்கிறம்தானே....!" இளசு அன்பால் அள்ளி எறிந்த குறி தப்பவே இல்லை. தாயாருக்கு அடக்க முடியாதவாறு சிரிப்பு வெளிப்பட அது எல்லோரையும் தொற்றிக் கொண்டது.

00000 00000 00000

தண்ணீரில் ஒரே ஒரு சிறு கல் விழுந்தாலும் எத்தனையோ அதிர்வலைகளை உந்தித் தள்ளிவிட்டுத்தான் அமுங்கிப் போகும். இதனை போன்றதுதானே நம் மனக் கிணறும்!

செவி - தோடு - கடுக்கண்

1.
மனித உயிரிகளுக்கு எத்தனையோ விசித்திர ஆசைகள். ஆதிகாலத்திலிருந்து இன்று வரை மாற்றம்தான் மாறாதது என்பதான தொடர் அசைவுகளுடனான வாழ்வை நிலைநாட்டிவாறே பயணிக்கும் தனித்துவமானதொரு உயிரி.
ஆனாலும் ஈழத்தில் பிறந்திருந்த நம் தலைமுறையினருக்கு நினைவுத் திரையில் ஆடும் பிம்பங்கள் ஆழ்மனப் பதிவுகளில் உறைந்துதான் கிடக்கின்றன. இலங்கையின் மத்திய மலைநாட்டு நகரான பதுளையில் வாழ்ந்த எமது குடும்பம் 1958 இனக்கலவரத்தின் பின்னர்  அம்மாவின் ஊரான கரம்பனில் குடியேறிவிட்டது. அப்போது எனக்கு வெறும் இரண்டு வயதுதான். எனக்கு ஏதுமே ஞாபகத்தில் இல்லை. ஆனால் இது தொடர்பாக அம்மாவும் அப்பாவும்  பிற்காலத்தில் சொன்ன கதைகள் அனைத்தும் இன்றும் எனது மனக்கிடங்கில் இருக்கின்றன.
1958 கலவர காலத்தில் தமிழர்களை இனங்காண  தலையை  மணந்து பார்த்ததையும் - காதில் ஓட்டையைப் பார்த்ததையும் - பேச்சு வழக்கில் 'வாளி' எனச் சொல்லச் சொல்லி தமிழர்களா? அல்லது சிங்களவர்களா? என உச்சரிப்பைக் கொண்டு இனங்கண்டு அடித்து நொருக்கிய சம்பவங்களை கதைகதைகளாகக் கேட்டு வளர்ந்தவர்களல்லவா நாங்கள்.
இத்தகைய அவலத்தின் நீட்சியில் 'தமிழர்களில் ஆண்கள் தோடு போடுவதற்காக காதில் ஓட்டையிடுவதை முற்றிலுமாகத்  தவிர்க்க தொடங்கியிருந்தார்கள். இத்தோடு  தலையில் நல்லெண்ணை பூசுவதையும்  குறைக்கத் தொடங்கியிருந்தார்கள்.' ஆனால் எங்களது அப்பாக்களதும் அப்புகளதும் காதுகள் துளையிட்டனவாகத்தான் இருந்தன. அப்புகள் (தாத்தாமார்) குடும்பியுடன்தான் சாகும் வரையில் வாழ்ந்திருந்தார்கள்.
தாய்மாமன் முன்னிலையில் மருமகனுக்கு காதுகுத்தும் நிகழ்வுச் சடங்கு முற்காலத்தில் கோலாகலமாக நிகழ்ந்தவொன்று. ஈழத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது 'சிங்கள பேரினவாத' ஒடுக்கல்தானே!
90களின் ஆரம்பத்தில் புதிய தம்பதியினராக தெகிவளையிலுள்ள நண்பனது வீட்டுக்கு விருந்துண்ணச் சென்றுவிட்டு முன்னிருட்டில் திரும்ப விழைகையில் நண்பன் சொன்னான் "மச்சான் உன்னர மனுசியின்ர குங்குமப் பொட்டை அழித்துவிட்டு போடா.... இங்கு வெறியர்களைச் சமாளிக்க முடியாது... தெரியுந்தானே!" என்றான். இந்த வார்த்தைகள் வந்து விழுந்த எனது செவியினால் பெற்ற சிலிர்ப்பு இன்றும் பசுமையாக இருக்கிறது. புதுமணத் தம்பதியனருக்கு குங்குமப் பொட்டிட்டு வாழ்த்தும் பாரம்பரியம் பரிதாபகரமாக அழிப்பதாக அமைந்துபோனது பண்பாட்டு அழிப்பு வன்மம்தானே.
00000 0000000
அண்மையில் பிரான்சில் நடந்து முடிந்த நகரசபைத் தேர்தல் காலத்தில் அதற்காக நடந்த குழுநிலைச் சந்திப்புகளில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அதில் கலந்து கொண்டிருந்த 'மேயர்' என அழைக்கப்படும் நகரசபைத் தலைமை வேட்பாளர்கள் சொன்ன தகவல்கள் என்னைக் கவர்ந்தது. பாரீசு 10 வட்டாரத்தில் சுமார் 110 இனக்குழுமங்கள் வாழ்கின்றன. இங்குதான் தமிழர்கள் அதிகமாக ஒன்றுகூடும் சந்திப்பு மையமாக விளங்கும் லாச்சப்பல் இருக்கிறது. இதே மாதிரியே பாரீசு  18வது வட்டாரத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட பல்லினச் சமுதாயக் குழுக்கள் வாழ்கின்றன. சென் டெனி நகர சபைக்கான வட்டாரத்தில் 126 பல்லினச் சமுதாயக் குழுமங்கள் வாழ்கின்றன.
'மனித உரிமைக் கோட்பாட்டை' வழங்கிய வெள்ளயைர் தேசங்களில் எப்பேர்ப்பட்ட சகிப்புத் தன்மையுடைய மனிதர்கள் வாழ்கிறார்கள்? இவர்களுடன் நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். "யாதும் ஊரே! யாவரும் கேளிர்...." எனவாக சங்க காலத்திலேயே பறைசாற்றிய ஈழத்துக் கவிஞன் கணியன் பூங்குன்றனார் எங்களைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன. (புறம்: 129)
2.
அதிகப் பிரசங்கித்தனம் எனவாக பலதை நாம் கேட்டிருக்கிறோம். மூன்று வயதுக் குழந்தை வாயில் பால் வழிய நிற்கிறது...... 'யாராவது இடைச்சி பால் கொடுத்துவிட்டாளோ' எனப் பதைபதைத்தவராகிய தந்தை கோபத்தோடு வினவுகிறார் "என்னடா நடந்தது?"
மூன்று வயதுக் குழந்தையை குளக் கரையில் வைத்துவிட்டு தகப்பன் குளத்துக்குள் இறங்குகிறான். "ஆரோக்கியமான குழந்தை என்ன செய்திருக்கும்?"
" அதுவும் குளத்துக்குள் இறங்கியிருக்கும்" இப்பதிலை இங்குள்ள யாருமே உறுதியாகச் சொல்வார்கள்.
ஆனால் அக்குழந்தை அப்படிச் செய்யவேயில்லை. அச்சாப் பிள்ளையாட்டம் அப்படியே உட்கார்ந்திருந்து. அழுதது.....
'ஐயோ! பாவமென' யாரோ இரங்கிப் பால் கொடுத்துவிட்டு அப்படியே குழந்தையை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்! ஆகா....... கா.... கா.... தற்போதைய தமிழ்ச் சினிமாக்கள் மாதிரியானதொரு சிற்றுவேசன் .... தானே இது!
இந்தக் குழந்தை பின்னர் பாடுகிறது "தோடு உடைய செவியன்.... விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி.... காடு உடைய சுடலை பொடி பூசி ...." இதன்மேலும் என்னால் தட்டச்சிடக்கூட முடியவில்லை. ஆனால் குழந்தை தொடர்கிறது!
"இப்படியொரு சம்பவம் சாத்தியம்தானா?" எனக் கேட்க்கூடாது. ஏனென்றால் மத நம்பிக்கையாளர்களது மென்மையான ஆனால் 'திடமான மனது' பாதிப்படைந்துவிடும். நாமும் கேட்காமலேயே கடப்போம்.
Ø  "தோடு உடைய செவியன்.... " அடடா நம் பெருவிருப்புக்குரிய "பெருமானே" காதில் தோடோடு இருக்கையில் நாமும் பின்பற்றித் தொடர வேண்டாமா?
Ø  நாம் வாழும் 20ம் - 21ம் நூற்றாண்டுகளில் நம் தமிழ்ச் சினிமாக் கதாநாயர்கள் செய்யும் அத்தனை செயல்களையும் (கோமாளித்தனங்களையும்) பின்பற்றுபவர்களாக வாழ்பவர்களைக் கண்குளிரப் பார்க்கிறோம். அப்படியானால் 12 நூற்றாண்டுகளுக்கு முந்திய அந்தக் காலத்தில் "இந்த கடவுளர்களது தோற்றத்தை" கண்டவர்கள் தமது பக்தி பிரவாகத்தால் அதனைப் பிரதிபலிப்பவர்களாகத்தானே இருந்திருப்பார்கள். ஆக இதுதான் எனது கேள்வி. "திருஞானசம்பந்தர் 'தோடு உடைய செவியராக' இருந்தாரா? இல்லையா?"
Ø  மொழிகளுக்கெல்லாம் இன்னும் ஏன்... மனிதர்களுக்கெல்லாம் முந்தையது தமது மதங்கள் எனவாக நம்புபவர்கள் 'நெற்றியில் சுடலைப் பொடியை' அவ்வப்போது பூசும் வழக்கத்தைக் கொண்டிருந்தும் விடாப்பிடியாக காதில் போடும் கடுக்கண்ணை (தோடை) நிராகரிப்பது ஏன்?
Ø  அவர் 'தோடு' என்று பாடியிருக்க இப்போது ஆண்கள் போட்டால் 'கடுக்கண்' பெண்கள் போட்டால் 'தோடு' எனவாகச் சுட்டப்படுகிறதே இது ஏன்?
3.
இன்றைய உலகமயமாக்கல் நுகர்வுக் கலாச்சாரம். மெத்தப் படித்தவர்களைக் கொண்டு அவர்களுக்கு வசீகரமான அறைகள் ஒதுக்கி யோசிக்க வைத்து திட்டமிடுகிறது. 'நுகர்வு' மேய்ச்சலை கண்ணை மூடிவாறு மேற்கொள்ள மனித உயிரிகளைத் தூண்டும் திட்டங்களைப் பொழிகிறது. இவர்களால் 'எதையெல்லாம் விற்கலாம்? எப்படியாக விற்கலாம்?' எனவாக திட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. இதனை அங்கிங்கினாதபடி  உலகெங்கணுமாக விரிந்த தொடர்பாடல் வலையம் திரும்பத்திரும்பப் பிரதிபலிக்க முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிறகென்ன இதுதான் 'அழகு' எனும் பாஃசன்! பொதுப்புத்தியைப் பயன்படுத்தும் சிந்தனை குறைவாகிப் பின்பற்றும் அல்லது பின்தொடரும் கலாச்சாரம் நீண்டு செல்கிறது. உலக மக்கள் தொகையில் அனைவரும் நுகர என்ன செய்லாம்? என்பதை இவர்கள் இரவு பகலாகத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
பெண்களே அதிகம் தோடு போடாததை இங்கு புலம்பெயர் நாடுகளில் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இப்போது ஆண்களும் போடுவதால் நுகர்வின் வீச்சு இரட்டிப்பாகி விட்டுள்ளதுதானே
நம் பழமொழி « சந்தனம் மெத்தினால் தடவடா…. » என உறைக்கச் சொல்கிறதுதானே !
00000 0000000

பின்னிணைப்பு:
1.
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. (தேவாரம் திருஞானசம்பந்தர்)
தேவாரங்கள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
நன்றி : விக்கிபீடியா http://ta.wikipedia.org/s/jm3
திருமுறையின் தொடக்கப் பாடல் “ தோடுடைய செவியன்” எனத் தொ டங்கும் திருஞான சம்பந்தர் தேவாரம் ஆகும். இப்ப¡டல் எழுந்த சூழ்நிலையைப் பார்ப்போம். சீகாழிய¢ல் தந்தையாருடன் நீராடச்சென்ற ஞானசம்பந்தக் குழந்தை தன் தந்தை நீராடும்போது அவரைக் காணாது கலங்கிக் கோயிலைப் பார்த்து”அம்மே அப்பா” என்று அழுதது, இதனைக் கேட்ட சிவபருமான் உமை அம்மையோடு அங்கு எழுந்தருளி உமை அம்மயைப் பார்த்து “துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன் கிண்ணத்து ஊட்டு” எனப் பணித்தருளினார். அதற்கேற்ப உமை அம்மை“ எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி “உண் அடிசில்” எனச் சம்பந்தர்க்கு ஊட்டினார். அந்நிலையில் சம்பந்தர் சிவஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் முதலியன உணர்ந்து ஞான சம்பந்தர் ஆனார். நீராடிவிட்டுக் கரயேறிய ஞானசம்பந்தரின் தந்தையார்’ யார் அளித்த பாலடிசில் உண்டது நீ” என அரட்டிக் கேட்க அதற்குப் பதில் கூறும் வகையில் எழுந்ததுதான்“ தோடுடைய செவியன்” எனத் தொ டங்கும் பாடல். எனவே திருமுறையின் தொடக்கத்திற்கே உமை அம்மையார்தான் காரணம் என்பதனை இதன் வழி உணரலாம்.
பாடல் - தோடுடைய செவியன் (நன்றி : யூரியூப்) - திரைப்படம்: ஞானக் குழந்தை
2.
பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும்.
2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழின் இலக்கணம் போன்ற அடிப்படைகளில் ஒன்று பண். தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது
நன்றி: விக்கிபீடியா http://ta.wikipedia.org/s/vpa
- முகிலன்

பாரீசு 20.06.2014

Wednesday, 18 June 2014

"மண்டூகம்!"

செவிவழிக்தை 22
கதைச்சரம் 25

"மண்டூகம்!"
 
பன்னெடும் காலமாக அந்தக் கிணற்றுக்குள் சில தவளைகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. இவற்றினுள் ஒரு தவளை பென்னாம் பெரியது. அது அதிகம் தண்ணீரில் நீந்துவது கிடையாது. அது எப்போதும் தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலான பெரும் பாறை பொந்தில்தான்  இருக்கும். அது என்னதான் செய்கிறதென யாருக்கும் தெரியாது. ஏதாயினும் அரவம் கேட்டால் கத்தி உசார்ப்படுத்திவிடும். அதன் உருவத்தாலும் இருக்கையாலும் மற்றைய தவளைகளுக்கு இராசா போல் வாழ்ந்தது.
புதிதாக உருவான குட்டித் தவளைகளுக்கு கொஞ்சம் கும்மாளமிடலும் துள்ளலும் அதிகமாகத்தானே இருக்கும். இதனால் இவற்றின் பெற்றோர் அந்த இராசா தவளையைக்  காட்டி பயமுறுத்தி வழக்கத்திற்குக் கொண்டுவரும் வழக்கமும் அங்கிருந்தது. இதனால் பெருந்தவளையின் கிட்டே பலரும் போவது கிடையாது. ஆனால் இந்த பெரும் தவளை ரொம்பவும் சாதுவானது. இலகுவில் கோவிக்காது. அவ்வப்போது தவளைக் கூட்டத்தினருக்கு ஏதாயினும் தேவைகள் வந்தால் பெருந் தவளையிடம்தான் முறையிடுவார்கள்.
ஒருநாள் அந்தக் கிணற்றுக்கு அருகாமையில் அதிர்வுச் சத்தங்கள் கேட்டன. தவளைக் கூட்டம் பயந்து விட்டது. பெருந்தவளை "எல்லோரும் கவனமாக மறைந்து இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டது.
அடுத்த நாள் கிணற்றுக்குள் ஒரு அண்டா போன்ற பாத்திரம் கயிறு வாயிலாக இறங்க தவளைகள் எல்லாம் ஓடிப் பதுங்கிக் கொண்டன. வந்த பாத்திரமும் தண்ணீரை அள்ளிக் கொண்டு மேலே சென்று விட்டது. இப்படியாக பகல் வேளைகளில் பலமுறை இப்பாத்திரம் வருவதும் போவதுமாக இருந்தது. நிம்மதியாக வாழ்ந்த தவளைக் கூட்டத்திற்கு பகலில் பொழுது போவதென்பது கொஞ்சம் சிரமமாகிவிட்டது. கொஞ்சக் காலம் செல்ல இதுவும் பழகிப்போனது. பழையபடி இளவட்டங்கள் துள்ளிக் குதிக்கத் தொடங்கியும் விட்டன.
சில சமயங்களில் ஒரு சில தவளைகள் காணாமல் போவதும் நிகழ்த்தொடங்கியது. பெருந்தவளை மீண்டும் மீண்டும் எச்சரித்தது. மேலே செல்லும் அண்டாவுக்குள் அகப்பட்ட தவளைகள்தான் காணாமல் போவதாக பெருந்தவளை எடுத்து சொன்னது.
இந்தத் தவளைக் கூட்டத்தினுள் ஒரு சுட்டான் தவளைக் குடடியும் இருந்தது. இதற்கு மேலே என்னதான் நடக்கிறதென அறிய ஆவல். தனது விருப்பத்தை தாய்த் தவளையிடம் கூற அம்மாத் தவளை கதறியது. ஆனாலும் சுட்டான் அடம்பிடித்தது.
பிறகென்ன பிரச்சனை பெருந் தவளையிடம் எடுத்துச் செல்லப்பட்டது. எல்லாவற்றையும் கேட்ட பெருந்தவளை "அங்கு வெளியில் பெரிதாக ஏதுமே இருக்காது!" என்று மென்மையாகச் சொன்னது. ஆனாலும் சுட்டான் விடுவதாக இல்லை.
"சரி! சரி!! அழாதே.... எனக்குத் தெரியாத ஒன்றும் வெளியில் இல்லை. என் அறிவுக்கு எட்டியவரையில் எமக்கு வேண்டியனவெல்லாம் இந்தக் கிணற்றுக்குள் கிடைக்கின்றன. வெளியில் போனால் அதிக ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இங்கிருந்து போன யாருமே திரும்பவில்லை என்பதை மறக்கக்கூடாது!" எனக் கண்டிப்புடன் கூறியது.
என்ன சொன்னாலும் சுட்டியன் ஏற்பதாக இல்லை. கடைசியில் ஒருநாளுக்கு மட்டும் சுட்டியன் கவனமாகச் சென்று திரும்புதென்று முடிவெடுக்கப்பட்டது. அந்த நாள் அதிக வெயில் இல்லாத நாளாகவும் அந்த நாளில் பெருந்தவளை அடிக்கடி குரலெழுப்பிய வண்ணம் இருப்பதென்றும் முடிவாயிற்று. இது கிணற்றடையாளத்தை தவளைக் குட்டிக்கு தெரியப்படுத்திக் கொண்டு இலகுவில் திரும்ப வழிகாட்டும்.
அந்த நாளும் வந்தது. தவளைகள் கவலையுடன் அந்தச் சுட்டானை அண்டாவூடாக வழியனுப்பின. வெளியில் வந்த சுட்டான் முதல் தடவையாக 'இரு கால்களுடன்  மட்டும் பரபரப்பாக நடமாடும் கூட்டத்தைக் கண்டு' நடுங்கியே விட்டது. விரைவாகப் பாய்ந்து வாழை மர அடியில் பதுங்கிக் கொண்டது. கொஞ்ச நேரம் போனதும் தன்னை யாரும் சட்டை செய்யாததை உறுதிப்படுத்தியவாறு வெளியே எட்டிப் பார்த்தது. 'அப்பப்பா..... ஆகா!... எந்தப் பெரிய வெளி. எத்தனை வகையான மரங்கள்.' என தனது கனவு நிறைவேறும் திருப்தியில் திளைத்தது. கொஞ்சம் தூரம் செல்ல 'வௌவ்.... வௌவ்' என்ற ஒலி கேட்க தொடை நடுங்கிவிட்டது. அப்படியே ஒரு பத்தைக்குள் பதுங்கியிருந்தவாறு எட்டிப் பார்த்தது. 'இதென்ன நான்கு காலும் சுருள் வாலுமாக ஓர் உருவம்?' மனதில் பெருந்தவளை சொன்ன கூற்றுகளின் மெய்மை தட்டுபடவே செய்தாலும் அதனது ஆசை அதைச் சும்மாயிருக்க விடவேயில்லை.
நிதானித்துப் பார்க்கையில்  அந்நச் சுருள் வாலையுடைய உருவம் தன்னைக் கவனியாதது அதற்குத் திருப்தியளிக்க மெதுவாக வேறோர் இடத்திற்குத் தாவியது. உயர்ந்து பெரிதாகக்  கிளை பரப்பி நிற்கும் பல தரப்பட்ட மரங்களையும் பார்த்து அதிசயத்தது. ஆனால் அசைந்து கொண்டிருக்கும் உயிரிகளைத்தான்  பயத்துடன் பார்த்து கவனமாக நடந்து கொண்டது. அவ்வப்போது மெருந்தவளையின் குரல் கேட்கிறதா எனவும் அது எங்கிருந்து வருகிறதென்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டது.
தனது விருப்பப்டியாக நடக்கும் அந்தப் பொழுதை மிகவும் மகிழ்வுடன் கழித்தது. இப்படியான மகிழ்ச்சியை அது ஒருபோதும் அந்தக் கிணற்றுக்குள் அனுபவித்திருந்ததே கிடையாது. தான் சுயமாக நினைத்தைச் செய்யும் அனுபவத்தை எப்படி மற்றவர்களுக்கு சொல்லப்போவதையும் அடிக்கடி யோசித்து வைத்துக் கொண்டது.
இப்படியாகக் கழிந்த பொழுது வேகமாகவே கடந்தது போலிருந்தது. மிகவும் மகிழ்வுடன்  சுற்றிய சுட்டானுக்கு 'ம்......மா.....!' என்னும் நீண்ட பேரோசை இடியெனக் கேட்டதில் அரண்டுதான் போய்விட்டது. அந்தச் சத்தம் வந்த திசையில் பாய்ந்து சென்றது. நிமிர்ந்து பார்த்த போது பென்னாம் பெரிய ஒரு உருவம் பெரிய வாலை இடமும் வலமுமாக விசிக்கியதால் எழுந்த அதிர்வில் நடுங்கிவிட்டது.. அந்த உருவம் வாயை அசைத்துக் கொண்டிருந்ததை காணுற்றபோது திகைத்தேவிட்டது. இப்படியானதொரு உருவத்தை அது இதுவரையில் தன் கனவில்கூடக் கண்டிருக்கவில்லை. பயத்தில் அதன் தொடைகள் நடுங்கத் தொடங்கி விட்டன.
சொல்லி வைத்தது போல் அவ்வுருவம் தலையை மேலே தூக்கியவாறு மீண்டுமொரு முறை 'ம்.....மா...!' என்றதுதான் தெரியும் சுட்டானுக்கு கண்மண் தெரியவில்லை. அப்படியொரு  ஓட்டம் மன்னிக்க பாய்ச்சல்.... இப்படியான பாய்ச்சலை இதுநாள் வரை இது செய்ததே கிடையாது.
இனியென்ன பார்க்க கிடக்கிறதென்ற அந்தரத்தில் மூச்சிரைக்க எப்படியோ கிணற்றடிக்கு வந்தடைந்துவிட்டது. கொஞ்ச நேரம் பேசாது பதுங்கியிருந்தது. வழமையாக வெளிப்பட்ட பெருந்தவளையின் குரலொலி இம்முறை தேனாக இனித்தது போல் மிகவும் இதமாக இருந்தது. அப்பாடா...! என தன்னைத் தயார் செய்தவாறு ஒரே குதியலாக கிணற்றுக்குள் பாய்ந்தது.
சுட்டியன் திரும்பி வந்ததை கண்ட தவளைகளும் மகிழ்வோடு குரலெழுப்பி மகிழ்ந்தன. பெருந்தவளை நமட்டுச் சிரிப்புடன் இனித்தான் தூங்கலாம் என மகிழ்ந்தது.
முதல் முறையாக மேலே இருந்துவிழுந்ததால் சுட்டியன் திணறித்தான் போனது. இதுவும்  இன்னொரு அனுபவமாகிப் போனது. வயிற்றில் நல்ல வலி. இதனால் இலகுவில் அதனால் பேச முடியவில்லை. அது பேச முடியாதிருப்பதற்கு  கடைசியாக க் கண்ட பென்னாம்பெரிய உருவம்தான் காரணமென்பதை மற்றத் தவளைகளால் உணர முடியவில்லை. "சரி! நாளைக்கு எல்லாவற்றயும் பார்க்கலாமெனக் கூறிவிட்டு தங்களது மறைவிடத்தில் ஒதுங்கிக் கொண்டன.
அடுத்த நாளும் சுட்டியனுக்குப் பேச்சு வரவில்லை. "இது என்னடா.... புதுமையாக இருக்கு? சுட்டியன் முடங்கிக் கிடக்கிறான். பேசாமல் கிடக்கிறான்?" என அவை சுட்டியனைச் சுற்றிச்சுற்றி வந்து நோட்டமிட்டன. உற்றுக் கவனித்ததில் சுட்டியனுக்கு காயம் ஏதுமே ஏற்பட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி ஆசுவாசப்பட்டுக் கொண்டன.
ஒரு வாரம் கழித்துதான் சுட்டியனுக்குப் பேச்சு வந்தது. ஆனால் பழைய துடிதாட்டம் இப்ப இல்லாது போய்விட்டிருந்தது. அதுவும் தட்டுத் தடுமாறி ஒருவழியாக தான் கண்ட பென்னாம் பெரிய உருவத்தை வர்ணித்தது. ஆனால் அங்கிருந்த எந்தத் தவளையாலும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. வெளியில் போய் வந்ததனால் அதற்குப் புத்தி பேதலித்துவிட்டதாகவே பலதும் நினைத்தன. பிறகென்ன பிரச்சனை பெருந்தவளையின் கவனத்திற்குப் போயிற்று.
வழமைக்கு மாறாக பெருந்தவளை சுட்டியனைக் கவனித்த வண்ணமிருந்தது. சுட்டியன் முன்னர் மாதிரி தன்னை மதிப்புடன் பார்க்காததை அது கவனித்துவிட்டது. மெதுவாகப் பேச்சுக் கொடுத்தது.

"தம்பி! என்னடா நடந்தது?"
"நான் பென்னாம்பெரிய உயிரியைக் கண்டனான்..... இதைச் சொன்னால் யாரும் நம்புவதாயில்லை!" என நடுங்கியவாறு தெரிவித்தது.
"அப்படியென்ன பெரிய உருவத்தைக் கண்டுவிட்டாய்?" ஆகா!! அக்கா..க்கா!! என ஏளனச் சிரிப்புடன் கேட்டது பெருந்தவளை.
"ஆம் ஐயா!! நான் பென்னாம் பெரியதான உயிரைக் கண்டு திகைத்துப் போய்விட்டேன்!" என்றது சுட்டியன்.
"என்னது என்னையும் விடப் பெரியதாக எதைத்தான் நீ பார்த்திருப்பாய்?"..... ம்... என்று கோபமாக் கேட்டது பெருந்தவளை.
" நீங்கள்.... எந்தளவு?......அது எந்தளவு!" என முணுமுணுத்தவாறு சுட்டியன்.... "ஐயா அது பென்னாம் பெரியது! அதன் கால்... அதன் வால்.... அதன் முகம்.... ஐயையோ எல்லாமே பெரியது" எனக் கதறியேவிட்டது.
"கொஞ்சம் பொறு!" என்ற பெருந்தவளை தண்ணீருக்குள் பாய்ந்து நீரைக் குடித்துப் தன்னைப் பெரிப்பித்தபடி "இப்ப சொல்லு... இந்த அளவு இருக்குமா அந்த உயிரி?" என்றது.
பெருந்தவளையின் முழுமையான பருமையைக் கண்ட ஏனைய தவளைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஆனால் சுட்டியன் அசரவேயில்லை.
"அட... போங்கையா.... உங்களது அளவென்ன..... அதன் அளவென்ன.... அது பென்னாம் பெரிது! அதன் உயரம் இங்கிருந்து அங்கு வருமெனக" கூறிக் கொண்டு மேல் கற்துண்டுக்குப் பாய்ந்து காட்டியது.
சும்மா சொல்லக் கூடாது..... இப்போது பெருந்தவளைக்கு கோபமோ கோபம் ... பொத்திக்கொண்டு வந்துவிட்டிருந்தது.
'அட பொடிப் பயலே இப்ப என்னைப் பார்... " எனக் கூறிக் கொண்டு இன்னும் நிறையவே தண்ணிரைக் குடித்துக் கொண்டு பருத்த தன் உடலைக் காட்டியது!
ஆனால் சுட்டியன் அசரவேயில்லை.
பெருந்தவளையும் விடாமல் மீண்டும்.... நீரைக் குடித்துப் பருமனைக் கூட்டியது. சுட்டியனோ பெருந்தவளையின் அளவை ஒப்புக் கொள்ளவேயில்லை. இப்படியாகத் தொடர்கையில்
"டமால்......" ஐயோ.... பரிதாபகரமாக பெருந்தவளை வெடித்து சிதறியிருந்தது. தவளைக் கூட்டனத்தினர் வாயடைத்தவர்களாகிப் போயின.

இக்கதை நான் சிறுவயதில் என் தந்தை வழியாகக் கேட்டது. வடமாகாணத்தில் கரம்பன் என்னும் கிராமத்திலிருந்த எனது அண்ணன் சிறு வயதிலேயே தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி(வெளியூர்) விடுதியில் சேர்க்கப்பட்டதை எங்களுக்கு விளக்குவதற்காகச் சொன்ன கதை இது.
நிகழ்த்திக் காட்டப்படும் இத்தகைய கதை சொல்லிகளது உடல் மொழிகளுடனான வெளிப்படுத்துகையை அவ்வப்போது நினைத்து மகிழ்வுறுவோம்அப்படியான ஓர் உந்துதலால் மனக்கிடங்கிலிருந்து மேலெழுந்ததொரு குமுழியாக வெளியானதுதான் இக்கதை.

00000 000000

குறிப்பு:
1. மண்டூகம் : பென்னாம் பெரிதான ஒரு வகைத் தவளை. (ஈழத் தமிழ் வழக்கத்தில் இது ஒருவகைத் தவளையைக்குறிக்கும்.) கற்பாறை இடுக்குகளுக்குள்ளும் மண் பொந்துகளுக்குள்ளும் வாழும் பெரிய உருவமுடைய தவளை.
பொதுவான அறிவு வளர்ச்சியடையாதவர்களை மண்டூகம் எனச் சுட்டப்படுகிறது (க்ரியா தமிழ் அகராதி) - முலப்பிறப்புச் சுட்டல் இல்லாது இவ்வகை ஒப்புவமை வருமா? இச் சொலில் உள்ள 'மண்' எனும் சொல் கவனம் கொள்ளத்தக்கது. ஆனால் "மண்டூகம்" என்பது சமசுக்கிருத மொழியில் "தவளை" எனவாகப் பதியப்பட்டுள்ளது. (விக்கிபீடியா)
2. பிறப்பு சுழற்சி முறை 
சிறார்களாக நாம் வளர்கையில் 'விஞ்ஞானம்' கற்க பெரு விருப்பம் கொள்ள அப்போது வீடுகளிலிருந்த 'வானொலி' முக்கியமானதொன்று. இது எமது மரபு கடந்த வகையில் எமக்குச் சம்பந்தமில்லாவதர்களது குரல்களையும் தகவல்களையும் தந்து கொண்டிருந்தன. பரிணாமம் போன்ற புதிய கற்கைகளுக்குள் நுழையும்போது இயற்கையாக எமக்குத் தந்த பிறப்பு சுழற்சி முறை உதாரணங்கள் 1. வால்பேத்தை - தவளை ஆவதும் 2. மயிர்கொட்டி - அழகிய வண்ணாத்திப் பூச்சிகளாகப் பறப்பதுவும்.
3. கதையாடல்களும் - பழமொழிகளும் எமது கிராமத்து வளர்நிலைகளும்
தலைப்பிடப்பட்டபோதே பெருமூச்சுதான் உடன் கிளம்புகிறது. அப்படியானதொரு இளம்பிராயத்தை எமது பூர்வீகத்  தரை எமக்கு வாரி வழங்கியிருக்கிறது. நாளாந்தம் செவி வழியாக நாம் கேட்டவை கொஞ்சநஞ்மல்லஎமை அறியாது எம்முடனனேயெ பயணிக்கும் நிழல்போல் எம் வாழ்வை நெறிப்படுத்தும்  அறமாக அவை தோன்றாத அரணாகிவிட்டதை இப்போது நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் புலம்பெயர்ந்து நீண்டு செல்லும் வாழ்வில் எமது வாரிசுகளுக்கு இப்படியானவற்றை நாம் கையளித்திருக்கிறோமா?
ஐரோப்பாவில் இருந்தவாறு யோசிக்கையில் 'ஆசியக் கதை சொல்லிகள்' எப்பேர்ப்பபட்ட ஆளுமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினர் கேட்கும் - வாசிக்கும் - நேசிக்கும் யப்பானியக் கார்ட்டூன் கதைகள் மொழிப் பெயர்ப்பாகாத உலக மொழிகள்தான் இருக்கின்றனவா?
எமக்கு பேரர்கள் - பெற்றோர் - அயலவர் - உற்றார் - ஆசிரியர் - நண்பர்கள் - எம்மோடு பணியாற்றுபவர்கள் எனப்பலரும் 'கதைகள்' சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் எழுத்தில் - ஆவணமாக்கத் தவறிவிட்டிருக்கிறோம். எம் சமுதாயம் செவி வழித்தகவல் பரிமாற்றுப் பரவலுக்கூடாகவே பெரும்பாலும் கடந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் திராவிட நாட்டுக்குள் புகுந்தவர்களும் தமக்கானதான சங்கேத மொழியில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பிற்காலத்தில் எம்மைக் காலனியாக்கத்துக்குட்படுத்திய வெள்ளையர்களும் அவரவர்  மொழிகளில் தாராளமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
காலச் சக்கரத்தின் சுழற்சியில் புலம்பெயர்ந்தவர்களாகி இன்று அவர்களது நாடுகளிலேயே குடியேறி வாழத்தலைப்பட்டுள்ளது எமது சமூகம். எமது சந்ததியினரும் இவ்வகையான ஆவண முறைமைப்படுத்தலிலான கற்கை நெறிகளைப் பின்பற்றுபவர்களாகியும்விட்டனர். எனவே எமது தலைமுறையினர்  பதிவு செய்ய நிறையவேயிருக்கின்றன.
இப்படியான முயற்களில் ஒன்றைத்தான் நானும் தொடர்கிறேன்உரிமை கோரப்படாதவையாகப் பரவிய இக்கதைகளின் தொன்மத் தொடர்புகள் வரலாற்றாளர்களுக்கு முக்கியமானவை.  நம் மூதாதையினரால் பெரிதும் மதிக்கப்பட்ட இதிகாசங்களான மாபாரதம் இராமாயணம் போன்றவற்றுக்குள் இத்தகைய சிறு கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால்தான் இத்தகைய பெருங்காப்பியங்கள் அடிப்படை மக்களிடத்திற்குள்ளும் சென்றடைந்திருக்கின்றன என்பதை இலகுவில் ஒதுக்க முடியாது.
கிராம வழக்கத்தில் பரவிவிட்டப்பட்ட பாடல்கள் - பழமொழிகள் - கதைகள் எல்லாவற்றுக்கும் மூலத்தைக் கண்டடைவது சிரமமானது. (இதனை சமுக ஒப்பீட்டு ஆய்வாளர்கள்தான் செய்ய வேண்டும்.) இவை இலகுவில் மாற்றத்துள்ளாக் கூடியவை. யார் வேண்டுமானாலும் எடுத்தாளும் தாராளமயமானவை.
0000 00000
பிற்குறிப்பு:
1. தொடர்பான சில பழமொழிகள் :
'பாம்பின் கால் பாம்பறியும்!'  (பாம்புக்கு ஏது கால்?)
'நுணலையும் தன் வாயால் கெடும்' (பாம்புக்கு ஏது காது?)
'மாரித் தவளை போல் கத்தாதே!'
"கிணற்றுத் தவளைகள் போல் இருக்காதே!"
2. மண்டூகம்:
இந்தியச் சிற்ப மரபில் மண்டூகம் அல்லது சண்டிதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. "மண்டூகம்" என்பது சமசுக்கிருத மொழியில் "தவளை" என்னும் பொருள் தருவது. இது ஒவ்வொரு பக்கமும் எட்டாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் அறுபத்து நான்கு (8 x 8) பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், நடுவில் வரக்கூடிய நான்கு பதங்கள் பிரம்மாவுக்கு உரியன. மீதியுள்ள அறுபது பதங்களுள் சில பதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவருக்கு உரியவை. சில இடங்களில் இரண்டு பதங்களைச் சேர்த்து ஒருவருக்கு உரித்தாக்கப்பட்டு உள்ளன. வேறு சில பதங்கள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் (அரைப் பதம்) வெவ்வேறு தேவர்களின் பதங்களாக அமைகின்றன. இவ்வாறு 64 பதங்களில் உருவாகும் மொத்தம் 45 பிரிவுகள் 45 தேவர்களுக்கு உரியவையாக உள்ளன.
3.  இந்தக்  கதையை  சுவாமி விவேகானந்தர்  குறிப்பிடுகிறார் :
ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. அத்தவளை அக்கிணற்றிலேயே பிறந்து வளர்ந்து, அதிலேயே வாழ்ந்து வந்தது. கிணற்றில் இருக்கின்ற புழு, பூச்சிகள், கிருமிகள் போன்றவற்றைச்  சாப்பிட்டு, அசுத்தத்தை நீக்கி, சுத்தம் செய்து வந்தது. இதன் காரணமாய் நன்கு கொழுத்துப்  பருத்திருந்தது.
ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று தெரியாமல் அக்கிணற்றில் தவறி விழுந்து விட்டது.  அப்போது ‘கிணற்றுத் தவளை’ அழையா விருந்தாளியாய் கிணற்றுக்குள் வந்த கடல் தவளையை உற்று நோக்கியது.
அவை இரண்டுக்கும் நடந்த உரையாடல் இதோ…
“நீ எங்கிருந்து வருகிறாய்?
“கடலில் இருந்து…”
‘கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?’ என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.
‘நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?’ என்று கேட்டது கடல் தவளை.
கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதி குதித்து, “உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?” என்று கேட்டது.
“சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?
“நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!” என்று கத்தியது கிணற்றுத் தவளை.
நன்றி:
4. சிறந்த கதை சொல்லி தென்கட்சி கோ சுவாமிநாதன் (காணொலி)

நன்றி: கூகிள் இணைய வழங்கி மற்றும் யூரியூப்

- முகிலன்
பாரீசு 18.06.2014