Friday, 23 August 2013

தமிழில் அழகான எழுத்து

குஞ்சரம் 15
தமிழில் அழகான எழுத்து

பாரீசில் அண்மையில் நடந்த நண்பரின் மகளின் 'வாழ்க்கைத் துணை ஏற்புவிழா" நிகழ்வின் நிறைவரங்காக அமைந்தது ஆடல் - பாடல் கொண்ட்டாட்ட நிகழ்வு. அரங்கை அதிரவைக்கும்பேரொலி இரைச்சலுடன், வெண்ணொளி மங்கலாக  வர்ணக் கீலங்களாக அள்ளிக் கொட்டும் ஒளிக் கதிரலைகளுடன் ஆடும்- தள்ளாடும் மனிதர்களுமாக மிதந்து கொண்டிருந்தது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியின் வெளியாக பல்லினப் பங்கேற்றலுடனான இசை ஆடலாகவே இது இருந்தது. இதில் பெரும்பாலான நம்மவர்கள் வேடிக்கைப் பார்ப்பவர்களாகவே காணப்பட்டனர். ஆனால் வந்திருந்த அனைத்து வேற்றினத்தவர்களும் தங்களது ஆனந்தத்தை தங்களது ஆடலசைவால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இச்சூழலில்தான் பலரும் மனம் திறந்த உரையாடல் வெளியில் சுதந்திரமாகப் பயணிப்பார்கள். தெரியாதவர்களுடனும் கைகுலுக்குவார்கள், சினேகத்துடன் உறவாடுவார்கள், ஆடுவார்கள், பாடுவார்கள், தத்தமது வாழ்வுப் பயணக் கதைகளை மீட்டுச் சிலாகிப்பார்கள். நகைச்சுவைகளைக் கொட்டுவார்கள். இயந்திர வாழ்வோட்ட நதியில் அள்ளுண்டு செல்லும் வாழ்வில் இத்தகைய தருணங்களில் வெளிப்படும் மனித கருத்துத் தடாகத்தில் நீச்சலடிக்க நானும் விருப்பமுடையவன்.
புகைப் படக்கருவியுடன் இருந்த புதியவர் கைகுலுக்கி நேசபாவத்துடன் மகிழ்வைத் தெரிவித்தார். தமிழில் நடந்த 'வாழ்க்கைத் துணை ஏற்பு விழா"வை மனந்திறந்து பாராட்டினார். 'இந்த நிகழ்வைப் பார்த்தபோது 'பக்தி இலக்கிய காலத்திற்கு" முற்பட்ட தமிழரின் வாழ்வு நிலைத்தோற்றம் நினைவில் நிழலாடியது!" என்றார் முன்னவர். கையில் கமெராவுடன் இருந்த அவரிமிருந்து இப்படியானதொரு எண்ணத்தை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நேசபாவத்துடன் அவரை உற்றுப் பார்க்கிறேன். இவர் வேறொரு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்திருந்தார். அவருடன் உரையாட மனம் விரும்பியது. அங்கிருந்த பேரிரைச்சல் எம்மைக் கலந்துரையாடவிடவில்லை. 'உங்களைப் போன்றவர்களுடன் கதைக்க எனக்கு நிறையவே விருப்பம்!" சத்தமாக எனது கருத்தையும் சொல்லிவிட்டு அகன்றேன்.
குழுநிலைப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த வேளை, அவருடன் கூட வந்திருந்தவர் உரையாடலைத் தொடங்கினார். புகைப்படம் எடுக்கும்போது எல்லோரும் சிரிக்கவேண்டும் என்பதற்காக அடிக்கடி பகிடிவிட்டுக் கொண்டிருந்தவர் இவர்.
'உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"
'கேட்கலாமே!"
'தமிழில் அழகான எழுத்து எது?"
"தமிழுக்கு 'ழ"தானே என்றும் தனித்துவமான அழகு." என்றேன் ஏதுமே புரியாதவனாக
'இல்லை! 'ந"தான்!!" என்றார் சிரிப்புடன். எனக்கு ஏதுமே புரியவில்லை. எனது முகம் கோணலாகியதை அவர் கண்டிருக்க வேண்டும்.
'ந.. தான் அழகு! ஏன் தெரியுமா? நக்மா, நமீதா, நயன்தரா.... எனும் எம்மைக் கிறங்கடித்த அழகிகளுடன் இந்த "ந"னா தானே இருக்கு" என்றவாறு வெடிச் சிரிப்பை வெளிப்படுத்தினார்.
"இந்த அழகிகளுக்கு முன்னமே "ந"னா இருந்திருக்கே!" என்றேன் அமைதியாக. பகிடிவிட்ட நண்பரின் சிரிப்பு தானாகவே அடங்க, முன்னைய அன்பரின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.
000 000

நிகழ்வு மண்டபத்திலிருந்து வண்டியில் மௌனத்துடன் திரும்புகிறேன்.
ஏன்? எதற்கு? எப்படி?..... எனப் பலவாறான வினாக்களுடன் விரியவேண்டிய நம்மவர்களின் பொதுப்புத்தி நகைச்சுவை என்ற பெயரில் மழுங்கடிக்கப்படுகிறது. இப்படியான சில்லறைத் தனங்களை பல்கிப் பெருக்கிக் கொட்டுவது தமிழ்த் தொலைக் காட்சிகள்தான். தமக்கான உணவையே நிதானமாக சமைத்துச் சாப்பிட முடியாத இயந்திர ஓட்டத்தில் தள்ளாடும் மனிதவாசிகளுக்கு எல்லாமும் விரைவான 'தயார்- ஆயத்தத் தயாரிப்பு"களாகத்தான் கைகொடுக்கின்றன.
எல்லாவற்றையும் பணத்தால் அளவிட்டு, பணம் மட்டும் பெருமளவில் இருந்தால் போதும் என்றாகி, தேவைகளனைத்தும் விரைவாக, தயாராக(றெடிமேட்டாக), சுருக்கமாக, கவர்ச்சியாக, மலிவாக, இலவசங்களாக...... கிடைக்கும் ஏக்கத்துடன் மனிதவாசிகளை நிதானங்கொள்ளாது விரட்டும் வேகத்தை உலகமயமாக்கல் காப்பிரேட் நிறுவனங்களின் நுண் உந்துதல் செவ்வனே முடுக்க அசைக்கிறது உலகம்.
கிளறப்பட்ட எண்ணங்களை அடக்கமுடியுமா?
000 000
பின்னிணைப்பு :
புத்தியுள்ள மனிதர் எல்லாம் - Buthiyulla manithar ellam

-முகிலன்

பாரிசு 23.08.2013

Wednesday, 21 August 2013

செவிவழிக் கதை 16 : பட்டணம் பார்க்கப் போன நாய்

கதைச் சரம் 19

செவிவழிக் கதை 16

பட்டணம் பார்க்கப் போன நாய்


ஒரு அழகிய கிராமத்தில் சில நாய்கள் சுகமே வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். எசமான விசுவாசம் கொண்டவை சில. அடுத்த வீடுகளுக்க அலைபவை சில. தானுண்டு தன் கருமம் உண்டென தனியனாய்ச் சில. ஊரில் நடக்கும் நன்மை தீமைகளில் பங்குகொள்பவை, வயது முதிர்ச்சி, ஒன்றுமே அறியாத அப்பாவிகளென வேறு சில.
இவற்றுள் ஒரு நாய் கறுப்பும் வெள்ளையும் கொண்டது. கொஞ்சம் வித்தியாசம். சற்று எடுப்பு. முகத்தில் கனவின் சஞ்சாரம். இதற்கு ஒரு அசைக்க முடியாத விருப்பம். நிறையப் பார்க்க, ரசிக்க, அனுபவிக்க பட்டணம் போகவேண்டும். கிராமத்தில் ஒன்றுமே இல்லை என்பதாக அதன் தொனி ஊர் நாய்கள் சிலவற்றைக் கோபமுறச் செய்தன.
ஊர் நாய்களிற்; சில அனுபவம் வாய்ந்தவை. பட்டணம் பற்றியும் அங்குள்ள நிலை பற்றியும் எடுத்துச் சொல்லியும் அதன் விருப்பத்தைப் போக்கிக் கொள்ள ஆலோசனை செய்தன. இந்த ஆசை கொண்ட நாயை, கிறுக்குப் பிடித்த நாய் எனச் சில நாய்கள் கேலியுடன் ஒதுக்கின.
ஒரு மாரி முடிந்து கோடை ஆரம்பிக்கும் வேளை, பொழுதுகள் இனிமையாச் சென்றன. ஒரு நாள், தான் பட்டணம் போகப்போவதாக அந்த நாய் அறிவித்தது. கூடவே பலநாய்கள் கூடி 'அவன் ஆசைப்படியே சென்று அனுபவம் பெறட்டும்!" என்ற முடிவுடன் வழியனுப்பின.
தன் வாழ்நாளின் இலட்சியக் கனவின் நிறைவுடன் பட்டணம் வந்தது ஊர் நாய். உவ்வொன்றும் புதுமையாய் - இனிமையாய் இருந்தது. எவ்வளவு விதம்விதமான உணவுகள். வகைவகையான வர்ணம் பூசிய வீடுகளில் அல்லவா பட்டணத்தில் நாய்கள் இருக்கின்றன! அவ்வேளையிலும் ஏனோ ஊர் ஞாபகம். கிடுக வேலிகளும், ஓலைக் குடிசைகளும்....... பெருமூச்சடன் தனது ஊர் நாய்களை அனுதாபத்துடன் நினைத்தது.
பட்டணத்தைச் சுற்றிச் சுற்றி பெருமிதத்துடன் வலம் வந்தது; ஊர் நாய். மாலை ஆகியது. களைப்பு - வயிற்றில் நல்ல பசி. அருகில் இருந்த ஹோட்டல் குப்பைக்கள் விதவிதமான உணவு. விரைந்தது; ஊர் நாய். எங்கிருந்து முளைத்தன இவ்வளவு நாய்கள்? அவ்வளவம் பட்டணவாசிகளாம்! ஒருவர் முகத்திலும் நட்பகளில்லை. பயங்கரமான உறுமல்கள், குரைப்பு. உர் நாய் ஒரு கணம் திகைத்து நின்றது.
என்ன செய்வது? - ஊரில் பெற்ற துணிச்சல் முன்னே செல்லத் தூண்டியது. அடியெடுத்து வைத்தது. ஐயோ பாவம்!...... அவ்வளவுதான், ஊர் நாய் வேதனையில் முனகியது.
இனி வேறு வழியில்லை, தனது கிராமம் நோக்கி சோகத்துடனும், நல்ல பசியடனும் நொண்டியவாறு திரும்பியது.
இதன் நிலைகண்டு வருந்தின கிராமத்து நாய்கள். ஒரே குசலம் விசாரிப்பு, அன்பு, பாசம், உணவு எல்லாமே கிடைத்தன.
கடைசியாக ஒரு கேள்வி, « பட்டணம் எப்படி? »
« பட்டணம் நல்லாத்தான் இருக்கு, ஆனால் நம்மாக்கள்தான்..... » இழுத்தது ஊர் நாய்.

- அநாமிகன்
நன்றி : ஓசை 11 (காலாண்டிதழ்- 1993 தை-பங்குனி - பிரான்சு)


- இந்தக் கதையை நான் எனது ஊர் நண்பன் சிவானந்தன் மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும்போது கேட்டிருந்தேன் -
-இதுதான் சஞ்சிகை ஒன்றில் நான் எழுதிய முதலாவது செவிவழிக் கதை. நிறையவே கதை கேட்பவர்களாக வளர்ந்த தலைமுறையினர் நாம். நம்மிடம் புழங்கிய செவிவழிக் கதைகளை புலம்பெயர் வாழ்வில் பதிவிட வேண்டும் எனும் அவாவில் நான் ஓசை இதழில் எழுதிய 'பாரீஸ்" கட்டுரையுடன் சமாந்திரமாக இணைத்திருந்தேன். இங்கு அகதியாக வந்த முதல் மூன்று மாதக் காட்சி- 'நான் கண்ட பாரிசு" பதிவாக இக்கட்டுரை அமைந்திருந்தது.



- முகிலன்

பாரிசு 21.08.2013

Monday, 19 August 2013

இறுதி வணக்கம் : ‘பெரியார்தாசன்’

நினைவுச் சரம் 1
இறுதி வணக்கம் : ‘பெரியார்தாசன்’
(21.08.1949 - 19.08.2013)

நான் சற்றுமே எதிர் பார்க்காததொரு செய்தி. பிறப்பும் - இறப்பும் மானிட வாழ்வின் நியதிதான்! ஆனாலும் மனவெளியில் நினைவு சுமத்தல் என்பது பெரும் பார வண்டியை இழுப்பதுதானே! கட்புலனால் புலப்படாத இவ்வண்டி இழுப்பை கூட இருப்பவர்களாலும் உணர முடியாது. "என்ன! அப்படியே இருந்திட்டீங்க..... எழும்பி வேலையைப் பாருங்க!" குரல்கள் செவிப்பறையை பட்டுச் செல்கின்றன.


பெரியார்தாசன் காலமானார்

'அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (33) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
பெரியார்தாசன் உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்து இருந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக பெற்றுக் கொண்டனர். அதே போல் பெரியார்தாசன் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட இருப்பதாக அவரது மூத்த மகன் வளவன் தெரிவித்தார்' எனவாகச் செய்தி அச்சாகி வெளியாகிவிட்டது.


2013 'மே'யில் பாரீசு வந்திருந்த வேளையில் நானும் நல்லையாவும் அவர் தங்கியிருந்த விடுதியில் அந்த நடுச் சாம வேளையில் அவரைச் சந்தித்திருந்தபோதுதான் 'இறுதி' சந்திப்பாகும் எனக் கனவுகூடக் கண்டதில்லை. ஆனாலும் அவர் கேட்டதை வாங்கிப் பருகி மனம்விட்டுப் பேசி மகிழ்ந்த அந்தப்போது நினைவோடையில்.... கூடவும் இவருடன் நெருங்கிய தோழமை நட்பைப் பேணிய பெரியபாலா சின்னபாலா சுந்தர் நல்லையா கபிலன்....... என நீளும் பட்டியலும் நினைவுகளுமாக அசையாது இருக்கிறேன்.
000 000

எண்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலான தோழமை நண்பராய் எம்முடன் கலந்து வாழ்ந்த பெரியார்தாசன் விடைபெற்றுவிட்டார் என்ற செய்தியைத் தாங்கிவாறே இன்றைய காலை விடிந்தது. ஈழம் தொடர்பாக வெறும் உணர்ச்சிகரமான வெற்றுப் புரிதலைக் கொண்டுள்ள இந்தியத் தமிழ் அரசியல் அறிவாளிகள் மத்தியில் தெளிவான  வரலாற்று இயங்கியல் புரிதலையுடைய சிலருள் முக்கியமானவர் பெரியார்தாசன். ஈழப்போராட்டம் தொடர்பாகவும் 'ஈழவர்' என்ற கருத்துருவுடனும் இறுக்கமான தெளிவான புரிதலுடனான ஈடுபாட்டாளர் பெரியார்தாசன்.
"பிறக்கும் போதும் அழுகின்றாய்!.....  இறக்கும் போதும் அழுகின்றாய்!" எனவாக வாழ்வை பாடல்வரிகளாய்ப் படம் பிடித்த சந்திரபாபு கூற்றின்  அடுத்த வரிகளான "ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே!.................... எனும் வார்த்தைக் கோலத்தின் எதிர் நிலையாக தன்னைச் சுற்றியுள்ளோரது நிறைந்த சிரிப்பில் இலயித்தவராகி தானும் சிரிப்பவராகத்தான் எமக்கு அறிமுகமாயிருந்தார் பெரியார்தாசன். மகிழ்வுடன் இருத்தலே வாழ்வின் உன்னதத்தையும் சிறந்த கிரகித்தலையும் தரும் என்பதை சிரிப்புடன் உணர்த்தியவர்.
'ஈழம்' என்றால் என்னவென்றே தெரிந்திராது  'சிலோன்' என்றும் 'சிலோன்காரர்' என்றும் மேலோட்டமான நுனிப்புல் மேய்ந்த தமிழகத் தமிழர்கள் மத்தியில் எழுபதுகளின் கடைசியில் அறிமுகமாகி எண்பதுகளில் விரிவாகி தோழமையுடனான இணைப்பாக இறுகியது எமக்கிடையிலான உறவு. இதற்காக 'பொதுமை' 'தர்க்கீகம்' எனும் பத்திரிகைகளுடன் தொடர்பைத் தொட்டவர்கள் சுந்தர் - பெரியபாலா - சின்ன பாலா. ஈழத்தமிழர்களின் 'கதைத்தலை' - பேச்சு மொழியைக் கிரக்கிக்க முடியாத பரிதவிப்புடன் கேட்ட இந்தியத் தமிழர்களின் ஆரம்பச் செவிகளில் இவரது செவிகளும் அடங்கும் என்பது வரலாறு. அக்காலகட்டத்தில் தெளிவான புரிதலுடன் கரிசனையுடன் 'ஈழத்தின் ' நியாயத்தைப் புரிந்துகொண்டு தமது இல்லத்திலேயே இடம் கொடுத்து முன்வந்து கரம் கொடுத்த அந்தப் பரிவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

அறிவாளிகளாகத் திகழும் பட்டம்பெற்றவர்கள் பெரும்பாலும் பாமரர்களின் அறிவுத் தேடல்வெளியில் பயணிப்பதில்லை. பாமரர்களை வெறும் 'மனித உயிரியாக'ச் சிறுமைப்படுத்தும் பெரும்போக்கு மிதப்பு எண்ணங் கொண்டவர்களாகவே இந்த அறிவுலக மேதாவிகள் எம்மத்தியில் நிறையவே காணக்கிடைக்கின்றனர். இவர்களில் வேறுபட்டவராய் இந்தப் பாமரர்களின் அறிவுச் சிந்தனைவெளியில் அவர்களுடன் பயணித்தவாறே தனது இனிப்பான பேச்சாற்றலால் பலரையும் மணிக்கணக்கில் கேட்க வைத்து சிந்தனையைத் தூண்டியது இவரது குரல். இந்தக் களப்பணி இவரது தனித்துவமான சாதனை என்றுதான் பதிவாகும். பல்வேறு பெயர்களில் இவரது வாழ்வுத் தடம் மாறியிருந்தாலும் இறுதி வரையிலும் அதனிலும் பின்பும் நீடித்து நிலைபெற்றது 'பெரியார்தாசன்' என்னும் சுட்டுப் பெயர் மட்டும்தான். மனித சிந்தனையைத் தூண்டும் இவரது உரைகள் காலம் தாண்டியும் இணையவலைகளில் பயணத்தைத் தொடரும்.


தொலைவில் புலம்பெயர்வின் நீட்சிப் பயணத்தில் வாழும் நான் கனத்த மனதுடன் தொலைபேசியில் அவரது வீட்டுக்குத் தொடர்பு கொள்கிறேன்.  அழுகையுடன் மகன் வளவன் துக்கத்தைப் பரிமாறிக் கொள்கிறான்.
விடைபெற்றுவிட்டாய்! - விடைகொடுக்க முடியாத தவிப்புடன் நினைவுகளைச்  சுமந்தவர்களாய் 'இறுதி வணக்கம்' செலுத்துகிறோம்.

மேலதிக இணைப்பு: பெரியார்தாசன் ஆவண இணையம் http://www.periyardasan.in/
(இது 30.05.2014 அன்று இணைக்கப்பட்டுள்ளது)
பின் இணைப்பு :

நன்றி : தமிழரங்கம் இணையவலை
-முகிலன்
பாரீசு 19.08.2013


« பாரிஸ் தமிழ்த் திரைவிழா »


செய்திச் சரம் 14

« பாரிஸ் தமிழ்த் திரைவிழா »
புலம்பெயர் ஈழத் தமிழர்களின் முழுநீளத் திரைப்படங்களின் காட்சி மஞ்சரி

நீட்சியுறும் நான்காவது தசாப்தப் புலம்பெயர் ஈழத்தமிழர் பயணத்தின் வெண்திரைப் பதிவுத் தடமாக பாரீஸில் நிகழ்கிறது "பரிஸ் தமிழத்; திரைவிழா". 2013 ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய நாட்களில் பல்வேறு நாடுகளில் விரவிய புலம்பெயர் ஈழத் தமிழர்களின் திரைத்துறைக் கலைஞர்களின் ஏழு முழுநீளத் திரைப்படங்கள் காட்சியாகின்றன. இந்நிகழ்வு திரைக் கலைஞர்கள், திரை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், திரை இரசிகர்கள் ஒன்றுகூடும் சங்கமம் என்கிறார் இவ்வகையான நிகழ்வுகளை ஊக்குவிக்கும் திரைத்துறை ஈடுபாட்டாளர் பரா அவர்கள்.
எதிர்வரும் 23, 24, 25 ஆகிய நாட்களில் உறவு(கனடா), இனியவளே காத்திருப்பேன்(அவுஸ்திரேலியா), சில்லு(கனடா), இருமுகம்(சுவிஸ்), சகாராப் பூக்கள்(கனடா), என்னுள் என்ன மாற்றமோ(யாழ்ப்பாணம்), STAR 67(கனடா) ஆகிய ஏழு முழு நீளத் திரைப்படங்கள் தொடர்ந்த காட்சிகளாக காண்பிக்கப்படவுள்ளன. நிகழ்வின் நிறைவில் படைப்பாளிகள், பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் கருத்துரை அரங்கும் ஏற்பாடாகியுள்ளது.
பாரீஸின் 'குட்டி யாழ்ப்பாணம்" எனவாகவும், 'குட்டி இந்தியா" எனவாகவும் 'தமிழர்களின் சங்கமிப்பு மையம்" எனவாகவும் ஏனைய பல்லினத்தவர்களால் சுட்டப்படும் 'லாச்சப்பல்" பகுதியில் அமைந்துள்ள 'தங்கவயல்" திரை அரங்கில் இந்நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. தனி இருக்கை: ஐந்து ஈரோக்கள், முழுமையான ஏழு திரைப்படங்களின் தொகுதித் தனி இருக்கை: பதினைந்து ஈரோக்கள் என மகிழ்வுடன் தெரிவிக்கிறார் பரா.

தங்கவயல் திரையரங்கம், 2bis, Passage Ruelle, 75018 Paris
மேலதிக விபரங்களுக்கு:


புலம்பெயர்வு வாழ்வின் அடுத்த தலைமுறையினரால் மேலெடுக்கப்படும் நம்மவர் படைப்புகளையும், படைப்பாளிகளையும் தொடர்ந்தும் ஊக்குவிப்போம்.
நல்லதை மனந்திறந்து பாராட்டுவோம்!
தவறுகளை கரிசனையுடன் வெளிப்படுத்துவோம்!!


நிகழ்வு தொடர்பான எனது பார்வைப் பதிவை வாசிக்க (சொடுக்குக):

« பாரிஸ் ஈழத் தமிழ்த் திரைவிழா 2013»


- சலனம் முகுந்தன்
நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!!

பாரீசு 18.08.2013

Monday, 12 August 2013

« லோக்கல் சஞ்சிகை » விற்கப்படுவதில்லை

குஞ்சரம் -14

1.    அன்று

 « லோக்கல் சஞ்சிகை » விற்கப்படுவதில்லை

பதினைந்து வருட இடைவெளியின் பின் எனது அக்காவின் கடைசி மகனின் திருமண அழைப்பு என்னை கொழும்புக்கு வந்தடையச் செய்திருந்தது. காலமும் காலக்கோலங்களும் போட்டிருந்த பிரிவுத் துயர் இடைவெளிகளுக்கப்பால் பொங்கி எழுந்த குடும்ப உறவுப் பாசம் அன்பு அருவியாக மடை திறந்த வெள்ளமெனப் பிரவாகமாகியது. காண்பவரெல்லாம் உறவினராகவும் அதன் நீட்சி தந்த நினைவலைகளால் சிக்குண்டு திணறித்தான் போனேன்.
வந்த இடத்தில் வெளிவரும் சஞ்சிகைகளைத் திரட்டிச் செல்லும் நோக்கில் வெள்ளவத்தையிலிருந்த புத்தகக் கடையில் நண்பியுடன் நுழைகிறேன். இங்கு லாச்சப்பல் போல் எங்குமே இந்தியச் சஞ்சிகைகளால் பளீரிட்டிருந்து கடை. எனது தேடும் கண்களைக் கவனித்ததாலோ என்னவோ விற்பனைப்பெண், "என்ன அக்கா.... வேண்டும்?" என வினவுகிறார்.
"இருக்கிறம்" என்றேன் நான் தேடலைத் தொடந்தவாறே.
"இருக்கிறமா?.........................." விற்பனைப் பெண்ணின் குரலில் ஆச்சரியமான தொனி உயர்ச்சி பெற்றிருந்தது.
"ஓம்..... "இருக்கிறம்"........ அதைத்தான் தேடுறன்" என்கிறேன் அமைதியாக அவரது முகத்தை நிமிர்ந்து பார்த்தவாறு.
"இருக்கிறமா?" குரலில் ஆச்சரியம்; மேலோங்கியிருந்தது.
"அது இங்கிருந்துதானே வெளி வருகிறது" என்றேன் நான்
"இங்கிருந்து வெளிவருகிறதா?............... அப்படியாக இங்கு ஏதுமே இல்லையே" என்ற அவரது முகத்தில் வெவ்வேறு ரேகைகள் மாற்றமடைந்தை அவதானிக்க முடிந்தது.
"ஏன்?............" ஆச்சரியத்தால் வெளிப்பட்ட எனது குரலின் ஏற்றம் எனக்கே ஒருமாதிரித்தான் இருந்தது.
பின் கதவு திறக்க ஒருவர் வருகிறார்... வரும்போதே தெரிந்தது இவர்தான் கடை முதலாளி. "என்ன தேடுறீங்க?" சாந்தமாக
"அதுதான்............ "இருக்கிறம்" என்கிறாள் முதலாளியைப் பார்த்து அந்த இளம்பெண்.
எமது பக்கம் திரும்பிய முதலாளி 'இங்க இப்படியான லோக்கல் சஞ்சிகைகள் விற்பதிலை" என்றார் மிடுக்குடன்.
நான் போட்டிருந்த செருப்பையும் மீறியதாக உள்ளங்காலில் ஏதோ ஊரத் தொடங்க அங்கிருந்து சற்று வேகமாகவே விலகுகிறேன்.
-விமலா (கொழும்பு-ஏப்பிரல் 2010)



இலங்கையில் இருந்து 'இருக்கிறம்' என்ற சஞ்சிகை தனது 60வது இதழை 2010இல் வெளியிட்டிருந்தது. புலம்பெயர் தேசங்களின் கலாச்சார விற்பனை அங்காடிகளில் இப்படியொரு 'இருக்கிறம்' பற்றிக் கேட்டால் கேட்ட எங்களைப் பரிதாபகரமாகத்தான் பார்க்கிறார்கள். என்னத்தைச் சொல்வது பெருமூச்செறிந்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகலவேண்டியாகிறது. 
தற்போது அஞ்சல் (2010) வழியாகக் கிடைத்த இதழினுள் நுழைகையில் இன்னும் பேனா பிடித்தவர்களாக நம் இளையோர் இருக்கிறார்கள் என்பது ஆறுதலைத் தந்தது.
தாம் கற்றுணர்வதை தம் கைகளால் வரையும் எழுத்துச் சித்திரக் கோவைகளாக்கி அதை பலரும் புரியக்ககூடியதாகப் பரவலாக்கும் இந்த எழுத்துலக பேனாச் சித்தர்கள் எல்லாச் சமூகத்தாலும் போற்றப்பட வேண்டியவர்களல்லவா?
0 இப்போது இச்சஞ்சிகை வெளிவருதில்லை. (12.08.2013) 

2. இன்று

இந்தப் புத்தகம் இங்கு தடைசெய்யப்பட்டிருக்கிறது!

புலம்பெயர்வு வாழ்வின் நீட்சி நினைவுகளுடன் வாழும் புதிய தடத்தில் எம்மைப் பயணிக்க வைத்திருக்கிறது. எவ்வளவுகாலத்திற்குத்தான் வெறும் நினைவுகளுடன் மட்டுமே சஞ்சரிக்க முடியும்? நிசத்தையும் நிகழும் மாற்றங்களையும் தரிசிக்கவும் வேண்டும்தானே! இதனால்தான் ஐரோப்பியர்கள் தமக்கான விடுமுறைகளை ஒருபோதும் வீணடிப்பதே கிடையாது. எங்காவது பயணம் செய்துவிடுவார்கள். இப்படியான இடமாற்றப் பயணங்களில் கற்பவைகளும் கேட்பவைகளும் உணர்பவைகளும் அவதானிப்பவைகளுமாக மனித மனத்தை கிறங்கடிக்கவே செய்கின்றன.
இம்முறை கோடைவிடுமுறையை வயதான அம்மாவுடன் கழிக்க ஊருக்குச் சென்றிருந்தேன். அம்மா ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலேயே கூட இருந்து அளவளாவிக் குதூகலித்துவிடவேண்டும். காலம் கடந்தபின் சென்று ‘சடங்குகளில்’ சடப்பொருளாக வீற்றிருந்துவிட்டு பின்னர் புலம்புவதில் என்னதான் இருக்கிறது? வாழும் காலத்திலேயே வாழ்த்துவதையும்! பகிர்வதையும் பெரிதும் விரும்புபவள் நான்.
நாலு வாரங்கள் எப்படியாக கழிந்தன? எனவாக நினைக்கவே ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது. நம்மவர்கள் வீடுகளில் கூடிவாழ்ந்தாலும்.இரண்டு - மூன்று சமையல்களாக பிரிந்தே கிடக்கிறார்கள். வீட்டிலேயே இப்படியென்றால் ஊர் எப்படி இருக்கும்? அந்தக் காலத்திலிருந்து நம்மவர் மனங்களில் ‘கரும்பேன்’களாகி அகலமறுக்கும் சாதியத் துண்டங்களாகத் துருத்திக் கொண்டே இருக்கின்றன ஊர்கள். காணக்கிடைக்கும் கோயில்கள் இதனை பறைசாற்றிய வண்ணம் பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றன. கோயில்களின் அளவிற்கு மக்களில்லாதது இதைப் பதியும்போதும் உறுத்திக் கொண்டே இருக்கிறது.
நாடுதிரும்பலாகும் வேளை நெருங்கும்போது மீண்டும் அவசரம் தானாகவே தொற்றிக் கொள்கிறது. மீண்டும் தேவையான பொருட்களைத் தேடும் படலம் ஆரம்பமாகிறது. இப்பட்டியலில் நூல் தொகுதியும் அடக்கம். பிரபல்யமான புத்தக வியாபாரிகளிடம் இந்தியாவிலிருந்து வெளிவரும் நூல்களுக்கு இருக்கும் முன்னுரிமை நம்மவர்களின் படைப்பகளுக்கு இல்லாதிருந்ததைக் காணுற்றபொது வேதனையாகவே இருந்தது. ஆனாலும் யாழ் பல்கலைக்கு முன்னால் இருக்கும் கடையில் சிலவற்றைப் பெறக்கூடியதாகவும் இருந்தது.
இதில் வாங்கிவர நினைத்த ஒரு புத்தகம் பெரும் அலைச்சலைத் தருமென நான் நினைத்தே இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் கிடைக்காத அந்தப் புத்தகத்தை கொழும்பில் வாங்கிவிடுவதாக நினைத்தேன். இப்புத்தகத்தை கொழும்பில் குமரன் புத்தக இல்லம்தான் வெளியிட்டிருந்தது. பேராசிரியர் இந்திரபாலாவின் புகழ்பெற்ற ஆய்வு நூலான “இலங்கையில் தமிழர் – ஓர் இனக்குழு ஆக்கம் பெற்றதான வரலாறு” என்ற புத்தகம்தான் என்னைப் பாடாய்படுத்தியது.
பாரீசுக்குத் திரும்பம் முதல்நாள் வரையில் கொழும்பில் பிரபல்யமாக விளங்கும் அனைத்து புத்தகக் கடைகளுக்குச் சென்றிருந்தும் இந்நூல் கிடைக்கவேயில்லை. ஆனால் கடைகளில் பணியாற்றுவோர் இப்புத்தகம் பற்றிக் கூறியவை பதிவுலகில் வலம்வரவேண்டியவை.
“அந்தப் புத்தகம் முழுவதும் விற்றுவிட்டது.” என்றார் ஒரு கடைக்காரர்.
“இப்படியொரு புத்தகத்தை நான் கேள்விப்பட்டதே இல்லையே!” என்றார் இன்னொருவர்.
“இலங்கையில் அச்சிடப்பட்ட நூல் இது குமரன் பதிப்பகம் வெளியிட்டது.” என்றேன் நான்.
“குமரன் பதிப்பகம் இந்தியாவிலும் இருக்கிறதுதானே! இப்படியான புத்தகங்களை இந்தியாவில்தான் வெளியிட்டிருப்பார்கள்.” என்றார் அமைதியாக.
“இந்தமாதிரிப் புத்தகம் இங்கு எம்மிடம் இல்லை.” என்றார் இன்னொரு கடைக்காரர்.
நம்பிக்கை குறைந்து செல்ல அந்த கடைசிக் கடைக்காரரிடம் செல்லும்போது நூல் பற்றி விபரமாக எழுதிய சிட்டையைக் கொடுத்து வினவினேன்.
சிட்டையை வாங்கி வாசித்த கடைக்காரர் “இந்தப் புத்தகம் இங்கு தடைசெய்யப்பட்டிருக்கிறது. உங்களால் எங்குமே வாங்க முடியாது” என்றாரே பார்க்கலாம். நான் அசந்துதான் போனேன்.
அந்தப் புத்தகத்தை தடைசெய்ததாகச் சொல்லிட்டு என்னை மேலும் கீழுமாகப் பார்த்தாரே ஒரு பார்வை. அப்பப்பப்பா…..
“அடச் சீ…… இவங்களெல்லாம் ஏன்தான் புத்தகக் கடையை வைத்திருக்கிறாங்களோ?” எனவாக வெம்மிப் புடைத்த மனதுடன் அவ்விடத்தை விட்டகன்றன எனது கால்கள்.
 000 0000

பிற்குறிப்பு:
ஓய்வுபெற்ற பேராசிரியர் இந்திரபாலாவின் புகழ்பெற்ற நூலான
இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு

பதிப்பு ஆண்டு :
பதிப்பு :
முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
பதிப்பகம் :
விலை :
200
புத்தகப் பிரிவு :
பக்கங்கள் :
418

-விமலா (கொழும்பு) யூலை 2013

பதிவு: முகிலன்

பாரீசு 12.08.2013

அறிவுச்சரம் -4 பயோ (BIO) - இயற்கை வேளாண்மைப் பொருட்கள்

அறிவுச்சரம் -4  

பயோ (BIO)  - இயற்கை வேளாண்மைப் பொருட்கள்
(கரிம வேளாண்மை எனவும் குறிப்பிடுகிறார்கள்)

BIO - பயோ என்றதற்கான கலைச் சொல்லாடலில் திணறத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் தோன்றிய இவ்வேளாண்மை உலக உற்பத்தி விநியோகத்தில் கடுகளவானதுதான். இருந்தாலும் கடுகின் காரத்தைப்போல் உறுதியாக உலகெங்கிலும் அதீத கவனத்துக்கு உள்ளாகிறது. இருபத்தொராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் புலம்பெயர் வாழ்வின் நீட்சியைத் தொடரும் எங்களில் பலரின் கண்களில் மின்னலாக தட்டுப்பட்டுகிறது. இந்த BIO - பயோ பொருட்கள் தொடர்பான முதற்கட்ட அறிமுகத்தைத் தரும் நோக்கில் இப்பதிவு அமைகிறது.

தற்போதைய சந்தைகளில் தனியானதொரு கவனத்தை எடுத்துள்ள பயோப் பொருட்கள் பூமியின் சூழல் மானிட நேசிப்பாளர்களின் அதிக அக்கறையைப் பெற்றிருக்கிறது. இன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நுகர்வுவோர் பெருங்கூட்டத்தைக் கொண்டுள்ள பல்பொருள் அங்காடிகளில் பசுமை நிறத்தில் 'AB' அடையளத்துடனான பொருட்கள் புன்முறுவலிடுவதை நம்மில் பலரும் கண்டிருக்கிறோம். எம்மில் சிலர் கொஞ்சம் அதிக விலைப் பட்டியுடன் காணப்படும் இப்பொருட்களில் சிலதைத் தொட்டுப் பார்த்திருக்கவும்கூடும். இன்னும் சிலர் இவற்றைப் பெறும் பயனாளர்களாகவும் இன்று இருக்கவும் கூடும். ஐரோப்பாவில் உணவுப் பொருட்களில் தொடங்கிய பயோ விநியோகம் தற்போது அழகு சாதனப்பொருட்கள் உடுப்புகள் என விரிவாகியுள்ளது.


பெரும் பிரமாண்ட விளம்பரங்களால் கவர்ந்திழுக்கப்படும் நுகர்வோர்களை அதிகமாகக் கொண்ட ஐரோப்பாவில் தொடரும் எமது புலம்பெயர் வாழ்வில் நாம் காணும் இவ்வகையானதொரு சத்தமில்லாத பொருட்களின் வரவும் இருப்பும் ஆச்சரியமானதொன்றுதான். இதுவே எம்மில் பலரது கவனத்தை ஈர்த்ததாயும் அமையலாம். தற்போது சில இடங்களில் தனியாகவே சிறப்பு பயோப் பொருட்களை விற்கும் சந்தைகளும் வாரந்தோறும் நடைபெறத் தொடங்கிவிட்டன.

பயோ வேளாண்மை என்றால் என்ன? என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பயோ வேளாண்மை எனப்படுவது பயிர் சுழற்சி, பச்சை எருக் கலப்பு உரமிடுதல், சூழல் உயிரினம் சார்ந்த பூச்சிக்கொல்லி பயன்படுத்தல், மண்ணின் உற்பத்தித் திறனை தொடர்ந்து பராமரித்தல் கொண்டதான அக்கறையானதொரு பயிற்செய்கையாகும். இந்த நோக்கில், குறுகியகாலத்தில் அதீத உற்பத்தியைக் கொண்டதென முடுக்கிவிடப்படும் இயந்திர முறையிலான விவசாயம் மற்றும் சூழலைப் பற்றிய கவலை கொள்ளாத செயற்கை உரங்களிடல், பூச்சிகளைக் கட்டுப்படுத்தவென பீச்சியடிக்கும் செயற்கை பூச்சிக் கொல்லிகளின் பயன்படுத்துகை, இயற்கையாகவே அமைந்த தாவர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகள், கால்நடைத் தீவன சேர்க்கைகள் மற்றும் மரபியல் ரீதியாக திருத்தம் செய்யப்பட்ட உயிரினங்கள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்கும் அல்லது மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தும் ஒரு விவசாய முறைமையாகும்.

இப்போது பயோ வேளாண்மை என விழிப்பதை இனி 'இயற்கை வேளாண்மை' என விழிப்பதே பொருத்தமாக இருக்கும் என வாசகர்கள் சொல்வது என் மனச் செவிகளுக்கு கேட்கவே செய்கிறது.  "அடடா!, நம் மூதாதையினர் இந்த பயோ உணவுகளயே உண்டு வாழ்ந்தனரே" எனவாக முதற் தலைமுறையாகப் புலம் பெயர்ந்தவர்கள் இப்போது யோசிக்கலாம்.

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (International federation for organic agriculture movement) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.

1. ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மையானது மண், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் நலத்தினை மொத்தமாக கணக்கில் கொண்டு அவற்றை நீடித்த நிலைத்த முறையில் மேம்படுத்தும் வகையில் செயல்படவேண்டும்.

2. உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு
காணப்படும் உயிர்ச்சூழல் நிலைகளின் முறைகள் மற்றும் சுழற்சிக்கேற்ப இயற்கை வேளாண்மை இயைந்து செயல்பட்டு, சுற்றுப்புறசூழலின் வாழ்வியலுக்கு உதவிட வேண்டும்

3. நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு
வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் அவற்றுடன் இயற்கை வேளாண்மை உறவுகளை ஏற்படுத்தி நடுநிலையாக செயல்படவேண்டும்.

4. பராமரிப்பு பற்றிய கோட்பாடு
தற்பொழுது வாழும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு இயற்கை வேளாண்மை கவனமான மற்றும் பொறுப்பான முறையில் செயல்படவேண்டும்.

பூமி என்பது பல்வேறு உயிரிகளின் சுழற்சியைக் கொண்டதான இயற்கையின் தொடர் அசைவு மண்டலம். இதில் வாழும் ஒரு உயர் நிலை உயிரிதான் இந்த மனித இனம். விஞ்ஞானம் என்பது உலக வாழ்வியலைப் புரிய வைக்கும் ஒரு துறைதான். இவ்வகைப் புரிதலால் கிடைக்கும் தெளிவான கண்ணோடங்கள்தான் மானுட வாழ்வின் பாதைகளை நிர்ணயிக்கின்றன.
இந்த பயோப் பொருட்களின் பாவனைகளால் கிடைத்த சில நன்மைகளைப் பதிவிடுகிறேன்.
1. விட்டமின் 'சி' அதிகமாகக் காணப்படுகின்றது.
2. பயோ பால் அருந்துபவர்களுக்கு தோல் நோய்கள் அதிமாக வருவதில்லை.
3.நைட்ரேட், மற்றும் பூச்சிக் கொல்லி எச்சங்கள் ஆகிய வேண்டாதவற்றைப் பொறுத்த வரையில் பயோப் பொருட்கள் தெளிவான நன்மையைக் கொண்டுள்ளன.
4. சுற்றுச் சூழல் பற்றிய அக்கறையானது பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டின் மீதே குவிமையப்படுத்தப்படுகிறது. காரணம், உலகின் மொத்த பூச்சிக் கொல்லிகளில் 16% பருத்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது
5. பயோ உணவானது தொடரப்படும் உணவை விட ஆரோக்கியமானது என்று பொது மக்களால் நம்பப்படுகிறது. பயோ உணவளிக்கப்பட்ட விலங்குகளில் ஆரோக்கியமும், இனவிருத்திச் செயல் திறனும் சற்றே மேம்பட்ட அளவில் காணப்பட்டன. ஆனால், இதையொத்த ஆய்வுகள் மனிதர்களில் நடைபெறவில்லை.

பயோ பொருட்கள் தொடர்பாக வாதங்களும் பிரதி வாதங்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இது தொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ள அபிப்பிராயம் : "அமெரிக்க மொத்த உணவு விற்பனையில் பயோ உணவு விற்பனை ஒரு சதவிகிதம்தான் என்ற போதிலும், மிகப் பெரும் அளவில் நிதியுதவி பெறும் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் (ஹட்ஸன் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டென்னிஸ் அவெரி), பயோ உணவின் மேல் தாக்குதல் நடத்துவது, தொடரப்படும் என்றதானது ‘தற்போதைய வேளாண்மை’ அதைக் குறித்து கவலையுறத் துவங்கி விட்டது என்பதைத்தான் காட்டுகிறது."


2010இல் பாரீசில் மகாஜனா பழைய மாணவர் சங்கம் நடாத்திய நூற்றாண்டு விழாவில் முத்தாய்ப்பான ஒரு நிகழ்வு நடந்தது. ஓய்வின் பின்னரும் புலம் பெயர்ந்த பின்னரும் 'அதிபர்' என அன்பாக அழைக்கப்படும் தன்னியல் வாழ்வு இருப்பினைக் கொண்டவரான 'அதிபர் பொ. கனகசபாபதி' அவர்களுக்கு 75வது அகவை பாராட்டு நிகழ்வு நடந்தது. இதில் தமது அன்பு பரிசாக பயோ பழக்கூடை ஒன்றினை வழங்கினார்கள் பழைய மாணவர்கள். தங்களின் விஞ்ஞான ஆசிரியரும், அதிபருமாகிய பெருமகனுக்கு மகாஜனாவின் பழைய மாணவர்களால் பாரீசில் வைத்து வழங்கப்பட்ட இந்த 'பயோப் பழக்கூடை' நினைவுப் பரிசு ஒரு புதிய சமிக்ஞையைத் தருவதாகவே கட்டியம் கூறுகிறது. மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் நடதாத்தப்பட்ட 'பவள அகவை காணும் அதிபர்' பாராட்டு நிகழ்வானது தகுநல் முன்னுதாரணமாகவே என்னால் அவதானிக்க முடிந்தது.

புலம்பெயர் சூழலில் இப்பொது நிகழ்வரங்கில் வெளிப்பட்ட பயோ பொருட்கள் தொடர்பான மின்னல் கீற்றானது மண்டபத்தைத் தாண்டியதாக பதிவுகத்திலும் தொடர வழிகோலியுள்ளது. இந்த அலையின் அதிர்வுகள் மேலும் தேடல்களுக்கு வித்திடும்.

பிற்குறிப்பு:
இவ்வாக்கம் பாரீசில் வெளிவரும் ‘நிலா’ என்ற சஞ்சிகைக்காக 2010இல் எழுதப்பட்டது. இதன் ஒரு பகுதி இவ்விதழிலும் பிரசுரமாகியது.

1.)   Definition of Organic Agriculture
Organic agriculture is a production system that sustains the health of soils, ecosystems and people. It relies on ecological processes, biodiversity and cycles adapted to local conditions, rather than the use of inputs with adverse effects. Organic agriculture combines tradition, innovation and science to benefit the shared environment and promote fair relationships and a good quality of life for all involved

2.)   பருத்தி:
அயன் மற்றும் துணை அயனப் பகுதிகளில் மட்டுமே விளையும் இழைப் பயிராகும்.செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.
பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பல்கூறு (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பல்கூறுகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திகாய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.
நில நடுக்கோட்டுப் பகுதியில் பருத்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.எகிப்தியர்கள் கி.மு 12000 த்திலேயே பருத்தியை பயன் படுத்தியதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மெக்சிகோ நாட்டு குகைகளில் 7000 ஆண்டு (சுமார் கி.மு 5000) பழமையான பருத்தி துணிகள் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இந்தியாவிலும் மெக்சிகோவிலும் பல்வேறு வகை பருத்தி செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன. பருத்தி, சிந்துவெளிப் பகுதியில் கிமு 5 ஆம் ஆயிரவாண்டுக்கும் கிமு 4 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அங்கு வாழ்ந்தோரால் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. சிந்து வெளியின் பருத்தித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்து இருந்ததுடன், அக்காலத்துப் பருத்தித் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாக இன்றும் தற்கால இந்தியாவில் பருத்தி நூல் நூற்றலும், உற்பத்தியும் முன்னணியில் உள்ளது. கி.மு 1500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்திய பருத்தி பற்றி புகழ் பெற்ற கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் உள்ளது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் செய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106).
நன்றி 



3.)   ஊர் பார்க்கப் போனவரின் எண்ணங்கள்
அண்மையில் புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தொலைவால் தொலையுறும் உறவுகளையும் சுற்றத்தாரையும் ஊரையும் பார்க்கச் சென்று திரும்பிய நண்பனின் துணைவி காவிவந்த தகவல் இன்றைய ‘மாற்றங்கள’ படம்பிடித்துக் காட்டியது. இப்போது யாழில் ‘முள்முருக்கு’ என்ற இனமே அழிந்து போய்விட்டது. தமிழர்களின் திருமணங்களில் ‘பந்தக்கால்’ஆக (மன்னர் அல்லது ஆட்சியரின் அங்கீகரிக்கப்பட்ட இருப்பின் குறியீடாக) இருந்தது இம் மரம். ஆடு மாடு போன்ற வீட்டு மிருகங்களுக்கு நிறைவான பால்தரும் இலைகளை வழங்கும் ஒரு மரம்.

வழமையான தக்காளி இனங்களே இன்று அங்கு இல்லை. ஒரு புதுவிதமான தக்காளிதான் இப்போது பாவனையில் இருக்கிறது. தக்காளி பயிரிடலுக்கு மிக இசைவான வெட்பச் சூழலையுடைய மண்ணில் தக்காளி இல்லை. சுற்றவர கடலால் சூழ்ந்திருந்தும் யாழ்குடாவில் மீன் அண்ணளவாக ஐரோப்பியச் சந்தைகளில் கிடைக்கும் விலைகளுக்கே அங்கு சந்தைப்படுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானது.

வன்னியில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கறவைப் பசுக்களை நவீனமயமாக்கும் நடைமுறை துரிதமாக்கப்பட்டிருக்கிறது. இது காலங்காலமாக எம்மோடு மண்ணில் வாழ்ந்த பசு இனங்கள் இல்லாதுபோகும் புதிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. புதிதாக உருவாக்கப்படும் அதிக பால்தரும் கால் நடைகளுக்கான பிரமாண்டமான புற்களின் பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்படுகிறது.

பருத்தி ஆடைகளை வாங்கப்போயிருந்தபோது « அக்காவுக்கு காட்டன் வேணுமாம்….. எடுத்துக்காட்டு ! » என நையாண்டியுடன் அக்கடையின் கீழ்நிலை விற்பனையாளனிடம் கையை நீட்டினார் கடைமுதலாளி. பூமத்திய கோட்டுக்குக்கு அண்மையில் இயற்கைக் கொடையால் கிடைக்கும் வளமுடைய நாடொன்றின் இன்றைய உலகமயமாதல் போக்கு பெருமூச்சுகளைத்தான் தோற்றுவிக்கிறது.
0000 0000


யாழ் குடாவில் ‘பருத்தி’த்துறை- தீவகத்தில் ‘பருத்தி’யடைப்பு எனச்சுட்டும் ஊர்களின் பெயர்கள் பருத்தியுடன் தொடர்புபட்ட பண்டைய தொன்மத்தைக் காவும் சான்றுகள். எமது வாழ்வில் பருத்தி பயிரிடலை நாம் எம் ஊர்களில் பார்த்ததேயில்லை. ஆனால் எமது வாழ்வின் தொடக்ககாலத்தில் விளைந்த குரக்கன் எள்ளு சணல் நெல் போன்ற பயிற்செய்கை நாம் வளர்ந்து பெரியவர்களாகியபோது விடுபட்டுப்போனது. ‘நைலோனி’ன் வருகையுடன் சணலின் இருப்பே இல்லாது போனது. கோதுமையின் நுழைவினால் மிகவும் தரமான தானியப் பயிரிடுகைகள் மருவிச் சென்றன. புதிய பணப்பயிராக புகையிலை மிளகாய் வெங்காயம் என்பவற்றைத்தான் நாம் காணுற்று வளர்ந்தவர்கள்.

கண்முன்னே கொட்டிக்கிடக்கும் புவிசார் வளங்களுடன் வாழ்ந்த மூதாதையினரின் தொடர்பை அறுத்துவிட்டு நுகர்வுக் கலாச்சார மோகத்தில் அள்ளுண்டு போய் ‘சுடலை ஞானம்’ பெற்றவர்களாக மீளவும் ‘சூழலுடன் இயைந்த இயற்கை வேளாண்மை’ தொடர்பான கரிசனை கொள்ளவேண்டிய காலம் தொலைவில் இருக்கப்போவதில்லை.



-    க. முகுந்தன்

இடுகை : பாரீசு 12.08.2013